வியாழன், 4 ஜூலை, 2013

கேதார்நாத் கடவுளும் மறை கழன்ற கோயில் பூசாரியும்!

சாமி கும்புடுற எல்லாருமே சுயநலவாதிகள்தான்.

”என்னையும் என் குடும்பத்தாரையும்  நோய் நொடி இல்லாம காப்பாத்து”ன்னுதான் சாமியை வேண்டிக்கிறாங்களே தவிர, “ஊர் உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் நீ காப்பாத்தணும்”னு யாராவது வேண்டிக்கிறாங்களா? இல்லையே!

ஒரு சில இளிச்சவாயர்களைத் தவிர, மிச்சப்பேரெல்லாம் கோரிக்கை நிறைவேறின அப்புறம்தான் ‘நேர்த்திக் கடனை’ச் செலுத்துறாங்க. ”அடுத்த வாரம் செய்யுறேன்... அடுத்த மாசம் செய்யுறேன்”னு தவணை சொல்லிட்டே வந்து சாமிக்கே ‘அல்வா’ கொடுக்கிறவங்களும் இருக்காங்க!

“இந்தக் குறையை நிவர்த்தி பண்ணிக் குடுத்தீன்னா, உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறேன்”, ”உண்டியலில் பணம் போடுறேன்”, ”மொட்டை போடுறேன்”னு நேர்ந்துக்கிறதெல்லாம் வடிகட்டின முட்டாள்தனம்னு நினைக்கிறவன் நான்.

நாம தர்ற விருந்தை சாமி பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுதா? உண்டியலில் போடுற பணத்தை எடுத்துச் செலவு பண்ணுதா? காணிக்கையா தர்ற தலைமுடியை வித்துக் காசு பண்ணுதா? இல்லையே! எல்லார்த்தையும் மனுஷங்கதானே முழுங்கி ஏப்பம் போடுறாங்க. அப்புறம் எதுக்கு நேர்த்திக்கடன்?

கடவுள்கிட்டப் பேரம் பேசுறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத விஷயம்.
ஒரு கஷ்டம் வந்தா, கோயிலுக்குப் போயி, சூடம் பொருத்திக் கும்பிடுவேன் அவ்வளவுதான்.

என் கஷ்டம் தீர்ந்தா, அஞ்சோ பத்தோ உண்டியலில் போடுவேன். ”நீ நல்லா இருக்கணும் சாமி”ன்னு வாழ்த்திட்டு என் வேலையைப் பார்ப்பேன்.

சாமி கண் திறக்கலேன்னா என்ன செய்வேன் தெரியுங்களா?

நம்ப மாட்டீங்க, “நீயெல்லாம் ஒரு சாமியா? போயும் போயும் உன்கிட்டயா வேண்டுதல் வெச்சேன்”னு வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துடுவேன்.

திட்டுனா சாமி கோவிச்சுக்குமேங்கிற பயமெல்லாம் எனக்கு இல்லீங்க. தன்னைத் திட்டுறதையே தொழிலா வெச்சிருக்கிற நாத்திகர்களையே அது தண்டிக்கிறதில்ல. அப்பிராணி என்னையா தண்டிக்கும்?

 ஒரு சாமிகிட்ட ஒரு தடவைதான் கோரிக்கை வைப்பேன். அப்புறமும் கஷ்டம் வந்தா வேற சாமியைத் தேடிப் போயிடுவேன். ஊர் உலகத்தில் சாமிகளுக்கா பஞ்சம்?

சந்தர்ப்பவாதின்னு திட்டுறீங்களா? பரவாயில்லீங்க.

இந்தப் பதிவைப் படிச்சுட்டிருக்கிற நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா, நம்ம மக்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். சாமி நல்லது செய்யலேன்னாலும் அதைத் திட்டுற கெட்ட குணம் அவங்களுக்குக் கொஞ்சமும் இல்ல.

வறுமையாலயும் நோய் நொடிகளாலயும் ஆயிரக் கணக்கில் மக்கள் செத்துட்டே இருக்காங்க. அவ்வப்போது, சுனாமி மாதிரியான இயற்கைச் சீற்றங்களால லட்சக் கணக்கில் சாகுறாங்க. இதையெல்லாம் கடவுள் கண்டுக்கிறதில்லேன்னு நாத்திகர்களைத் தவிர வேறு யாரும் கடவுளைச் சாடுறதில்ல; மனுசன் செய்யுற தப்புகள்தான் இந்த மாதிரி அழிவுகளுக்கெல்லாம் காரணம்னு சொல்லுறதை வழக்கமா வெச்சிருக்காங்க!

உத்தரகாண்டில் பேய் மழை பெய்து வரலாறு காணாத அளவுக்கு நம் மக்கள் இறந்து போனாங்க. பாதிக்கப்படாதவங்க மட்டுமில்ல,  தப்பி உயிர் பிழைச்சவங்ககூட கடவுளைச் சாடலையே, கவனிச்சீங்களா?

“கடவுள்தான் காப்பாத்தினார்”னு சிலர் சொல்லவும் செய்யுறாங்க!

நீங்க எப்படியோ, என்னால கடவுளைத் திட்டாம இருக்க முடியல. பாவங்களைப் போக்கிப் புண்ணியம் சேர்க்கணும்னுதானே மக்கள் உத்தரகாண்டில் குடியிருக்கிற கடவுளைத் தேடிப் போனாங்க. தன்னைத் தேடி வந்தவங்களைக் காப்பாத்துறது அவரோட கடமை இல்லையா? ஏன் காப்பாத்துல? அப்புறம் எதுக்கு அவரைத் தேடிப் போகணும்? கும்பிடணும்?

தினம் தினம் தினசரிகளில் உத்தரகாண்டின் சோகங்களைப் படிக்கிறபோதெல்லாம் கடவுளைத் திட்டிட்டிருந்த நான், 23.06.2013 தேதியிட்ட தினத்தந்தியில், ஒரு செய்தியைப் படிச்சதும் ஆச்சரியத்தில் முழுகிப் போனேன். ‘கேதர்நாத் பேரழிவு பற்றி கோவில் பூசாரி பரபரப்புத் தகவல்’ என்னும் தலைப்பில் வெளியான  அந்தச் செய்தியை நீங்களும் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க படியுங்க.

‘கடந்த ஞாயிற்றுக் கிழமை [16-ந் தேதி] கேதர்நாத் கோயில் வளாகத்திலும், சுற்றுப்புறத்திலும் பேய் மழை கொட்டியது.

இரவு 08.15 மணிக்கு மக்களின் ”ஓ...”வென்ற அலறல் சத்தம். மந்தாகினி ஆறு பயங்கர ஆவேசப் பேரிரைச்சலுடன் கொந்தளிப்பதைக் கேட்க முடிந்தது. எங்களைச் சுற்றிலும் இருந்த மலைச் சிகரங்கள் வெடித்துச் சிதறுவது போலிருந்தது அந்தப் பேரிரைச்சல்.

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரரின் சமாதி, அவரின் இரண்டு சிலைகள், ஒரு ஸ்படிக லிங்கம், அனுமான் சிலை என்று எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போனது. நள்ளிரவு வரை 12 பேர் கோயில் வளாகத்தில் தங்கியிருந்தோம்.

மறுநாள் காலையில், நான் பார்த்த இடமெல்லாம் பிணங்கள்தான். அவற்றை நாய்களும் கழுகுகளும் தின்றுகொண்டிருந்தன.

மந்தாகினியின் பொங்கிப் பெருக்கெடுத்த வெள்ளம் மேலும் பல மலைகளைப் பெயர்த்து வீழ்த்தியது. பலர் மண்ணில் புதைந்தார்கள். மேலும் பலரை ஆறு அடித்துச் சென்றது.

ஒரு பூகம்பம் போல, சிவ தாண்டவம் போல, மரண நாட்டியம் போல எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. சிவலிங்கம் இருந்த கோவிலின் கருவறை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை.

மந்தாகினியில் வெள்ளம் பெருகிக்கொண்டே இருந்தது. அழிவுகளும் தொடர்ந்தன. உயிர் பிழைக்க ஓடிய நூற்றுக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்; பனிக்கட்டி போல் குளிர்ந்த சரஸ்வதி ஆற்றில் குதித்து நீந்திக் கரை சேர்ந்தேன்; பைரன் கோவிலை அடைந்தேன். கிராம வாசிகள் உதவினார்கள். ராணுவ ஹெலிகாப்டர்கள், மற்றவர்களோடு சேர்த்து என்னையும் மீட்டது. நான் இப்போது என் கிராமத்தில் இருக்கிறேன்.....’

இப்படியாகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கோவில் ’பூசாரி ரவிபட்’ முத்தாய்ப்பாகச் சொன்ன சொற்கள்தான் இந்த நிகழ்ச்சியின் ‘ஹை லைட்’!

அப்படி என்ன சொன்னார் அவர்?!

“இப்போது என் மனதில் உலா வரும் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கோவிலில் உள்ள என் சிவபெருமானை யார் கவனித்துக்கொள்வார்கள்? அங்கே யார் தீபம் ஏற்றுவார்கள்? யார் பூஜை செய்வார்கள்?”

”என் மனதில் உலா வரும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான்”னு அவர் சொன்னதைக் கவனிங்க.

 மக்கள் பிணங்களாய்க் குவிந்து கிடந்ததும், உயிர் தப்பினவங்க அடர்ந்த இருள் சூழ்ந்த மலைக் காடுகளில் ஊண் உறக்கமில்லாம அலைஞ்சி திரிஞ்சதும் இவருக்கு அடியோடு மறந்து போச்சு. சிவபெருமானின் அனாதரவான நிலை மட்டுமே  மனசை வருத்துது. ”தீபம் ஏற்றுவார் யார்? பூஜை செய்வார் யார்?”னு கேட்டுப் புலம்புற இவரைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. நான் நினைக்கிறதைச் சொல்லுறேன்..........

”முழுக் கிறுக்கன்.”

=====================================================================================