எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

எங்கெங்கு காணினும் லஞ்சமடா! தேவையடா அவசரச் சட்டம்!!

//ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைப் பகுதியில், பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ37000[அடேங்ங்ங்கப்பா!] லஞ்சம் வாங்கிய, பெண் நில அளவையாளரும்[பெயர் வேண்டாம்> பாவம் தாய்க்குலம்] உதவியாளரும் கைது// -இது சற்று முன்னர்[காலை 07.25] ’நியூஸ் தமிழ்’இல் வெளியான செய்தி.

இது ஒன்றும் அரிதான நிகழ்வல்ல[தேடுபொறியில் ‘நிலப்பட்டா... லஞ்சம்’ என்று தட்டச்சிட்டால் நீளும் பட்டியலை ஒரு நாளில் படித்துமுடிப்பது சாத்தியமே இல்லை].

வருவாய்த் துறை என்றில்லை, வணிகவரித் துறை, வருமானவரித் துறை, போக்குவரத்துத் துறை[RTO], பத்திரப்பதிவுத் துறை என்று ஏறத்தாழ அனைத்துத் துறைகளிலும்  கட்டணம் செலுத்துவதோடு லஞ்சம் கொடுப்பதும் வழக்கம் ஆகிவிட்டது/ஆக்கப்பட்டுவிட்டது.

எந்தவொரு நடவடிக்கையாலும் இதை ஒழிக்க இயலாது என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டதாலோ என்னவோ ஒன்றிய & மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கையே எடுப்பதில்லை.

மேற்கண்டது போல, எப்போதாவது கைது செய்யப்படுபவர்களும் தண்டனை பெற்றதாக வரலாறு[வெகு அரிதான விதிவிலக்குகள் இருக்கக்கூடும்] இல்லை.

ஆதலினால், ஒன்றிய & மாநில அரசுகளுக்கு நாம் முன்வைக்கும் கோரிக்கை:

இது இதற்கு இவ்வளவுதான் லஞ்சம் பெறுதல் வேண்டும்[குறைந்தபட்சம்+அதிகப்பட்சம்] என்று சட்டம் இயற்றுதலும், ஆணை பிறப்பித்தலும் அவசியம்.

ஆயினும், இந்த ஆணையால் பயன் ஏதும் விளையாது என்பதும் அறியத்தக்கது. அப்புறம் எதற்கு இந்த ஆணை?

தேர்தல் காலங்களில் அரசுகள் தத்தம் சாதனைப் பட்டியல்களில் இதையும் இணைப்பதன் மூலம், அதிக அளவில் வக்காளர்களின் வாக்குகளைப் பெறலாம்[ஓட்டுக்குக் கொடுக்கும் லஞ்சத்தை வரன்முறைப்படுத்தவும் ஆணை பிறப்பித்துப் பட்டியலில் சேர்க்கலாம். ஹி... ஹி... ஹி!!!].