அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஆன்மாவும் மறுபிறப்பும்

 பிரபஞ்சப் பொருள்கள் உருவாகக் காரணமான மூலக்கூறுகளைப் பஞ்ச பூதங்கள் என்கிறார்கள்.

இவற்றில், நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு மட்டுமே மனித அறிவால் விளக்கிச் சொல்லப்பட்டவை.

ஐந்தாவது பூதமான ‘வெளி’யை, தாம் விளங்கிக் கொண்டு, பிறர் அறிய விளக்கிச் சொன்னவர் எவருமிலர்.

நான்கு மூலக் கூறுகளும் இயங்கும் இடமாக ‘வெளி’ அமைந்துள்ளது என்று சொல்வதன் மூலம் ஐந்தில் ஒன்றாக அதை ஏற்கலாம்.

வெளியைத் தவிர்த்து, ஏனைய நான்கு மூலக் கூறுகளின் சேர்க்கையால் உருவானவையே அனைத்துப் பொருள்களும் எனக் கொள்வதே அறிவுடைமை.

உடம்பு மட்டுமல்ல, அதனை இயக்குகிற மூளையும் மூலக்கூறுகளால் உருவானதே.

உடம்பானது மூளையால் இயக்கப் படும்போதுதான், அந்த இயக்கத்தை வைத்து, உடம்பில் உயிர் இருப்பதாக நம்புகிறோம்.

மூளை இல்லையேல் இயக்கம் இல்லை; உயிரும் இல்லை.

அதாவது............

‘உடம்பு’ என்பது உண்மை. அதை மூளை இயக்குகிறது என்பது உண்மை. 
மற்றபடி, ‘உயிர்’ என்று ஒன்று இருப்பதாகச் சொல்வதும், உடம்பு அழியும் போது அது வெளி யேறுவதாகச் [ஆவி அல்லது ஆன்மா வடிவில்]  சொல்வதும் பொய்.

மூளையை உள்ளடக்கிய இந்த உடம்பு அழியும் போது நாம் இல்லாமல்
போகிறோம்.

‘நான்’ என்று உணருவதெல்லாம் இந்த மூளையின் செயல்தான்.

மரணத்தைத் தழுவியதும் நம் வாழ்வு முடிந்து போகிறது. அதற்கப்புறம் நாம் எப்போதும் எக்காலத்தும் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணும் போது நம் மனதில் தோன்றும் அளவிறந்த அச்சமே, செத்த பிறகும் ஏதோவொரு உருவில் வாழ்கிறோம் என்னும் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

இந்த நம்பிக்கையின் விளைவாகவே, ஆவி, பேய், பிசாசு, ஆன்மா போன்றவை
ஆறறிவு கொண்ட மனிதனால் கற்பனை செய்யப்பட்டன.

மூலக்கூறுகளின் இணைப்பு இன்றி, தனித்து இயங்கும் எந்த ‘ஒன்றும்’ இந்நாள் வரை அறிவியலாளரால் கண்டறியப் படவில்லை; ‘கடவுள்’ உட்பட.

உடம்பு அழியும் போது, அதிலிருந்து ‘ஆவி’ [சமைக்கப்படும் உணவிலிருந்து
ஆவி வெளியேறுவதைப் பார்த்ததன் விளைவு இது] வெளியேறி வான வெளியில் அலைவதாகச் சொல்வது கலப்படமில்லாத கற்பனை.

அதைப் பார்த்ததாகச் சொல்வதும் பொய்யே.

நமக்குள்ள புலன்களால் பருப்பொருளைத்தான் பார்க்க முடியும். ஆவி ஒரு பருப்பொருளன்று. அதுபற்றி உறுதிபட எவரும் விளக்கிச் சொன்னது இல்லை.

ஏதோ சில நிழல் உருவங்களைப் [அறிவியல் மூலம் அவற்றை விளக்குவது, முயன்றால் சாத்தியப்படும்] புகைப்படம் எடுத்து, அவற்றை ஆவி என்று கதைப்பது குற்றச் செயல் ஆகும்.

மீடியேட்டர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தரையில் குறித்து வைக்கப்பட்ட எழுத்துகளை நோக்கி அவர்களின் கைகளை நகர்த்தி ஆவிகள் பதில் சொல்வதாகக் கதை விடுவது தண்டிக்கப்பட வேண்டிய பெரும் குற்றம்.

மூலக் கூறுகளால் உருவாகாத ஒன்று மூலக் கூறுகளால் ஆன ஒன்றை நகர்த்துவது எவ்வாறு சாத்தியம்?

ஆவியால் ஒரு பொருளை நகர்த்த முடியும் என்றால்...அதே ஆவியால், தான் உயிர் வாழும்போது தனக்குக் கேடு செய்தவரை அடித்துத் துன்புறுத்த முடியுமே? ஒரு ஆவி இன்னொன்றைத் தாக்க முடியுமே? 

ஆவி ஆணாக இருந்தால், ஆவியாக உலவும் பெண்ணை மட்டுமல்ல, உயிர் வாழும் ஒரு பெண்ணைக் கூடக் கற்பழிக்க முடியும்!!

பேய், பிசாசு, பூதம் என்பனவெல்லாம் ஆவியின் வேறு பெயர்களா? அவை இதனின்றும் வேறுபட்டவையா?

இதை ஆராய்வது வீண் வேலை.

ஆவி போன்றவற்றை நம்பாதவர்கள் கூட ஆன்மாவை நம்புகிறார்கள்.

ஆன்மா, கடவுளின் ஒரு கூறு என்னும் ஆன்மிகவாதிகளும் உளர்.

இறைவனிலிருந்து பிரிந்த ஆன்மாக்கள், விண்ணில் அலைந்து திரிந்து, ஏதோ ஒரு நிலையில் பெண்ணின் கருப்பையில்... உயிர் உருவாகும் போது... அதனுள் புகுந்து வாழ்ந்து, உடல் அழியும்போது அதிலிருந்து வெளியேறி, மீண்டும் விண்ணில் அலைந்து திரிந்து.....மீண்டும் கருவில் நுழைந்து பிறந்து.............................

இப்படியாக, கருவில் நுழைந்து நுழைந்து ஆன்மா பல பிறவிகள் எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

கடவுளிடமிருந்து பிரிந்து அல்லது என்றென்றும் கடவுளைப் போல்
தோற்றமும் அழிவும் இல்லாத ஆன்மாக்களின் எண்ணிக்கை என்ன?

லட்ச லட்சமா? கோடிகோடியா? கணக்கில் அடங்காதவையா?

இவை விண்ணில் அலைவது பல்லாண்டு பல்லாண்டுகளா? அலையும் கால அளவு என்ன?

கருவில் நுழைகையில், நான் நீ என்று கடும் போட்டி நிலவுமே? முறை வைப்பா? முன்னுரிமையா? மிகக் கடுமையான போர் நிகழுமா!?

எப்படி நுழைகின்றன?

பெண்ணுறுப்பில் பாயும் கோடிக் கணக்கான உயிரணுக்களுடன் தானும் ஒன்றாக ஆன்மா நீந்திச் செல்லுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்மாக்களும் நீந்திச் செல்வதும் சாத்தியமா?

ஆற்றல் மிக்க , ஆணின் ஓர் உயிரணு பெண்ணின் கருமுட்டையில் பிரவே சிக்கும் போது, வெற்றி வீரனான ஓர் ஆன்மாவும் உள் நுழையுமா?

ஆன்மா ஓர் உடம்புக்குள் நுழைவது, விதிப்படியா, இல்லை, தன் இச்சைப்படியா?

தன் விருப்பப்படி என்றால், உடம்பு துன்பத்துக்கு உள்ளாகும் போதோ, அதன்மீது சலிப்பு ஏற்படும்போதோ அது வெளியேறிவிடலாமே? உடம்பு அழியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

உடம்பை இயக்குவது முழுக்க முழுக்க மூளையின் வேலைதானே?

அவ்வாறாயின், ஆன்மாவுக்கு எந்தவொரு வேலையும் இல்லையா?

உடம்புக்கு நேரும் இன்ப துன்பங்களை அனுபவிப்பது மட்டுமே அதன் கடமையா?

ஆன்மாக்களுக்குள்ளேயும் பால் வேறுபாடு உண்டா?

ஓர் உடம்புக்குள் நுழைந்த பின்னரே அது நிர்ணயிக்கப் படுகிறதா?

பக்த கோடிகளே! ஆன்மிகவாதிகளே! இவ்வினாக்களை...இம்மாதிரி இன்னும் பல வினாக்களை எழுப்பி விடை காண நீங்கள் முயன்றது உண்டா?

இல்லைதானே?

அப்புறம் ஏன் யாரோ சிலர்..... ஆன்மா, ஆவி, பேய், பிசாசு என்று கட்டிவிட்ட கதைகளை நம்பி, அளவற்ற மூட நம்பிக்கைகளுக்குப் பலியாகி, மகிழ்ச்சியாக வாழ வேண்டிய கொஞ்ச நாட்களையும் வீணடிக்கிறீர்கள்?!

இனியேனும் சிந்திப்பீர்களா?

***************************************************************************************************************




11 கருத்துகள்:

  1. ஆஹா அருமை அருமை, உயிர் உடலில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்பவர்கள், செடியின் உயிர் எங்குள்ளது என்று திருப்பி கேட்டால் வாயை மூடி கொள்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே
    நல்ல பதிவு
    பின் பற்றுவோர் இணைப்பு பதிவில் வைக்கவும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜீவா.
    நன்றி சார்வாகன்.
    தங்களின் நல்ல மனங்களுக்கு நான் என்றும் கடன் பட்டவன்!

    பதிலளிநீக்கு
  4. நல்லா எழுதி இருக்கிறீர்கள். இன்னும் கோர்வையாக இருந்தால் நன்று.

    பதிலளிநீக்கு
  5. கோர்வையாக...இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்பதை நான் உணர்கிறேன் கோவி.கண்ணன்.
    இடுகையிட்டு நீண்ட நாட்கள் ஆனதால்
    அவசர கதியில் எழுதிப் பதிவு செய்துவிட்டேன்.
    தங்கள் பாராட்டு என்னைச் செம்மைப் படுத்தும். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

    பதிலளிநீக்கு
  7. சிந்தனையை விரிவாக்கும் பதிவு. ஆன்மாக்களை பற்றி மாறுபட்ட கோணத்தில் வேறு எங்கும் படித்ததாக நினைவில்லை. தொடர்ந்து இந்த சப்ஜெக்டில் நீங்கள் எழுத வேண்டும் என கோருகிறேன்.

    (நானும் உங்கள் ஊர் தான். பக்கத்து தெருவில் தான் குடியிருக்கிறேன். ஓரிருமுறை உரையாடியுமிருக்கிறேன்).

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அரூபன் அவர்களுக்கு,
    தற்செயலாக, தங்களின் ‘அரூபன்’ என்னும் வலைப் பதிவில், 2009 இல் தாங்கள் எழுதிய ‘நாமக்கல்லின் இலக்கிய முகம்’என்னும் பதிவைப் பார்க்க நேர்ந்தது.

    அதில் தாங்கள் குறிப்பிட்டது போல, குமுதத்தில் ‘காமா சோமா’ ஒரு பக்கக் கதை எழுதும் தரமற்ற எழுத்தாளன் நான்.

    இலக்கிய அந்தஸ்துக்காகத் துண்டு போட்டுக் காத்திருக்கும் மட்டமான ஆள் நான்.
    அறிஞரான தங்களின் பாராட்டை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை.

    மன்னியுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள பரமசிவம் சார்,

    முதற்கண் தங்கள் மனம் புண்பட்டமைக்கு மன்னிக்கவும்.

    அந்தப் பதிவில் இருந்த சில வரிகள் தாங்கள் குறித்து எழுதியதாக பொருள்பட புரிந்துகொண்டுவிட்டீர்கள் போலுள்ளது. அது தங்கள் குறித்து எழுதியது அல்ல. நீங்கள் என்ன பத்திரிக்கையில் எழுதுகிறீர்கள் என்பதுகூட அதை எழுதிய சமயம் எனக்குத் தெரியாது. அந்த விமர்சனத்தை நான் எழுதக் காரணம் நான் பழகிய சில எழுத்தாளர்களும், அவர்களின் பேச்சுக்கள் வழியாக நாமக்கல்லின் சமகால இலக்கிய வரலாறு குறித்து எனக்கு கிடைத்த சித்திரமும் தான். நாமக்கல்லில் இலக்கிய எழுத்தாளர்களாக இருப்பவர்கள் பற்றிய அறிமுகத்திற்காக நான் அளவளாவியபோது அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட விமர்சனமே அப்போது எனதுமாகிப்போனது.

    அதுவும்கூட வாசிப்பின் ஆரம்ப நிலையில் நான் இருந்தபோது எழுதியது அது. இப்போது எழுதியிருந்தால் நான் நேரடியாக கண்டுணராத தகவல்களை தவிர்த்திருப்பேன்.

    அதை நான் ஒரு சிறிய வட்டத்திற்காக தனிப்பட்ட சுற்று மடல் ஒன்றில் எழுதியிருந்தேன். அங்கே நான் எழுதியவைகளையெல்லாம் எதற்கும் இருக்கட்டுமே என்று அந்த வலைப்பதிவில் ஒரு சேமிப்பாக போட்டுவைத்தேன். அந்த வலைப்பதிவின் முகவரியை கூட யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. நீங்கள் எப்படியோ தேடியெடுத்துவிட்டீர்கள்.

    அந்த வலைப்பதிவை நான் எந்த திரட்டியிலும் இணைக்கவுமில்லை. அது முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒரு பதிவு. ஒரு மறுமொழிகூட இருக்காது.

    தங்கள் மனம் புண்பட்டதன் காரணமாக அந்தப் வலைப்பதிவு மொத்தத்தையுமே இப்போது நான் தூக்கிவிட்டேன். பொதுவெளியில் இனி அது இருக்காது. சும்மா ஒரு சேகரமாக வைத்திருந்ததுதான் என்பதால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

    ஆன்மா குறித்த ஒரு ஆழமான சிந்தனையை முதிர்ந்த எழுத்துக்களின் வழியாக பதிவு செய்திருக்கும் தங்களை நான் பாராட்டியது மனப்பூர்வமானது. தங்களின் எழுத்தாக நான் படிப்பதும் இதுதான் முதல். இனியும் தொடர்ந்து படிப்பேன்.

    இன்று நான் படித்து கருத்து பகிர்ந்து கொண்டதற்கும், அன்று நான் யாரோ சொல்ல கேட்டு எழுதியதற்கும் கிஞ்சித்தும் சம்மந்தமில்லை என்பதையும் என் வருத்தங்களையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    அரூபன்

    பதிலளிநீக்கு
  10. அன்பு நண்பர் அரூபனுக்கு,
    தங்கள் விளக்கம் கண்ட பிறகு... அவசரப் பட்டுவிட்டேனே என்று என் மனம் வருந்துகிறது.
    தங்களின் பாராட்டு என்னை மகிழ்விக்கிறது; உற்சாகப் படுத்துகிறது.
    நான் நன்றி மறவாதவன்.

    பதிலளிநீக்கு