ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

‘ஊமைக் கனவுகள்’ என்னும் பதிவுலக நண்ப ருக்கு என் நன்றி!

19.02.2015 நாளிட்ட ‘பதிவர்களுக்கு என் பணிவான பத்து பரிந்துரைகள்’ என்னும் என் பதிவின் தலைப்பில், ‘ப்’என்னும் ஒற்று மிகுமா மிகாதா என்பது குறித்து, நண்பர் ஊமைக் கனவுகளுக்கும் எனக்கும் விவாதம் இடம்பெற்றது.

தமிழ் இலக்கணத்துடனான என் தொடர்பு  பல ஆண்டுகளாக அறுபட்டிருந்தமை; முன்வைத்த கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்னும் பிடிவாதம்; உரிய நேரத்தில், தவற்றை ஒத்துக்கொள்ளும் பெருந் தன்மை இல்லாமை; போதிய இலக்கண அறிவு வாய்க்கப் பெறாதது........

என்றிவ்வாறான காரணங்களாலும், எனக்கே புரியாத வேறு சில காரணங்களாலும் ‘பத்து பரிந்துரைகள்’ என்று நான் குறிப்பிட்டது சரியே என்று வாதம்[முரட்டு வாதம்!!!] செய்தேன். வாதம் செய்வது முறையன்று என்பது புரிந்த பிறகும் சப்பைக்கட்டுகள் கட்டி, ஊமைக் கனவுகளின் நேரத்தை வீணடித்தேன்.

நான் பெற்றிருந்த பழைய இலக்கண அறிவை மிக முயன்று புதுப்பித்து ஆராய்ந்ததில், ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதுவது பிழை; ஊமைக்கனவுகளின் வாதத்தின்படி, ‘பத்துப் பரிந்துரைகள்’ என்று எழுதுவதே இலக்கண மரபாகும் என்பதை அறிய முடிந்தது. ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதுவது பிழை என்பதை ஏற்கிறேன்.

இதனை அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

[//பசி (க்கு கோபம்) வந்தால் பற்றும் அறுந்து படும்?!...// என்று ஊமைக் கனவுகளுக்குப் பின்னூட்டம் இட்டு, நான் எத்தனை பலவீனமான ஆள் என்பதைப் பலருக்கும் புரிய வைத்த ‘அன்பே சிவம்’ அவர்களுக்கும், உளவியல் ரீதியாக என் அடிமனதைப் படித்து, என் பதிவின் 9, 10 பரிந்துரைகளில் பொதிந்துள்ள நகைச்சுவை முரணை வெகுவாக ரசித்த சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.]

‘ஊமைக் கனவுகள்’ அவர்களுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்கிறேன்.....

நன்றி ஊமைக் கனவுகள்.... நன்றி.....மிக்க நன்றி.
=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக