புதன், 18 செப்டம்பர், 2013

‘சாரு’வின்...தலையைச் சுற்றி ‘ஒளி வட்டம்’ வரையும் கேமரா!!!

பிரபல எழுத்தாளரும்,  சுவாரசியமான விறுவிறு சுறுசுறு நடையைக் கையாளுவதில் கில்லாடியுமான சாரு நிவேதிதாவை விமர்சனம் செய்ய நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இல்லாமலிருக்கலாம். எனினும், ‘கடவுளும் நானும்’ என்னும் நூலில் அவர் உண்மைச் சம்பவம் என்று குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி இப்பதிவுக்குத் தூண்டுதலாய் அமைந்துவிட்டது.

நீங்கள், அவர் எழுதிய ‘கடவுளும் நானும்’ என்னும் நூலை முழுதும் படித்திருந்தால், கீழ்க்காணும் இச்சம்பவம் [பக்கம்: 67] நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கும்.....

‘அவர் [அவருடைய குரு] பெயர் சிவஸ்வாமி. ஊர் மலேஷியா. அங்கேயே பிறந்து வளர்ந்தவர். மலேஷியத் தமிழில் பேசுவார். ஆங்கிலம்தான் தாய்மொழி மாதிரி. என்னுடைய கைத்தொலைபேசியால் அவரைப் புகைப்படம் எடுத்தேன். ப்ரிண்ட் போட்ட போது அவர் தலையைச் சுற்றி வெண்ணிற ஒளி வட்டம் [aura] இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கிறேன். எல்லாப் புகைப் படத்திலும் இந்த ஒளி வட்டம் வரத் தவறுவதே இல்லை. நான் எழுதுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவரை நீங்களே நேரில் சந்தித்து உங்கள் கேமராவின் மூலம் புகைப்படம் எடுத்துப் பார்க்கலாம்’

தூரிகையால் வரையப்படும் சாமி படங்களிலும், ‘மகான்’கள் என்று சொல்லப்படுபவர்களின் ஓவியங்களிலும் நாம் ஒளி வட்டங்களைப் பார்த்திருக்கிறோம்; பலரும் பார்த்திருக்கிறார்கள்.

கேமராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் இதுவரை எவரும் ஒளிவட்டம் பார்த்ததில்லை; பார்த்ததாகச் சொன்னதும் இல்லை.

ஒளி வட்டம் இருந்ததாக இந்தச் சாரு பொய் சொல்கிறாரே!

புளுகுகிறாரே!

‘அண்டப் புளுகு’ என்பார்களே, அது இதுதானா?

‘வேண்டுமானால் அவரை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துப் பார்க்கலாம்’ என்கிறாரே, இப்படியொரு அசாத்திய தைரியம் இவருக்கு எப்படி வந்தது?

நம் எல்லோரையும் அடிமுட்டாள்கள் என்று நினைத்துவிட்டதால்தானே?

சாரு அவர்களே,

நான்கு ஆண்டுகளுக்கு முன் [கடவுளும் நானும், முதல் பதிப்பு, டிசம்பர் 2008. உயிர்மை பதிப்பகம்] இந்நூலை எழுதியிருக்கிறீர்கள்.

இதுவரை, எத்தனை பேர் உங்கள் குரு சிவஸ்வாமியைப் புகைப்படம் எடுத்து, ஒளிவட்டத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றார்கள்?

பட்டியல் தருவீர்களா?

உங்கள் வழிகாட்டியான சிவஸ்வாமி, இப்போதும் தமிழ்நாட்டுக்கு வந்து போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு அவர் வருகைபுரிவது உண்மையாயின், அடுத்து அவர் வரவிருக்கும் தேதியை ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்துவீர்களா? அவரைப் படம் எடுக்க அனுமதி பெற்றுத் தருவீர்களா சாரு? 

ஒரு சந்தேகம்...உங்களைப் போன்ற குருபக்தி உள்ள பிரபலங்கள் பயன்படுத்தும் கேமராக்களில் மட்டும்தானா,  இல்லை, எங்களைப் போன்ற சாமான்யர்களின் படக்கருவிகளிலும் அந்த ‘ஒளி வட்டம்’ பதிவாகுமா?

சாரு சார் அவர்களே,

மேற்கண்ட கேள்விகளில் எதற்கும் நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள்...சொல்லவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

உங்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.....

‘பிரபல எழுத்தாளர்’ என்னும் அடைமொழியோடு திருப்தி அடையுங்கள்.

‘அண்டப் புளுகன்’,  ‘ஆகாசப் புளுகன்’, ’பிரபஞ்சப் புளுகன்’ என்பன போன்ற அசிங்கமான பட்டப் பெயர்களுக்கெல்லாம் ஆசைப்படாதீர்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$