எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 10 டிசம்பர், 2018

முதலில் அழிவது உலகமா, மதங்களா?!

இந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்.....
ஒன்று:
புத்தர் வாழ்ந்து மறைந்து 2500 ஆண்டுகள் கழித்து உலகம் அழிந்துவிடும் என்பது புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் நம்பிக்கை.

[புத்தர் கி.மு.500ஆம் ஆண்டில் பிறந்தவர். அவ்வகையில் பார்த்தால் கி.பி.2000இல் உலகம் அழிந்திருத்தல் வேண்டும். அழிந்ததா? ஊஹூம்!]

இரண்டு:
தலாய்லாமா எப்போது திபத்தைவிட்டு வெளியேறுகிறாரோ, அப்போதே ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்றார்கள் திபெத்தியர்கள்

[செஞ்சீனா திபெத்தின்மீது 1951இல் படையெடுத்தபோது 'லாமா' தலைதெறிக்க ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அழியலீங்களே!]

மூன்று:
மனிதர்கள் எப்போது நிலவில் காலடி வைக்கிறார்களோ, அப்போதே முழு உலகமும் அழியும் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.

[விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங் அங்கு காலடி வைத்துப் பல[?] ஆண்டுகள் ஆயிற்றே. நிலவும் அழியவில்லை. உலகமும் அழியவில்லை. அமெரிக்கர்கள் பொய் சொல்லுவதாக இசுலாமியர்கள் நீண்ட காலம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஐஸ்லாந்து நாட்டின் ஒரு பகுதியில் நிலாவைப் போல ஸ்டூடியோ அமைத்துப் படப்பிடிப்பு நடத்தி அமெரிக்கா உலகை ஏமாற்றுவதாகவும் புரளி கிளப்பினார்களாம். ஹி...ஹி...ஹி!]

நான்கு:
கண்ணுக்குத் தெரியாத ஒரு கறுப்புக் கோள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. பாலைவனத்தில் ஒருவித நீல நிறப் பூ பூக்கும். பூத்த மறு வினாடியே உலகம் வெடித்துச் சிதறும். இப்படிச் சொல்பவர்கள், அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வாழும் 'ஹோபி' இன மக்கள். 

[இது ஒருவகையில் நம்பக்கூடியதுதானாம். அரிசோனா மாநிலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எரிநட்சத்திரக்கல் ஒன்று விழுந்ததால் ஒரு பெரும் பள்ளம் அங்கே உருவானதாம். அதன் ஆழம் 600 அடி. சுற்றளவு மூன்று மைல். 

இது போலவே, அசுரவேகத்தில் வந்துகொண்டிருக்கிற கறுப்புக் கிரகம் மோதி உலகம் அழியும் என்று 'ஹோபி'கள் சொல்வது பலிக்கக்கூடும் என்கிறார்கள் சில அறிவியல் அறிஞர்கள்.

ஐந்து:
பகவான், 'கல்கி' அவதாரம் எடுக்கும்போது உலகம் அழியும் என்கிறது இந்துமதம்.

[அழிவு நிகழும் அந்த நாள் குறித்து அவதாரம் எவரும் திருவாய் மலர்ந்தருளவில்லை!].

ஆறு:
கிறித்தவர்களும் உலகம் ஒரு நாள் அழியும் என்றார்கள். எப்போது?

உலகக் கிறித்தவர்களின் தலைவர்கள் பட்டியலில் போப்பாண்டவர்களின் வரிசையில், 'பீட்டர்' என்னும் பெயருள்ளவர் இடம்பெறும்போது.

பீட்டரின் வருகையைப் பீதியுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம் கிறித்தவர்கள்.

[பீட்டர் எப்போது வருவார்? பீட்டருக்குத்தான் தெரியும்].

எது எப்படியோ, ஏதோ ஒரு காரணத்தால் அல்லது காரணங்களால்  உலகம் ஒரு நாள் அழியுமா?

கோடிக்கணக்கான மனிதப் படுகொலைகளுக்கும், ஏராளமான பொருட்சேதங்களுக்கும், புதிய புதிய மூடநம்பிக்கைகளின் உருவாக்கத்திற்கும்[இவற்றோடு ஒப்பிடும்போது விளைந்த நன்மைகள் மிகவும் குறைவு] காரணமான மதங்களுக்கு அழிவே இல்லையெனின் உலகின் அழிவு நிச்சயம்!
====================================================================
இப்பதிவு, indiblogger  முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

நன்றி: 'மோகன ரூபன்' எழுதிய, 'உலகப்பெரும் அதிசயங்கள்'; மேகதூதன் பதிப்பகம், சென்னை - 6000 005.