செவ்வாய், 17 மார்ச், 2015

ஐயோ பாவம் கடவுள்! பாடாய்ப்படுத்தும் மதவாதிகள்!!


‘கடவுள் உலகைப் படைத்தது ஏன்? எப்போது? எவ்வாறு?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியை அடியோடு கைவிட்டுவிட்ட மதவாதிகள், ‘எத்தனை நாட்களில் படைத்தார்?’ என்ற ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விலாவாரியாகப் பதிலும் சொல்லுகிறார்கள்; மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் வசைமாரி பொழிகிறார்கள்; மறுப்பவர்களின் தலைகளுக்கு ‘விலை’ வைக்கிறார்கள்.

கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]
கடவுளைப் போலவே மனிதர்களாகிய நாமும், ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கலாமாம். கடவுளின் வழியில் மனிதன்! இது எப்படியிருக்கு?

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் நாட்களும் நேரங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனே இல்லாத நிலையில், ஆறு நாள் என்று கணக்கிட்டது எப்படி? முதலில் கதை கட்டியவர் கொஞ்சமேனும் சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆறு நாட்கள்! அது என்னய்யா கணக்கு?

விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றல் வாய்ந்த கடவுளால், ஆறே ஆறு மைக்ரோ...மைக்ரோ...மைக்ரோ நொடிகளில் [இப்படி நாம் வரையறுப்பதும் தவறுதான்] தாம் நினைப்பதையெல்லாம் படைத்துவிட முடியுமே. அப்புறம் எதற்கு ஆறு நாள் ஏழு நாள் எல்லாம்?

ஆறு நாள் குழறுபடியைப் புரிந்துகொண்ட மதப் பற்றாளர்கள்,  “ஆறு என்பது அடுத்தடுத்த கட்டங்களே தவிர, ஆறு நாட்கள் அல்ல; ஆறு கட்டங்களில் லட்சோப லட்சம் ஆண்டுகள் உழைத்து[...millions of years when God created the world...] அவர் தம் செயலைச் செய்து முடித்தார்” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

உலகங்களை[பிரபஞ்சத்தை]க் கடவுள் படைத்தார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு இந்த வழவழா கொழகொழா வியாக்கியானம் என்பது நமக்குப் புரியவே புரியாத புதிராக இருக்கிறது!
பாவம் கடவுள்! அப்படி ஒருவர் இருந்தால், இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, திக்குத் தெரியாத வெட்ட வெளியில் பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருப்பார் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.


இந்த ஆறு நாள் கணக்கு குரானிலும் இடம் பெற்றிருக்கிறது

அந்த ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது அது. ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் 
தேவைப்பட்டன என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches 
that God created "the heavens and the earth" in six days.]

உயிர்களே படைக்கப்படாத நிலையில், சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுள் படைத்ததன் பொருள் என்ன?

தான் படைக்கவிருக்கும் உயிர்களில் புண்ணியம் செய்பவை சொர்க்கத்திற்கும் பாவம் செய்பவை நரகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?

ஆக, பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபடும் வகையில் உயிர்களைப் படைப்பதென்று கடவுள் முடிவெடுத்த்திருக்கிறார்; படைத்திருக்கிறார்.

கடவுளின் இந்தச் செயல், கடும் கண்டனத்திற்கு உரியதல்லவா?

இந்து மதவாதிகளைப் பொருத்தவரை ஆறு, ஏழு என்று கடவுளுக்குக் ‘காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்துவிட்டார்கள்.

முட்டை வடிவிலான உலக உருண்டையிருந்தே["Egg-shaped cosmos"]
அனைத்து உலகங்களும்[பிரபஞ்சம்] விரிவடைந்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றிப்  பிரமானந்த புராணம்[Brahmanda Purana] விரிவாகப் பேசுகிறதாம். [Wikipedia]

கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளியாவதைப் பார்த்த அனுபவம் இவர்களை இப்படிக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையால் புதிய உயிர் தோன்றுவது போல, பூமிப் பெண்ணும் ஆகாய ஆணும் புணர்ச்சி செய்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்று நம்பினார்களே, அது போல.

அந்த நம்பிக்கையின் விளைவாகச் ‘சிவலிங்கம்’ உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அது கடவுளாக வழிபடப்படுகிறது.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும்  அறிவு பெற்றிருந்த காலத்தில், உலகத் தோற்றம், கடவுள், படைப்பு பற்றியெல்லாம் மனிதன் மேற்கண்டவாறு மனம் போன போக்கில் அனுமானம் செய்ததில் தவறேதும் இல்லை. இந்த அறிவியல் யுகத்திலும் அவர்கள் சொல்லிவிட்டுப் போன கதைகளைத் திரும்ப மேடை ஏறி முழங்குவதும் ஏடுகளில் எழுதுவதும் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்ட மதவாதிகள் ஆராய வேண்டும்.

=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக