திங்கள், 20 நவம்பர், 2017

உயிரே...என் உயிரே! நீ போகுமிடம் சொல் ஆருயிரே!!

கடவுள் குறித்த ஆய்வுகளைக் காட்டிலும் ‘உயிர்’ பற்றிய ஆய்வுகளே மனித குலத்தின் மேன்மைக்குப் பெரிதும் பயன்படுவனவாக அமையும்.
கடவுள் உண்டா  என்னும் கேள்விக்கு இன்றுவரை விடை இல்லாதது போலவே, மரணத்திற்குப் பிறகு உடம்பிலிருந்து, உயிர், ஆவி, ஆன்மா என்னும் இவற்றில் ஏதோ ஒன்று வெளியேறுகிறதா என்ற கேள்விக்கும் விடையில்லை.

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும்’[இன்னொரு உடம்பிலிருந்து விடுபட்ட ஒன்றா அது? சிந்திக்கும் ஆற்றல் பெற்றதா? புதிய உடம்பில் புகும்வரை பரந்த வெளியில் அலைந்துகொண்டிருக்குமா? எங்கு? எங்கெல்லாம்? இப்படி அலையும் உயிர்களின் எண்ணிக்கை என்ன? கணக்கிட்டது யார்? யாரெல்லாம்? இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன].  [http://isha.sadhguru.org/blog/ta/udalil-uyir-nulaiyum-ragasiyam/] என்று அறிவியல் அடிப்படையிலான நிரூபணம் ஏதுமின்றி, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் கதையளந்து, தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

கடவுள் என்று ஒருவர் இருப்பதையோ, சாவுக்குப் பிறகு, மேற் சொன்னவற்றுள் ஏதோ ஒன்று உடம்பிலிருந்து வெளியேறுகிறது என்பதையோ நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள்.

பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோம். பார்த்த எதையும் இனி பார்க்கவே முடியாது; அனுபவித்த எதையும் இனி அனுபவிக்கவே முடியாது. இம்மாதிரியான அவலங்களுக்கு நாம் உள்ளாவது ஏன்? யார் காரணம்? எது காரணம்? இப்படிப் பலவாறாக எண்ணி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தவிர்க்க இயலாதவை.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................

அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன. பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

கரு உருவாகும் போது ஆன்மா என்ற ஒன்று அதனுள் புகுந்து விட்டது; உடம்பு அழியும் போது அதிலிருந்து வெளியேறுகிறது எனச் சொல்வதற்கும் கூட அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை. [இது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். ஆன்மாவும் மறுபிறப்பும் http://kadavulinkadavul.blogspot.com/2011/10/blog-post.html , ஆன்மாவுடன் ஓர் உரையாடல் http://kadavulinkadavul.blogspot.com/2011/11/blog-post_16.html ]

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஆசைதான். ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் ’காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
*******************************************************************************************************************
மிகப் பழைய பதிவு. புதுப்பிக்கப்பட்டது.