புதன், 1 ஜூன், 2016

வெங்காயக் கடவுள்!!![அறிவுஜீவிகளுக்கான பதிவு!]

“கடவுள் என்று ஒருவர் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டால், இப்போதைய நம் வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்கள் நிகழுமா?” [இது எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வி]
'நிகழும்’ என்று நம்புவோர் மிகப் பலர்.


“தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்."


“திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும்[இப்போது என்ன வாழுகிறது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்].”


“இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.”


“நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.”


மிகப் பலரின் மேற்கண்ட நம்பிக்கைகள் பலிக்குமா?


நிச்சயமாக இல்லை.


கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை. [கடவுள் நம்பிக்கையாளர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்; மேலே படியுங்கள்.]


ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.


காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.


அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப் பக்குவமே காரணம்.


இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள் போன்றோரின் வழிப்படுத்தலால்தான். இவர்களெல்லாம்  கடவுள் நம்பிக்கையாளர்களாக இருத்தல் கட்டாயமல்ல. சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் நாத்திகர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.


எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.


சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.


’பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை ஏன்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது இயலாது என்பதை உணரும்போது, கடவுளைச் சரணாகதி அடைகிறான் மனிதன். அவ்வாறு சரணாகதி அடைந்தாலும், மேற்குறிப்பிட்டவை போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை என்பதை அவன் உணர மறுக்கிறான்.


குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவனின் மூளையில் கடவுள் நம்பிக்கை திணிக்கப்படுகிறது.


ஒரு குழந்தையின் தாத்தா செத்துப் போக.....


“செத்துப் போறதுன்னா என்ன?” என்று கேட்கும் குழந்தையிடம், “செத்துப் போறதுன்னா சாமிகிட்ட போறது. தாத்தா சாமிகிட்ட போய்ட்டார்” என்று காலங்காலமாக நம்மவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


ஐயமற அறியப்படாத, அல்லது, உணரப்படாத கடவுளைக் குழந்தையின் மனதில் திணித்து, வளரும் அதன் அறிவை  முடமாக்குதல் கூடாது; கூடவே கூடாது.


‘நம்மோட இந்த உடம்பு செயல்பட முடியாம அழியறதுதான் சாவு” என்று எதார்த்தமாகச் சொல்லலாம்.


“அழுகிப் போனா நாறும். புதைக்கிறோம், இல்லேன்னா எரிச்சிடுறோம்” என்றும் சொல்லலாம்.


ஆனால், இம்மாதிரியான பதில்கள் குழந்தைகளை அச்சுறுத்தும்; வாழ்வின் மீதான பற்றுதலைக் குறைக்கும் என்பதால்.....


குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு, “இதைப் பத்தியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீ பெரியவன் ஆகும்போது எல்லாம் புரிஞ்சிக்கலாம்; நீயே கண்டுபிடிச்சிச் சொல்லலாம்” என்றிப்படிச் சமாளிக்கலாம்.


தன் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்.....


“அடிக்கிறது தப்பு. அது பாவம். சாமி தண்டிக்கும்” என்று பயமுறுத்துவதைத் தவிர்த்து, “நீ அடிச்சா அவன் திருப்பி அடிப்பான். அவனால முடியலேன்னா, உன்னைவிடப் பலசாலியைக் கூட்டி வந்து அடிப்பான். நீயும் துணைக்கு ஆள் தேட வேண்டி வரும். இரு தரப்பாரும் மாறி மாறி அடிச்சிக்க ஆரம்பிச்சா, யாருமே சந்தோசமா வாழ முடியாது” என்று சொல்லித் திருத்துவதே அறிவுடைமை ஆகும்.


இவ்வாறெல்லாம், எதார்த்த நிலையைப் புரிய வைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள், கடவுளை நம்பி, மேலும் பல மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாகி, மனச் சிதைவுக்கு ஆளாகாமல் சிறந்த சிந்தனையாளர்களாக உருவெடுப்பார்கள்; நல்லவர்களாக வாழ முயல்வார்கள்.
===============================================================================

1 கருத்து: