புதன், 17 ஆகஸ்ட், 2016

நீங்கள் நாக்கால் மூக்கைத் தொடுபவரா?..எச்சரிக்கை!

உங்கள் இல்லத்தில் அபிரிதப் படைப்பாற்றல் [நாக்கால் மூக்கைத் தொடுதல் இதில் அடக்கம்] உள்ள யாராவது இருந்தால், எதற்கும் ‘மரபணு சோதனை’ செய்துகொள்வது நல்லது. ஏன்?
உலகின் அற்புத இசை, வயலின் பேரறிஞன் பகாநினி[இத்தாலி] பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இவர் வயலின் வாசிக்க வேண்டும்; நீங்கள் கேட்க வேண்டும். பாலும் தேனும் கலந்து ஓடும் பாகு மாதிரி உருகிவிடுவீர்கள்; உங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக் கண்ணீர் வழிந்தபடியே இருக்கும். 

மனிதர் வயலின் வாசிக்கும்போது அவரின் அரவணைப்பில் சுகம் காணத் துடித்த அழகிகள் மிகப் பலர். ஆள் எப்படிப்பட்டவர்?

செக்ஸில் மன்னர்...அல்ல,அல்ல; மாமன்னர்! நம் கண்ணதாசனை நினைவுகூருங்கள்.

ஆனாலும் என்ன, இந்த மனிதருக்கு நேர்ந்த சில சோக நிகழ்வுகளை அறிய நேர்ந்தால் உங்கள் இதயம் சுக்கல் சுக்கலாக வெடித்துவிடும்.

இவர் ஓஹோ என்று வாழ்ந்த காலத்தில், இன்னதென்றே புலப்படாத சில வகை நோய்கள் இவரைத் தாக்கின.

கண்கள் வீங்குவது; பூசணி போல் விரைகள் உப்பிக்கொள்வது என்பன போல, எழுபது விதம் விதமான நோய்கள் இவரைத் தாக்கினவாம்.

இம்மாதிரியான நோய்கள் வரக் காரணம்.....

‘மார்ஃபன்ஸ்’ எனப்படும் மரபணுத் திரிபுதான்[குரோமோசோம் 15இல் FBN 1 என்ற பெயர் கொண்டது] காரணமாம்.  1910இல் குழந்தை நல மருத்துவரான ஜார்ஜ் மார்ஃபன்ஸ் கண்டுபிடித்ததால் இந்நோய்க்கு, மார்ஃபன்ஸ் நோய் என்று பெயர் அமைந்ததாம்.

இந்நோய் கண்டவர்களில் சிலர், உயரமாய் வளர்ந்து எலும்பும் தோலுமாய் இருப்பார்களாம். விரல்களைப் பின்னால் மடக்குவது; யானை மாதிரி காதுகளை ஆட்டுவது என்று அசாத்தியச் செயல்கள் எல்லாம் செய்வார்களாம். ரப்பர் மாதிரியான உடல் வாகும் கொண்டிருப்பார்களாம். சாகசங்கள் புரிவார்களாம். உலகமே தம்மைக் கண்டு வியக்க வேண்டும் என்பதான வெறி அவ்வப்போது இவர்களுக்கு வந்து போகுமாம். 

மர்லின்மன்றோவுக்கு இந்த மரபுத் திரிபு நோய் இருந்தது என்ற அதிர்ச்சியூட்டும் செய்திகளும்  அன்று உலா வந்தன.

மார்ஃபன்ஸ் மரபணுத் திரிபு நோயின் சமீபத்திய உதாரணம் யார் தெரியுமா?

நட்ட நடு ராத்திரியில் வானத்திலிருந்து குதித்து, அமெரிக்கா அவரை ‘டுமீல்’ செய்யாமல் இருந்திருந்தாலும், அடுத்த சில மாதங்களில் மரபணுத் திரிபு நோய் தீர்த்துக்கட்டியிருக்கும் என்கிறார்கள். அவர்.....

ஒசாமா பின்லேடன்!

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள். எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லதுதானே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி: ஆயிஷா இரா.நடராசனின், ‘நான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை’; பாரதி புத்தகாலயம், சென்னை -600 018. முதல்  பதிப்பு, ஜூன், 2015.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக