வியாழன், 15 ஆகஸ்ட், 2013

குடும்பப் பெண்களைச் சீரழிக்கும் குமுதம் இதழும்[21.08.2013] எழுத்தாளர் இந்துமதியும்!

நீங்கள் நிச்சயம் குமுதம் வாசகராக இருப்பீர்கள் அல்லது இருந்திருப்பீர்கள்.

இதைக் காசு கொடுத்து வாங்குபவர்கள் ஏழெட்டு லட்சங்களுக்குக் குறையாது; ஓசியில் படிப்பவர்கள் பல லட்சங்கள் தேறும்.

இது தமிழில் நம்பர் 1 வார இதழ்.....அன்றும் இன்றும்.

கவர்ச்சி என்ற பெயரில், ஆபாசப் படங்கள் போடுவதிலும் எழுதுவதிலும்கூட இது நம்பர் 1 தான்.

’குமுதமும் ஆபாசமும்’ என்னும் தலைப்பில் ஆயிரம் பக்க அளவில் ஒரு நூலே எழுதலாம்.

நிற்க.

குமுதம் அளவுக்கு எழுத்தாளர் இந்துமதியையும் நீங்கள் அறிவீர்கள்.

‘தரையில் இறங்கும் விமானங்கள்' என்ற நாவலின் மூலம் பெரும் புகழ் சேர்த்தவர் இந்துமதி என்பதையோ, எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, ‘Range of Angels' என்னும் ஷிட்னி ஷெல்டனின் ஆங்கில நாவலைக் காப்பியடித்து ‘ராணி’ இதழில் ’நல்லதோர் வீணை செய்தே’ என்னும் தலைப்பில் தொடர்கதை எழுதியவர் என்பதையோ, பல ஆண்டுகளுக்கு முன்பு, குமுதத்தில் சிவசங்கரியுடன் இணைந்து, ‘இரண்டு பேர்’ [ஒரே நபரைத் தாயும் மகளும் காதலிப்பது கதை] என்னும் தலைப்பில் தொடர்கதை எழுதி வாசகரிடம் ரொம்பவே வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்பதையோ இங்கு நினைவு படுத்தி அவர் எழுத்துக்களை விமர்சிப்பது என் நோக்கமல்ல.

இந்த வாரக் குமுதத்தில்[21.08.2013] அவர் எழுதியிருக்கும், ‘தூண்டில் புழுக்கள்’ என்னும் சிறுகதை எத்தனை தரம் தாழ்ந்தது என்பதை, இந்த வலைப் பக்கத்திற்கு வருகை புரியும் உங்களுக்குச் சுட்டிக் காட்டவே இந்தப் பதிவு.

அதைப் படிக்காத நண்பர்களுக்காகக் கதைச் சுருக்கம்..........

‘மகா’ என்னும் பெயர் கொண்ட ஓர் அழகிய [இந்துமதியின் வர்ணனைப்படி, ‘வேக வச்சு தோலுரிச்ச சேப்பங்கிழங்கு மாதிரி, வெள்ளை வெளேர்னு லட்சணமானவள்’] இளம் பெண், சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலைக்குச் [காரியதரிசி] சேர்கிறாள்.

சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் இக்கதைச் சம்பவம் நிகழ்கிறது.

இரண்டு வாரங்கள் போல, அவள் தவறு செய்யும் போதெல்லாம், சிரித்துக்கொண்டே திருத்திக் கொள்ளச் சொல்லும் சிவகுமார், கடந்த இரு வாரங்களாக, தவறே நிகழாத போதும் கடுமையாகச் சாடுவதோடு ஃபைல் கட்டுகளையும் தூக்கி வீசுகிறார். தினம் தினம் இது நடக்கிறது.

ஒரு நாள் உணவு இடைவேளையின் போது, அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் [மூன்று பேர்] தன் மன வேதனையைப் பகிர்கிறாள் மகா.

அவர்களில், ஜானகி என்பவள், “உன்னை அச்சுறுத்திப் பணிய வைக்கத்தான் [அனுபவிக்க] இப்படி நடந்துக்கிறார். எங்களிடமும் இப்படித்தான் நடந்துகிட்டார். வேறு வழியில்லாம நாங்க மூனு பேருமே அவர் ஆசைக்குப் பலியாகிட்டோம். ஆஃபீஸுக்கு ஆஃபீஸ் ‘மகளிர் மட்டும்’ நாஸர்கள் இருக்கிறார்கள். நீ சிவகுமாரை எட்டி உதைக்கப் போறியா, இல்லே, விட்டுக் கொடுக்கிறியா?” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறாள்.

அன்று இரவு முழுக்க மகாவுக்கு உறக்கமில்லை.

விடிந்து அலுவலகம் புறப்படுகிறாள்.

அம்மாக்காரி, “சாப்பாட்டுக்கு அரிசி இல்ல. நாடார் கடையில் பத்து கிலோவுக்குச் சொல்லிடு. உன் சம்பளம் வந்ததும் தந்துடலாம்” என்கிறாள்.

மகாவும், “சரி சொல்லிடறேன்” என்று சொல்லிப் போகிறாள்.

படிக்கும் போதே கதையின் சாராம்சத்தை உள் வாங்கி, அதன் தரத்தையும் நீங்கள் எடை போட்டிருப்பீர்கள்.

உங்கள் நிலை என்னவென்பது எனக்குத் தெரியாது. என் மனதில் எழுந்த சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்..........

“ஆஃபீஸுக்கு ஆஃபீஸ் ‘மகளிர் மட்டும்’ நாசர்கள் இருப்பதாக, ஜானகி வாயிலாகச் சொல்கிறார் இந்துமதி.

இவரின் எண்ணப்படி, தனியார் நிறுவன உரிமையாளர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்றாகிறது.

இந்துமதி அப்படி நினக்கிறார். அது அவருக்குள்ள சுதந்திரம்; உரிமை. இந்தக் கதையைப் பிரசுரம் செய்த குமுதம் ஆசிரியர் இதை அங்கீகரிக்கிறாரா?

இல்லையெனில், இதைப் பிரசுரம் செய்தது ஏன்?

எழுத்தாளர் பிரபலமானவர் என்பதாலா?

மகா, படிப்பிற்குச் சம்பந்தமில்லாத பல வேலைகள் பார்த்தவள். அங்கெல்லாமும் பெண்ணினத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைச் சந்தித்தவள். அந்த வகையில், தான் பணிக்குச் சேரும் நிறுவனத்தின் முதலாளி குறித்து, குறிப்பாக, அவர் நடத்தை குறித்து ஏதும் விசாரிக்கவில்லையே, ஏன்?

இவ்வாறெல்லாம் நம் வாசகர்கள், தோண்டித் துருவி கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்ற எழுத்தாளரின் நம்பிக்கை காரணமா?

பிழைக்க வேறு வழியில்லாமல், முதலாளியின் ஆசைக்குப் பலியானதாக ஜானகி சொல்கிறாளே, சதையை விற்பதைத் தவிர வயிறு வளர்க்க வேறு வழியே இல்லையா?

வீட்டோடு இருந்து துணிமணிகள் தைப்பது; பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்பது; அண்டை அயலவர்க்கு விசேச காலங்களில் பலகாரங்கள் தயாரித்துத் தருவது என்றிப்படிப் பல தொழில்கள் செய்து சம்பாதித்து வசதியற்ற குடும்பப் பெண்கள் மானத்தோடு வாழ்க்கை நடத்துவது ஜானகி முதலானவர்களுக்குத் தெரியாவிட்டால் போகிறது. சமுதாயத்தைப் படித்த மெத்த பெரிய எழுத்தாளரான இந்துமதிக்கும், குமுதம் ஆசிரியருக்கும் தெரியாமல் போனது மகா மகா பெரிய ஆச்சரியம்!

அன்றாடச் சோத்துப் பிரச்சினைக்காக, முதலாளியின் ஆசைக்கு அடிபணிவது என்ற மகாவின் முடிவைச் சொல்லாமல் சொல்லிக் கதையை முடித்திருக்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் இந்துமதி.

இம்முடிவின் மூலம், தான் வாழ [நோகாமல்], தன் குடும்பம் வாழ ஒரு கன்னிப் பெண் தன்னையே அர்ப்பணிப்பதில் தவறேதும் இல்லை என்கிறார் பிரபலம்.

இவருடைய இந்தக் கருத்து, நம் பெண்களை வாழ வைக்குமா? இல்லை.....
சீரழிக்குமா?

முடிவெடுப்பது நம் அனைவரின் கடமை.