சனி, 23 மார்ச், 2013

"கடவுள் இல்லை” -அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு!!!

ஊடகங்களில் இப்படியொரு செய்தி வெளியானால், இம்மண்ணுலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

னக்கு நானே எழுப்பிக் கொண்ட கேள்வி இது.

பதிலும் என்னுடையதே.

இந்தக் கேள்வி-பதிலின் நோக்கம் அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே; எவரொருவர் மனதையும் புண்படுத்துவது அல்ல.

டவுள் என்று ஒருவர் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டால், இப்போதைய நம் வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்கள் நிகழுமா?

’நிகழும்’ என்று நம்புவோர் மிகப் பலர்?

தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்.

திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும். [இப்போது என்ன வாழுகிறது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்].

இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.

நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.

மிகப் பலரின் இந்த நம்பிக்கை பலிக்குமா?

நிச்சயமாக இல்லை.

கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை. [கடவுள் நம்பிக்கையாளர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்; மேலே படியுங்கள்.]

ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.

காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.

அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப் பக்குவமே காரணம்.

இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்களின், சான்றோர்களின், அறிஞர்களின் வழிப்படுத்தலால்தான்.

எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.

சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.

’பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை ஏன்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது இயலாது என்பதை உணரும்போது, கடவுளைச் சரணாகதி அடைகிறான் மனிதன். அவ்வாறு சரணாகதி அடைந்தாலும், மேற்குறிப்பிட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை என்பதை அவன் உணர மறுக்கிறான்.

குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவனின் மூளையில் கடவுள் நம்பிக்கை திணிக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் தாத்தா செத்துப் போக.....

‘செத்துப் போறதுன்னா என்ன/” என்று கேட்கும் குழந்தையிடம், “செத்துப் போறதுன்னா, தாத்தா சாமிகிட்ட போய்ட்டார்” என்று காலங்காலமாக நம்மவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயமற அறியப்படாத, அல்லது, உணரப்படாத கடவுளைக் குழந்தையின் மனதில் திணித்து, வளரும் அதன் அறிவை ஏன் முடமாக்க வேண்டும்/

‘நம்மோட இந்த உடம்பு செயல்பட முடியாம அழியறதுதான் சாவு” என்று எதார்த்தமாகச் சொல்லலாம்.

“அழுகிப் போனா நாறும். புதைக்கிறோம், இல்லேன்னா எரிச்சிடுறோம்”என்றும் சொல்லலாம்.

இம்மாதிரி எதார்த்தமான பதில்கள் குழந்தைகளை அச்சுறுத்தும்; வாழ்வின் மீதான பற்றுதலைக் குறைக்கும் என்பதால்.....

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு, “இதைப் பத்தியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீ பெரியவன் ஆகும் போது எல்லாம் புரிஞ்சிக்கலாம்; நீயே கண்டுபிடிச்சிச் சொல்லலாம்” என்றிப்படிச் சமாளிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

தன் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்.....

“அடிக்கிறது தப்பு. அது பாவம். சாமி தண்டிக்கும்” என்று பயமுறுத்துவதைத் தவிர்த்து, “நீ அடிச்சா அவன் திருப்பி அடிப்பான். அவனால முடியலேன்னா, உன்னைவிடப் பலசாலியைக் கூட்டி வந்து அடிப்பான். நீயும் துணைக்கு ஆள் தேட வேண்டி வரும். இரு தரப்பாரும் மாறி மாறி அடிச்சிக்க ஆரம்பிச்சா, யாருமே சந்தோசமா வாழ முடியாது” என்று சொல்லித் திருத்துவதே அறிவுடைமை ஆகும்.

இவ்வாறெல்லாம், எதார்த்த நிலையைப் புரிய வைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள், கடவுளை நம்பி, மேலும் பல மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாகி, மனச் சிதைவுக்கு ஆளாகாமல், சிறந்த சிந்தனையாளர்களாக உருவெடுப்பார்கள்; நல்லவர்களாக வாழ முயல்வார்கள்.

ஆக, மனிதர்கள் நல்லவர்களாக வாழ்வது மனிதர்களால்தான்; கடவுளால் அல்ல.

எனவே, ’கடவுள் என்று ஒருவர் இல்லை’ என்று அறிவிக்கப்பட்டாலும் இப்போதைய இயல்பு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






















19 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனை கருத்துக்கள்...

    எப்படிங்க...?

    பதிலளிநீக்கு
  2. போரின் போது கடவுள் எங்கே போனார் ? பல்லாயிரம் தமிழர்களை மடிய விட்ட கடவுளை என்ன செய்யலாம் ?? இருந்தால் தானே ?

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்.

    பரந்த மனதுடன் பாராட்டும் தங்களுக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்வது?

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ssk.

    வருகை புரிந்த தங்களின் பெருந்தன்மைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.

    காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும். //

    மனிதர்களிலும் பல வகை உண்டு. சிலர் சட்டத்துக்கு பயந்து தவறு செய்யாமல் இருக்கிறார்கள், சிலர் கடவுளுக்கு பயந்து தவறு செய்யாமல் இருக்கிறார்கள், சிலர் மற்றவர்களை துன்புறுத்த மனமின்றி தவறு செய்யாமல் இருக்கிறார்கள்.

    கடவுள் இல்லை என்று எல்லா மனிதர்களும் நினைத்துவிட்டால் கண்டிப்பாக குற்றங்கள் இன்னும் அதிகமாகி மனித இனமே அழியும் நிலைகூட வரலாம். நீங்கள் குறிப்பிடும் நீதி துறை, காவல் துறையும் இப்போதிருப்பதைவிட சீரழிந்து காணப்படும்.

    //அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப் பக்குவமே காரணம்.// இந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதிலும் கடவுள் நம்பிக்கைக்கு பங்குண்டு.

    பதிலளிநீக்கு
  6. //கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை//
    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி Robin.

    "கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், குற்றங்கள் அதிகமாகி மனித இனமே அழிந்துவிடும்” என்கிறீர்கள்.

    கடவுளை நம்பியதன் விளைவுதான் மதங்களின் தோற்றம்.

    உலகில் மதக்கலவரங்களால் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், கோடிகளைத் தாண்டும்.

    இது கடவுள் நம்பிக்கையால் விளைந்த தீமைகளில் ஒன்று.

    கடவுள் நம்பிக்கையால், இன்னும் பல தீமைகள் விளைந்திருக்கிறது என்று நம்புவதோடு நில்லாமல், இது போன்ற பல தீமைகளைப் பட்டியலிடவும் முடியும்.

    கடவுளை நம்பாவிட்டால் குற்றங்கள் அதிகமாகும் என்று நம்புகிறீர்கள்.கடவுளை நம்பாதவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அவர்களால் விளைந்த தீமைகளை உங்களால் பட்டியலிட முடியுமா?

    முடிந்தால் செய்யுங்களேன்.

    எந்தப் பட்டியல் மிக நீளமானது என்று பார்ப்போம்.

    ’அடுத்தவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’என்று எண்ணுகிற மனப் பக்குவத்தை ஏற்படுத்துவதிலும் கடவுள் நம்பிக்கைக்குப் பங்குண்டு என்கிறீர்கள்.

    ’கடவுளைப் பற்றிய எண்ணத்தைக் கைவிடு; மனிதனைப் பற்றி மட்டுமே கவலைப்படு’ என்று சொன்னால், கடவுளுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், அது எவ்வாறு என்று விளக்குவீர்களா?

    மனித வாழ்க்கையில், அவன் வாழ்ந்து செத்து முடிப்பதற்குள் பெறும் இன்பங்களைக் காட்டிலும் துன்பங்களே அதிகம்.

    கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் என்று மனிதனுக்கு மனிதன் இழைக்கும் துன்பங்கள்; பிற உயிர்களால் விளையும் துன்பங்கள்; வறுமைத் துன்பம்; நோய்த் துன்பம்...துன்பம்...துன்பம். இப்படி வாழ்க்கையே துன்ப மயமாக இருக்கிறது.

    இந்தத் துன்பங்களுக்குக் காரணம் கடவுள் இல்லையா?

    வேறு யார் காரணம்?

    வேறு யாரோ அல்லது, எதுவோ காரணம் என்றால், அத்துன்பங்களைப் போக்கக் கடவுள் என்ன செய்தார்?

    என்ன செய்தார் கடவுள்?

    ”துன்பத்தில் சிக்கித் துவண்டு செத்துக் கொண்டிருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களுக்காகக் கடவுள் ஒரு மயிரைக் கூடப் பிடுங்கிப் போட்டதில்லை” என்கிறான் ஒரு கவிஞன்.

    நான் அந்த அளவுக்குக் கடவுளைச் சாடவில்லை.

    துன்புறுவோருக்காக அவர் என்ன செய்தார்; செய்கிறார் என்றுதான் கேட்கிறேன்.

    சொல்லுங்கள் Robin.

    கடவுள் என்ன செய்தார்? செய்கிறார்? செய்துகொண்டிருக்கிறார்?
















    பதிலளிநீக்கு
  8. நண்பர் Robin அவர்களுக்கு,

    நான் தங்களுக்கு அளித்த பதிலின் மையப் பகுதியில், ‘வக்காலத்து வாங்கு’ என்னும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

    அவற்றிற்குப் பதிலாக, ‘பரிந்து பேசும்’ என்னும் சொற்களைப் பொருத்திப் படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. //உலகில் மதக்கலவரங்களால் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், கோடிகளைத் தாண்டும்.// உலகில் நாத்திகர்கள் செய்த கொலைகளை பட்டியலிட்டாலும் கோடிகளைத் தாண்டும்.

    //கடவுளை நம்பாவிட்டால் குற்றங்கள் அதிகமாகும் என்று நம்புகிறீர்கள்.கடவுளை நம்பாதவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அவர்களால் விளைந்த தீமைகளை உங்களால் பட்டியலிட முடியுமா?// ஸ்டாலின், மாவோ, போல்பாட் - இவர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைக்கும் சீனாவில் ஆத்திகர்கள் நாத்திகர்களால் துன்புறுத்தபடுகிறார்கள்.

    //இது கடவுள் நம்பிக்கையால் விளைந்த தீமைகளில் ஒன்று.// கடவுள் நம்பிக்கையால் விளைந்த நன்மைகளை பற்றியும் சிந்தித்துப் பாருங்களேன்.

    //’கடவுளைப் பற்றிய எண்ணத்தைக் கைவிடு; மனிதனைப் பற்றி மட்டுமே கவலைப்படு’ என்று சொன்னால், கடவுளுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், அது எவ்வாறு என்று விளக்குவீர்களா?// மனிதனுக்கு நன்மை செய்வதிலும் இறை நம்பிக்கைக்கு பங்குண்டு. சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

    //கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் என்று மனிதனுக்கு மனிதன் இழைக்கும் துன்பங்கள்; பிற உயிர்களால் விளையும் துன்பங்கள்; வறுமைத் துன்பம்; நோய்த் துன்பம்...துன்பம்...துன்பம். இப்படி வாழ்க்கையே துன்ப மயமாக இருக்கிறது.

    இந்தத் துன்பங்களுக்குக் காரணம் கடவுள் இல்லையா?// இல்லை. இந்தத் துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களே.

    //வேறு யாரோ அல்லது, எதுவோ காரணம் என்றால், அத்துன்பங்களைப் போக்கக் கடவுள் என்ன செய்தார்?
    என்ன செய்தார் கடவுள்?// இதில் கடவுள் செய்வதற்கு ஏதுமில்லை. நாம்தான் நல்லது செய்ய நினைக்கவேண்டும்.

    //”துன்பத்தில் சிக்கித் துவண்டு செத்துக் கொண்டிருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களுக்காகக் கடவுள் ஒரு மயிரைக் கூடப் பிடுங்கிப் போட்டதில்லை” என்கிறான் ஒரு கவிஞன்.// துன்பத்தில் சிக்கித் துன்புறும் எத்தனையோ உயிர்களுக்கு தன் அடியார்கள் மூலமாக எத்தனையோ முறை உதவியிருக்கிறார் கடவுள்.

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி Robin.

    //ஸ்டாலின், மாவோ...இன்றும் சீனாவில்...ஆத்திகர்கள் நாத்திகர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்.

    துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறீர்கள்.

    எப்படி?

    தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கா?.

    நான் குறிப்பிட்டது, சித்ரவதைகள்; கொடூரக் கொலைகள்...

    இது தொடர்பான ஒரு விவாதத்தில், இக்பால்செல்வன், அவர்களைத் தனிமனித வழிபாடு செய்யும் ‘போலி நாத்திகர்கள்’ என்று சொன்னதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    கடவுள் நம்பிக்கையால் விளைந்த நன்மைகளைச் சிந்திக்கச் சொல்கிறீர்கள்.

    கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்லி, அவரை நம்ப வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடப்பதால், கடவுளின் இருப்பு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று வாதிடுபவர்களில் நானும் ஒருவன்.

    அவ்வாறிருக்கையில், கடவுளால் நன்மை விளைகிறதென்றோ, தீமை விளைகிறதென்றோ நாங்கள் சொல்வதில்லை. கடவுளையே நம்பாத போது, அவ்வாறு சொல்வது முரணல்லவா?

    கடவுளால் அதிகம் தீமையே விளைகிறது என்பது கடவுளை நம்பச் சொல்பவர்கள் முன் நாம் வைக்கும் வாதம் அவ்வளவே.

    கடவுள் நம்பிக்கையைத் திணிக்க வேண்டாம். அம்முயற்சியைக் கைவிட்டு, வாழும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுங்கள் என்று வற்புறுத்தவே இம்மாதிரிப் பதிவுகள்.

    துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களே; கடவுள் செய்வதற்கு ஏதுமில்லை என்றால், அவரை ஏன் வழிபட வேண்டும்?

    யோசித்துப்பாருங்கள் Robin.

    மீண்டும் நன்றி நண்பரே.



    பதிலளிநீக்கு
  11. //துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறீர்கள்.
    எப்படி? தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கா?.// இணையத்தில் தேடிப்படியுங்கள். நாத்திகர்கள் ஆளும் நாடுகளில் இரும்பு திரையிடப்படுவதற்குக் காரணமே, அங்கு நடக்கும் அடக்குமுறைகள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான்.

    //இது தொடர்பான ஒரு விவாதத்தில், இக்பால்செல்வன், அவர்களைத் தனிமனித வழிபாடு செய்யும் ‘போலி நாத்திகர்கள்’ என்று சொன்னதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.// தவறு செய்யும் நாத்திகர்களையெல்லாம் போலி நாத்திகர்கள் என்பதெல்லாம் ரெம்ப பழைய தந்திரம். நாத்திகன் என்றால் இறை நம்பிக்கையற்றவன், அவ்வளவுதான். தனி மனித வழிபாடு செய்பவனும் நாத்திகந்தான்.

    //கடவுளால் அதிகம் தீமையே விளைகிறது என்பது கடவுளை நம்பச் சொல்பவர்கள் முன் நாம் வைக்கும் வாதம் அவ்வளவே. // கடவுள் நம்பிக்கையால் அதிக அளவு நன்மைகள் விளைகிறது என்பதே எனது வாதம்.

    //கடவுள் நம்பிக்கையைத் திணிக்க வேண்டாம். அம்முயற்சியைக் கைவிட்டு, வாழும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுங்கள் என்று வற்புறுத்தவே இம்மாதிரிப் பதிவுகள்.// நாத்திகத்தை மட்டும் நீங்கள் திணிக்கலாமா?


    பதிலளிநீக்கு
  12. //இரும்புத் திரையிடப்படுவதற்குக் காரணமே....//

    என்றாவது ஒரு நாள் இரும்புத்திரை உடைபட்டு, நாத்திகர்கள் எந்த அளவுக்குக் கொடுமை புரிந்தார்கள் என்பதை உலகம் அறியும் நாள் வருமல்லவா?

    அதுவரை உயிரோடு இருந்தால் [நான்] விவாதத்தைத் தொடருவோம்.

    சரியா?

    //கடவுள் நம்பிக்கையால் அதிக அளவு நன்மை விளைகிறது என்பதே என் வாதம்//
    என்னவெல்லாம் நன்மைகள் என்ற கேள்வியை ஏற்கனவே உங்கள் முன் வைத்திருக்கிறேன்.தெரியப்படுத்தினால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    //நீங்கள் மட்டும் நாத்திகத்தைத் திணிக்கலாமா?//

    என் பதிவின் தொடக்கத்தை இன்னொரு முறை படியுங்கள். ‘இதன் நோக்கம் சிந்திக்கத் தூண்டுவதே’ என்றிருக்கும். திணிக்க முயல்பவர்களிடம் இக்கேள்வியை முன் வைக்கலாம்.

    தொடரும் விவாதத்தின் மூலம் என் பதிவை கனமுள்ளதாக்குகிறீர்கள்.

    நன்றி Robin.




    பதிலளிநீக்கு
  13. இணையத்திலேயே எராளமான தகவல்கள் உண்டு. எதையும் தேடித் தெரிந்துகொள்ளமாட்டேன் என்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. //உலகில் நாத்திகர்கள் செய்த கொலைகளைப் பட்டியலிட்டாலும் கோடிகளைத் தாண்டும்//[அவசரப் பயணம் மேற்கொள்ள இருந்ததால் மதியம் இக்கருத்தைக் கவனிக்கவில்லை]

    அன்பு Robin,

    கொஞ்சமும் நடுநிலை உணர்வில்லாமல்,
    அப்பட்டமான பொய்யை முன் வைப்போருடன் நான் வாதிட விரும்புவதில்லை.

    மன்னியுங்கள்.

    இதை என் தோல்வி என்று தாங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.

    வாதத்தில் தாங்கள் வென்றுவிட்டீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகள்.

    மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  15. நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக எராளமான தகவல்களை தரமுடியும். ஆனால் நீங்களாக தேடி தெரிந்துகொள்ளவேண்டும் என்றே விரும்புகிறேன்.

    இறை நம்பிக்கையாளர்கள் செய்த மக்கள் நலப்பணிகள் குறித்த ஏராளமான தகவல்கள் இணையத்தில் உண்டு, ஏன் நீங்கள் நேரிலேயே பார்த்திருக்க முடியும். அது மட்டுமல்ல நாத்திகர்கள் ஆளும் நாடுகளில் நடக்கும் அடக்குமுறைகளை பற்றியும் எராளமான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. எதையும் தெரிந்துகொள்ளாமல் ஒன்றும் அறியா குழந்தையை போல பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

    தேடுங்கள் கண்டடைவீர்கள் :)

    பதிலளிநீக்கு
  16. நான் ஒன்றும் அறியா குழந்தை மாதிரிதான்.

    இணையம் என்று ஒன்று இருக்கிறதா?!

    அதைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  17. ////கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் என்று மனிதனுக்கு மனிதன் இழைக்கும் துன்பங்கள்; பிற உயிர்களால் விளையும் துன்பங்கள்; வறுமைத் துன்பம்; நோய்த் துன்பம்...துன்பம்...துன்பம். இப்படி வாழ்க்கையே துன்ப மயமாக இருக்கிறது.

    இந்தத் துன்பங்களுக்குக் காரணம் கடவுள் இல்லையா?// இல்லை. இந்தத் துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களே.//

    ராபின்,

    உங்களுடைய இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை இன்னொன்றை கொல்ல வந்தால் நீங்கள் தடுப்பீர்களா மாட்டீர்களா? நிச்சயம் தடுப்பீர்கள்.

    இதே மாதிரி கடவுளுக்கு எல்லோரும் பிள்ளைகள் தானே. எனவே ஒருவன் கொலை செய்ய வரும்போது தடுக்க வேண்டியது ஒரு அடிப்படை கடமையல்லவா? இதை கூட செய்ய வக்கில்லாத சோம்பேறி கடவுளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி Alien.

    சோம்பேறிக் கடவுள்!

    சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு