எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

திங்கள், 16 ஜூன், 2025

“வாள் வேண்டாம்; நூல் கொடுங்கள்”... பகுத்தறிவாளன் கமல்காசனுக்குப் பாராட்டுகள்!!!

அரசியல்வாதிகளுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில்[தேவையோ அல்லவோ] அவர்களைக் கவுரவிக்கும் வகையில், ‘வீரவாள்’ பரிசளிப்பது வழக்கத்தில் உள்ள ஒரு பழக்கம்.

அன்று போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதமான இதைப் பரிசாக வழங்குவதன் நோக்கம் யாது என்பது பரிசளிப்பவனுக்கும் தெரியாது; பெறுபவனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு வகையில், கொலை ஆயுதமான இதைப் பொது மேடையில் கையாளுவதே குற்றச் செயலாகும். நீண்டதொரு வாளால் பிறந்த நாள் ‘கேக்’ வெட்டுகிற ‘ரவுடிகள்’ கைது செய்யப்படுவது இதனால்தான். 

வாளைப் பரிசாக வழங்குகிறவனும் பெறுகிறவனும்கூடக் குற்றவாளிகள்தான். காவல்துறை இவர்களை ஏன் கைது செய்து சிறைப்படுத்துவதில்லை என்பது விடையில்லாத கேள்வி.

வருங்காலத்தில், வாளுக்குப் பதிலாக, ஒரு பெரிய வெடிகுண்டைத் தொண்டர்கள் தங்களின் தலைவனுக்கு வழங்கிப் பெருமிதப்படுவதும் நடக்கக்கூடும்.

இந்தவொரு வாள் பரிசளிக்கும் நிகழ்வு, மாநிலங்களவை[ராஜ்ய சபா]உறுப்பினராகத் தேர்வான கமல்காசன் அவர்களுக்கான பாராட்டு விழாவிலும் இடம்பெற்றுள்ளது. பரிசாக அளிக்கப்பட்ட அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார்[நூல் வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்; வாள் வழங்கியவரின் மனம் நோகாமலிருக்க, வாளுடன் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளார்].

வாளைப் பரிசாக வழங்குவது அநாகரிகமானது என்பதைப் பகுத்தறிவாளன் கமல் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதே இதற்கான காரணம்.

கமல்காசன் பகுத்தறிவு பேசுவது வெறும் பகட்டுக்காக அல்ல; பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளன் அவர் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்த நிகழ்வு[தன்னை ஆதரிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை].

‘சொல் வேறு செயல் வேறு’ என்னும் பழிச்சொல்லுக்கு இடம்தாராத வகையில் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கமல்காசனை மனதாரப் பாராட்டுகிறோம்.

வாழ்க பகுத்தறிவாளன் கமல்காசன்! தொடர்க அவரின் பொதுப்பணி!!

#நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன் தனது ராஜ்யசபா எம்.பி. வேட்புமனுவைக் கொண்டாடும் ஒரு கட்சி நிகழ்வில் ரசிகர்கள் அவருக்கு வாளைப் பரிசளித்தபோது அவர் பொறுமை இழந்தார். வீடியோவில் பதிவான இந்த சம்பவம், ஹாசன் முதலில் வாளைப் பிடிக்க மறுத்து, இறுதியில் செல்ஃபிக்குப் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில் புத்தகங்களைப் பரிசாகத் தேர்வுசெய்யுமாறு எம்.என்.எம் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது# - செய்தி.