அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கடவுளும் ஒரு கருணைக் கொலையும்

’மரணம்’ என்பது கடவுள் தந்த வேதனை. வலி உணராத மரணம் மனித குலத்தின் சாதனை!
     
கடவுளும் ஒரு கருணைக் கொலையும்! [சிறுகதை]

வீடு திரும்பிய தந்தையும் தாயும் தன்னருகே வந்து அமர்ந்ததும் சந்திரன் கேட்டான்: “வக்கீலைப் பார்த்தீங்களா?”

அவன் அப்பா மட்டும் “இல்லை” என்பதாகத் தலையாட்டினார்.

“அப்படீன்னா இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீங்க?”

அப்பா தலை குனிந்தார். அம்மா சொன்னார்:  ”கோயிலுக்கு”.

“எதுக்கு?”

“ஏம்ப்பா இப்படிக் கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கிறே? உனக்கு நோய் குணமாகணும்னு வேண்டிக்கத்தான் போனோம்”.

“வேண்டுதல் நிறைவேறிச்சா?”

“நிறைவேறுதோ இல்லையோ, ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைக்குது”.

“நிம்மதி கடவுளை வேண்டிக்கிற உங்களுக்குத்தான். தீராத நோயால் பாதிக்கப்பட்ட எனக்கல்ல. என் உடம்புல எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைஞ்சுட்டுது. நோவு அதிகரிச்சிட்டே போகுது. டாக்டர்கள் கை விட்ட என்னை எந்தக் கடவுளும் காப்பாத்தாதுன்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்காம, கடவுள் கைவிட மாட்டார் மாட்டார்னு கண்ட கண்ட கோயிலுக்கெல்லாம் போறீங்க; தலைமுடி வளர்த்துத் தாடி மீசை வெச்சவன் காலில் எல்லாம் விழறீங்க. இந்த நிலைமை நீடிச்சா நான் சாகறதுக்குள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடும்”.

”அப்படியெல்லாம் சொல்லாதேப்பா” குரல் தழுதழுக்கச் சொன்னார் அப்பா.

”சொன்னா என்ன? நடக்கக் கூடாததையா நான் சொன்னேன்? புருஷனை இழந்த எதுத்த வீட்டு அமுதா மாமியோட பத்து வயசுப் பொண்ணு ஆறு மாசம் முந்தி காணாம போச்சு. போலீசில் சொன்னாங்க; எல்லாப் பேப்பரிலும் விளம்பரம் குடுத்தாங்க. பொண்ணு திரும்பக் கிடைக்கல.  கண்ட சாமியார் காலில் எல்லாம் விழுந்தாங்க. கோயில் கோயிலா அலைஞ்சாங்க. பலன் இல்ல. மனசைத் தேத்திக்கணும். செய்யல. அது அவங்களால் முடியலேன்னும் சொல்லலாம்.  ”கடவுளே என் மகளை மீட்டுக் கொடு..... மீட்டுக் கொடுன்னு சோறு தண்ணி இல்லாம தியானத்தில் மூழ்கிக் கிடந்தாங்க. என்னாச்சு?..............

..............’என் மகளைப் பார்த்தீங்களா, பார்த்தீங்களா சாமி’ன்னு எதிர்ப்பட்டவங்களை எல்லாம் விசாரிச்சுட்டுப் பைத்தியமா அலைஞ்சிட்டிருக்காங்க...........”

கொஞ்சம் இடைவெளியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சந்திரன் தொடர்ந்தான். “நீங்களும் அந்த நிலைக்கு ஆளாயிடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேரையும் வக்கீல்கிட்டே அனுப்பினேன்” என்றான்.

அம்மா சொன்னார்:  “வக்கீல் மூலமா, உன்னைக் கருணைக் கொலை செய்யக் கோர்ட்டில் அனுமதி வாங்கணும்னு சுலபமா சொல்லிட்டே. இதுக்கு உன்னப் பெத்த எங்க மனசு இடங்கொடுக்குமா ராசா?”

”இடம் கொடுக்காதுதான். வேற வழி இல்லியேம்மா. இப்போ ஓரளவுக்கு நோவைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கு. நாளாக ஆக, தாங்குற சக்தி குறையக் குறைய வேதனை அதிகமாகும். அப்புறம் அணு அணுவா துடிச்சிச் சாக வேண்டிய பரிதாப நிலைக்கு நான் ஆளாயிடுவேன். அப்படியொரு நிலைக்கு ஆளாகாம இப்பவே நிம்மதியாச் செத்துடணும்னு ஆசைப்படுறேன். என் விருப்பத்தை இனியாவது நிறைவேத்தப் பாருங்க...........

...........அப்பா, அம்மா வேண்டாம். ஒரு தாய் மனசு எந்த வகையிலும் இதுக்கெல்லாம் சம்மதிக்காது. நீங்க மட்டுமே போங்க. நான் சொன்ன லாயரைப் பாருங்க. செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சி முடிங்க. நான் சீக்கிரமா சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்” என்றான் சந்திரன்.

பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயந்திர கதியில் நகர முற்பட்ட தந்தையிடம்,  ”அப்பா, மனசு மாறி மறுபடியும் கோயிலுக்குப் போயிடாதீங்க. என்னை நிம்மதியா சாகடிக்க டாக்டர்களால்தான் முடியும் ; கடவுளால் முடியாது” என்றான் மெல்லிய வேதனை கலந்த புன்முறுவலுடன்.

அதிகம் பேசிவிட்ட களைப்பில் கண்மூடி மயக்கத்தில் ஆழ்ந்தான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




6 கருத்துகள்:

  1. //என்னை நிம்மதியா சாகடிக்க டாக்டர்களால்தான் முடியும் ; கடவுளால் முடியாது” என்றான் மெல்லிய வேதனை கலந்த புன்முறுவலுடன்.//

    அருமையான ஒரு சிறு கதை.. இல்லாத ஒன்றினை நம்பி இருப்பவர்களை துன்புறுத்துவதை விட.. இருப்பதை நம்பி வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவமே.. ஞானிகளுக்கெல்லாம் ஞானியின் புரிதலாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. கதையின் அடிநாதத்தை எடுத்துரைத்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி செல்வன்.

    பதிலளிநீக்கு
  3. கடவுள் என யாரும் இல்லைதான்.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலையில், மரணப்பிச்சை கேட்கும் தமது பிள்ளையின் நிலைக்கு எதிரில் நிராயுதபானியாக உள்ள பெற்றோர்கள் தையும் செய்ய தயாராக உள்ளனர். மருத்துவமும் விஞ்ஞானமும் கை விர்த்து விட்டது. பெத்த மகனின் பரிதாபம் ஒரு பக்கம். ஆபத்துக்கு பாவமில்லை என்பது போல், இவ்விடத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள "கடவுளை" வேண்டிக் கொள்வதை இவ்விடத்தில் நாம் மதிக்க வேண்டும்.
    இதற்கு அப்பால், கருணை கொலை என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய வேறொரு விடயம்.
    உண்மையில் சொல்லப் போனால், உங்கள் பதிவை படித்து சற்று அதிர்ந்து உறைந்தே போனேன். எனக்கென்னவோ நாத்திகத்தை விற்பனை ஆக்குவதற்கு எளிய பாமர மக்களின் துயரங்களை மூலதனமாக உபயோகிக்கிறீர்களா என அதிர்ச்சியாக உள்ளது. என்னதான் நாம் நாத்திகராய் இருந்தாலும், இளகிய மனம் மற்றும் சகிப்புத்தன்மை நமக்கு அவசியம் தேவை என நம்புகிறேன்.
    ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் அப்பால் "மனிதம்" என்ற ஒரு உண்ணதம் இருக்கவே செய்கிறது
    பகிர்வுக்கு நன்றி.
    (தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்).

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு சிறுகதை...
    அருமையான முடிவு ஐயா...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...



    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி மாசிலாமணி.

    நான் பதிவுகள் எழுதுவதன் நோக்கத்தை தாங்கள் அறிவீர்களா? அதற்கு அத்தனை பதிவுகளையும் படிக்க வேண்டும். செய்வீர்களா?

    கடவுளின் ‘இருப்பு’ இதுவரை நிரூபிக்கப் படவில்லை. அப்படி ஒருவர் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவரால் மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் எந்தவொரு நன்மையும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நம்புபவன் நான். சொல்லப்போனால், கடவுள் நம்பிக்கையால் பெரும் எண்ணிக்கையிலான உயிர்ப்பலிகளும், பேரழிவுகளும் நேர்ந்திருக்கின்றன என்பதே உண்மை. அளவற்ற மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகி, எண்ணற்ற துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    இந்த உண்மைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதே என் பதிவுகளின் நோக்கம்.

    ‘கடவுளும் ஒரு கருணைக் கொலையும்’ என்னும் இப்பதிவைப் பொருத்தவரை, எத்தகையதொரு கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிட்டாலும், கடவுளைத் தேடி அலையாமல், துன்பத்தைத் தாங்குவதற்கான மனோபலத்தைப் பெற்று, அத்துன்பத்தால் மரணம் சம்பவிக்குமென்றால்,மன நிம்மதியுடன் அதை எதிர் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்று வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.புரிந்து கொள்வீர்களா?

    பாமர மக்களின் துன்பங்களை நாத்திகம் பரப்புவதற்காக நான் பயன்படுத்துகிறேன் என்கிறீர்கள்.

    உண்மைதான்.நான் பதிவுகள் எழுதுவதே அதற்காகத்தானே?

    ஆனால், அதில் பணம் சம்பாதிப்பது, புகழ் பெறுவது போன்ற தன்னல நோக்கம் எதுவுமில்லை.

    என் தமக்கையின் மகன், புற்று நோய்க்கு ஆளாகி, இரண்டு மாதங்கள் போல, இரவு பகலாய் நரக வேதனையில் துடிக்க, “கடவுளே....கடவுளே....”என்று என் தமக்கை ஊண் உறக்கம் இல்லாமல் அழுது அரற்றுவதைப் பார்த்துப் பார்த்து
    வேதனையின் உச்சத்தைத் தொட்டவன் நான்.

    இப்படி என் வாழ்வில் எத்தனையோ துயர அனுபவங்கள்.

    எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும்,பிறருக்கும் நேர்ந்த துன்பங்களை நம்மில் பெரும்பான்மையோரால் நம்பப் படுகிற கடவுள் ஒரு போதும் போக்கியதில்லை.

    கடவுள் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி, அப்படியொருவர் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை; அப்படியொருவர் இருந்தாலும் அவர் நல்லவரல்ல என்று நான் முழுமையாக நம்பியதற்கு இதுவும் ஒரு காரணம்.

    கடவுள் நல்லவரில்லை என்பது மட்டுமல்ல; உயிர்கள் துன்பம் அனுபவிக்கக் காரணமானவரும் அவரே என்பது என் நம்பிக்கை.

    நிரூபிக்கப் படாத, எந்த வகையிலும் உயிர்களுக்கு உதவிகரமாக இல்லாத இந்த ஆளை[கடவுளைத்தான் சொல்கிறேன்] மனிதர்கள் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகிறார்களே என்ற ஆத்திரமும்.....கடும் சினமும்தான் என் பதிவுகளில் நான் கடவுளைச் சாடுவதற்கான காரணங்கள் ஆகும்.

    உங்களுக்கு அவர் உதவுகிறார் என்று நீங்கள் நம்பினால், அவரைப் புகழ்ந்து பேசுங்கள்; எழுதுங்கள். நான் தடையாக இருப்பேனா என்ன?!

    இளகிய மனம், சகிப்புத்தன்மை,மனிதம் போன்றவை தேவை என்கிறீர்கள்.

    அவையெல்லாம் தேவையில்லை என்கிறேனா நான்?

    அந்த நற்பண்புகள் எனக்கு இல்லை என்கிறீர்களா மாசிலாமணி?! சிந்தித்துத்தான் சொன்னீர்களா?

    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, கடவுள் என்று ஒருவர் தேவையே இல்லை; அனவரிடமும் நற்குணங்களும் நற்செயல்களும் இருந்தால் போதும் என்றுதானே என் பதிவுகள் வலியுறுத்துகின்றன? பதிவுகளைப் படித்துத் தெரிந்து கொள்வீர்களா?

    விளக்கம் போதும்தானே?

    பண்புநெறி தவறாமல், மாற்றுக் கருத்துகளை முன் வைத்த தங்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்; நன்றி சொல்கிறேன்.

    மிக்க நன்றி மாசிலாமணி.

    பதிலளிநீக்கு
  6. //நல்லதொரு சிறுகதை.
    அருமையான முடிவு ஐயா//

    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தனபாலன்.

    ‘அப்படிச் சொல்லுங்க’ பதிவை அவசியம் படிப்பேன்; கருத்துச் சொல்லுவேன்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு