அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 23 மார்ச், 2017

‘கடவுள் இல்லை’ என்பவன் கொல்லப்படுவது ஏன்...ஏன்?

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, ஃபாரூக் என்று “கடவுள் இல்லை” என்போர் கொல்லப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. மத வெறியர்களின் இத்தகு கொடுஞ்செயலுக்கு, ‘மதவெறி’ காரணம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் ‘வெறியர்கள்’ ஆனதற்கான காரணம் கொஞ்சம் ஆராய்ந்தால் புரியவரும்.
* ‘கடவுள் இல்லை’ என்போர் செய்யும் தொடர் பரப்புரையால்  கடவுளை நம்பும் நல்லவர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்; அயோக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகில் அதர்மம் தலைவிரித்தாடும். 

* கருணை வடிவான கடவுள் வருந்துவாரோ இல்லையோ அவரை வழிபடும் பக்தர்களின் மனம் புண்படும். 

* ’கடவுள் இல்லை’ என்னும் முழக்கங்கள் தொடர்ந்தால், மனித இனத்தையே கடவுள் வெறுப்பார்; தண்டிக்கவும் நினைப்பார். 

* கடவுள் இல்லை என்போரைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் பூண்டோடு அழிக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அதற்கான துணிவு அவர்களுக்கு இல்லை. அந்தத் துணிவு சிலருக்கேனும் தேவைப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இவையும்[அனைத்தும் விவாதத்திற்கு உரியவை], இவை போன்றவையும்தான்  கடவுள் மறுப்பாளர்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களா என்றால், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், கொஞ்சமேனும் ஆழ்ந்து சிந்திக்கிற அறிவு மத வெறியர்களுக்கு இல்லை என்பதே.

கடவுள் மறுப்பாளர்களின் பரப்புரை[மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு] தொடர்ந்தால்.....

தங்கள் மதத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை குறையும். மற்ற மதத்தவர் எண்ணிக்கை பெருகும். இவர்கள் சிறுபான்மையர் ஆக, பெரும்பான்மையோர் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். மத வெறியை வளர்ப்பதன் மூலம் பெற்றுவரும் பலன்கள் பலவற்றை இழப்பதோடு, உலகில் தாங்கள் அல்லது, தாங்களும் பெரும்பான்மை மதத்தவர் என்னும் பெருமையை...இறுமாப்பை இழக்க நேரிடும்.

மதவெறியர்கள், கடவுள் இல்லை என்போரை அஞ்சாமல் தாக்கி அழிப்பதற்கு இதுவே தலையாய காரணம் ஆகும்.

கடவுளின் இருப்பை நிலைநாட்டுவதோ மக்களின் நலம் பேணுவதோ இவர்களின் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.
=========================================================

மிக முக்கிய குறிப்பு: தனிப்பட்ட முறையில் எந்தவொரு மதத்தையும் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாகத்தான் எழுதியிருக்கிறேன். கொல்லப்பட்ட ஃபாரூக்கின் படம் ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது. நானும் வெளியிட்டிருக்கிறேன். மற்றபடி, உள்நோக்கம் எதுவும் எனக்கில்லை.

எனக்கு ஆசை ரொம்ப ரொம்ப அதிகம்..... உயிர் வாழும் ஆசையைச் சொல்கிறேன்! அன்புகொண்டு என் தலைக்கு எவரும் விலை/உலை வைத்துவிட வேண்டாம் என வேண்டுகிறேன்.

நன்றி!




5 கருத்துகள்:

  1. மதம் மறந்தால் அறிவு விரிவடையும்

    மதத்திற்குள் இருப்பவனின் அறிவு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவன் நிலையே...

    நான் சொல்வது அனைத்து மதத்தினருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஓட்டுவார்கள்?

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. தற்போது தமிழ் மணம் முறையாக வருகிறதல்லாவா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லீங்க.

      காலை 09.00 மணியிலிருந்து[நான் கவனித்த நேரம்] சற்று முன்னர்வரை முகப்புப் பக்க இடுகைப் பட்டியல் நகரவேயில்லை. அதனால், தலைப்பை மாற்றி இணைத்த பதிவையே மீண்டும் இணைத்தேன்.

      பட்டியல் நகர்ந்து இடம்தர இப்போதுதான் என் இடுகை முகப்புப் பக்கத்தில் தெரிகிறது. மேலும் ஒரு மணி நேரம் பட்டியல் நகராமல் இருந்திருந்தால் பக்கம் 1 இல் வெளியான என் இடுகை 2 ஆம் பக்கத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்திருக்கும்.

      தமிழ்மணம் பழுது இன்னும் சரிசெய்யப்படவில்லை.

      தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இணைத்த பதிவையே மீண்டும்[மீண்டும்] இணக்கும்போது உள் மனம் வெகுவாக உறுத்துகிறது.

      தமிழ்மணம் கண் திறக்கும் காலம் எப்போது வருமோ?

      நீக்கு