அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 20 ஜனவரி, 2014

நாத்திகரைப் போற்றும் ஓர் ஆத்திக மனிதாபிமானி!!

 பிறரை மதிப்பதும் நேசிப்பதுமான உயர்ந்த குணம்தான் மனிதனை ‘மனிதன்’ ஆக்குகிறது.. ‘ஆலமர்ந்தார்’ ஒரு மனிதர்; ‘நாத்திகக் கேள்விகளுக்கு ஆத்திக பதில்கள் நூறு’ என்னும் நூலைப் படைத்தவர்.

‘பதில்கள் நூறு’ என்று குறிப்பிட்டிருந்தாலும் 121 வினாக்களுக்கு விடை தந்திருக்கிறார்.

அவருடைய பதில்கள், படிப்போர் அனைவருக்கும் உடன்பாடானவை அல்ல எனினும், பண்பாடு பிறழாமல் கருத்தை முன் வைக்கும் பாங்கு பாராட்டத் தூண்டுகிறது; வியக்க வைக்கிறது.

“நாஸ்திகர்கள் தெய்வங்களையும் மதங்களையும் தூஷணையாகப் பேசுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சரிதானா?” என்கிற கேள்விக்கான பதிலை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். நீங்கள் அவரைப் புரிந்துகொண்டு போற்றுவதற்கு இது  பெரிதும் உதவும்.


மேற்கண்ட கேள்விக்கான ஆலமர்ந்தாரின் பதில்..........

### உண்மையான நாஸ்திகர்கள் தெய்வங்களையும் மதங்களையும் கடுமையாக விமர்சிப்பவர்களாக வேண்டுமானால் இருக்கலாம். அவர்கள் ஒரு போதும் தூஷணையாகப் பேச மாட்டார்கள். மனிதாபிமான உணர்வுதான் நாத்திகத்தின் அஸ்திவாரம்.

கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் இழைக்கப்படுகின்ற கொடுமைகளைக் கண்டு, தார்மீகக் கோபம் கொள்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் கொடுமை புரிகின்றவர்களைவிட, நாஸ்திகர்களை உயர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.

கடவுளை மறுப்பதாலும் மதம் தேவையில்லை என்று சொல்வதாலும் ஒருவன் மோசமானவன் ஆகிவிட மாட்டான். மனித இனத்துக்குத் தீமை செய்கின்ற விஷயங்கள் தேவையில்லை என அவன் எண்ணுவதில் தவறில்லை.

நாஸ்திக வாதம் பேசுகிறவர்களை அலட்சியப்படுத்தாமல், அவர்கள் சொல்கின்றவற்றிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டு, கடவுள் நம்பிக்கை ஏன் அவசியம் என்பதை அவர்களிடம் விவாதித்து, சரியான முடிவுக்கு வரவேண்டும்.

ஒன்றை மறந்துவிடக் கூடாது. எல்லா உயிர்களையும் நேசிப்பவனே உண்மையான ஆஸ்திகன். ஆஸ்திகமும் புரியாமல் நாஸ்திகமும் புரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் தூஷணைகளில் ஈடுபடலாம். ஆஸ்திகம் பேசுகிற சிலரிடம் மூட நம்பிக்கைகள் இருப்பது போலவே, நாஸ்திகம் பேசுகிற சிலரிடமும் மூட நம்பிக்கைகள் உண்டு.

நல்ல ஆஸ்திகர்களும் நல்ல நாஸ்திகர்களும் மனிதாபிமானிகளாகத்தான் இருப்பார்கள். மனித இனம் சிறப்படைய வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோளாக இருக்கும். மனம் பண்பட்டுவிட்ட இடத்தில் இரண்டும் ஒருங்கே சங்கமித்துவிடும் ###

                                   *                              *                               *
ந்த நூலைக் கற்றதன் மூலம், செறிவான பல கருத்துகளை அறிந்தேன் என்று சொல்வதைவிடவும், ‘ஒரு முழுமையான மனிதரைக் காணும் நல்லதொரு வாய்ப்பு அமைந்தது’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இவரைப் போன்ற உயர் பண்பாளர்கள் / மனிதாபிமானிகள் உள்ளவரை மனித குலம் வாழும் என உறுதிபடச் சொல்லலாம்.

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

நூலின் பெயர்:     “நாத்திகக் கேள்விகளுக்கு ஆத்திக பதில்கள் நூறு’  

நூலாசிரியர்:        'ஆலமர்ந்தார்'

பதிப்பகம்:             நர்மதா, தியாகராய நகர், சென்னை - 17

முதல் பதிப்பு:       மே, 1995

இப்பதிப்பு:            ஆகஸ்டு, 2002

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO