திங்கள், 9 ஏப்ரல், 2018

கிரிக்கெட் வாரியத்திற்குத் தமிழக ரசிகர்கள் 'பாடம்' கற்பிப்பார்களா?

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை[10.04.2018] நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைக் காண வருகிற ரசிகர்கள், பேனர், கொடி, இசைக் கருவிகள், கேமரா, கத்தி கப்படா, கத்தரிக்கோல், சிகரெட், தீப்பெட்டி, கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டுவரக்கூடாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன[09.04.2018 மாலை: 05.30 மணி].

கிரிக்கெட் வாரியம் தமிழக ரசிகர்களைத் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதா?

இனவெறியைத் தூண்டும் முழக்கங்களை எழுப்பினால், எழுப்புபவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இவ்வாரியம் தமிழ் இனப் பற்றுகொண்ட இளைஞர்கள் மீது, 'இன வெறியர்கள்' என்று முத்திரை குத்திவிட்டதா?

தேசியக்கொடியை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்புச் செய்திருக்கிறது. எந்தவொரு போராட்டத்திலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டிராத நம்மவர்களைத் தேசத் துரோகிகள் என்று உலகுக்கு அடையாளப்படுத்துகிறதா வாரியம்?

குடிநீர்ப்பாட்டில்கூட எடுத்துச் செல்ல அனுமதி இல்லையாம்.

எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்!

இதைவிடவும் வேறு எந்த வகையிலும், வேறு எந்தவொரு அமைப்பும்  நம் இளைஞர்களை/ரசிகர்களை அவமானப்படுத்திவிட முடியாது.

தமிழக ரசிகர்களை இழிவுபடுத்திய இந்தக் கிரிக்கெட் வாரியத்திற்கு ரசிகப்பெருமக்கள் உரிய வகையில் 'பாடம்' கற்பிக்க வேண்டும்.

செய்வார்களா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------