எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 22 பிப்ரவரி, 2020

மூடர்களும் ஊடகக்காரர்களும்!

எங்கேனும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிந்தால், ‘இன்ன ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி, மரத்துக்குப் பூஜை செய்து வழிபடுகிறார்கள்’ என்று செய்தி  சொல்லி/ வெளியிட்டுப் பத்திரிகையின் விற்பனையை அல்லது, தொ.கா.வின் பார்வையாளர்களை அதிகரிக்க முயல்கிறார்கள் நம் ஊடகக்காரர்கள்.

வேப்பங்காயைப் பறித்தால் பால் சிந்துவதைக் கண்கூடாகக் காணலாம். அந்தப் பால்தான் அதிக அளவில் ஊறும்போது மரத்தின் கிளையிலும் அடிமரத்திலும் வெளிப்பட்டு வழிகிறது.

இது தெரிந்திருந்தும், வேப்ப மரத்தில் பால் வடிவது ஓர் அதிசயம் என்பதாகச் செய்தி வெளிட்டு, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் தடுக்கிறார்கள் ஊடகவியலார். மூடர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தால் இவர்களின் காட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும்!

“வேப்ப மரத்தில் பால் வடியாமல் தேனா வடியும் முட்டாள்களே?” என்று கேட்டு இவர்களைச் சாடுவதற்கு இங்கு யாரும் இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.

அரசும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

ஊடகங்களின் ஆதரவு இவர்களுக்கு நிரந்தரத் தேவையாக இருப்பதுதான்!
========================================================================