செவ்வாய், 30 ஜூன், 2015

குருதி குடிக்கும் கடவுளின் ஆவியும் பண்டைய மதங்களின் விபரீத நம்பிக்கைகளும்!!!

#கடவுளிடம் நம்பிக்கை இழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. உலக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் கடவுளை நம்புகிறவர்கள் அல்ல#
இன்று உலகில், மிகக் குறைவான மதங்களே உள்ளன.

அவற்றில் குறிப்பிடத் தக்கவை, கிறித்தவம், இந்து, புத்தம், இஸ்லாம், ஜைனம், சீக்கியம், யூதம், ஷிண்டோ, தாவோ ஆகியன.

இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, இவை போலப் பிரபலமான பல மதங்கள் இருந்தன. அவை அனைத்தும் செத்து மடிந்துவிட்டன. [‘இறந்து போன மதங்கள்’-ஜோசப் இடமருகு. தமிழில்: த.அமலா, ‘மதமும் பகுத்தறிவும்’, சூலை, 2004].

அவற்றில் ஒன்று..........

அரேபியன் மதம்:

இம்மதம் பற்றிய ஒரு சுவையான தகவல்.....

அரேபியக் கடவுள்கள், பழிவாங்கும் மனப்பான்மை கொண்டவை. ஒருவனை யாரேனும் கொன்றுவிட்டால், கொல்லப்பட்டவனுடைய உறவினர்கள், கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும். தவறினால், இறந்தவனின் ஆவி, ஒரு குள்ளனின் வடிவில் வந்து கல்லறையில் அமர்ந்து, “கொலையாளியின் ரத்தம் வேண்டும். அதைக் குடித்தால் மட்டுமே என் தாகம் தீரும்” என்று மிரட்டுமாம்!

இம்மதம் அழியக் காரணமாக இருந்தது, இஸ்லாம் மதம். இஸ்லாமைத் தோற்றுவித்த முகம்மது ஆற்றிய உரைகளின் மூலம்தான் இது பற்றி அறிய முடிகிறதாம்

இம்மதம் போலவே, மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த எகிப்தியன் மதம், கிரேக்க மதம், வைதிக மதம், அத்வைத மதம், விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், கபாலிக மதம், தாந்திரீக மதம் போன்றவையும் காலப் போக்கில் அழிந்து போயின.

தாந்திரீகம், மிகவும் விநோதமானது.

இம்மதம் சார்ந்தவர்கள், சிவலிங்கத்துடன் பெண்ணின் பிறப்பு உறுப்பையும் வழிபடுவார்கள்.

இவர்களுடைய சக்தி வழிபாட்டில், நிர்வாணக் கோலம் கொண்ட ஆணும் பெண்ணும், தங்களைச் சிவன், சக்தி என நினைத்தவாறு உடலுறவு கொள்வார்களாம்!

முகம்மதியர்கள், எகிப்தைத் தாக்கி அழித்த போது, எகிப்தியர்கள் பின்பற்றிய எகிப்தியன் மதம் பூண்டோடு அழிந்ததாக வரலாறு சொல்கிறது.

கிரேக்க மதத்தை அழித்தவர்கள் கிறிஸ்தவர்கள்.

கிரேக்கர்களை வென்ற ரோமானியப் பேரரசர், கிறித்துவ மதத்தை அரசு மதமாக அங்கீகரித்தாராம்.

இவ்வாறு, அழிந்து போன மதங்கள் பற்றி எத்தனையோ சுவையான செய்திகள்; கதைகள் வரலாற்று நூல்களில் பதிவாகியுள்ளன!

இன்றுள்ள மதம்களும்கூடப் பல உட்பிரிவுகளுக்கு இடம் தந்து,  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு கடவுளின் பெயரால் கணக்கில் அடங்கா உயிர்களைப் பலியிட்ட...இடும் கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற காரணங்களால், மக்கள் மீதான இவற்றின் பிடி தளர்ந்து கொண்டிருக்கிறது.

முன்பு போல், கடவுளின் மகிமை பற்றிய பொய்ப் பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.

மக்கள், “ஏன்? எதற்கு? எப்படி?” என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பழகிவிட்டார்கள்.

குடும்ப உறுப்பினர்களும் உறவுகளும் தூற்றுவார்களே என்று அஞ்சித்தான் பெரும்பாலோர் கடவுளை வழிபடுகிறார்கள்; கோயில்களுக்குச் செல்கிறார்களே தவிர, மனப்பூர்வமாகக் கடவுளை நம்புவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

“கடவுளின் கிருபையால், ஊமை பேசினார்; முடமானவர் எழுந்து நடந்தார்; மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய் குணமானது” என்பனவாக இட்டுக் கட்டப்படும் பொய்களை அவர்கள் நம்பத் தயாராயில்லை.

“சாகக் கிடந்தவரைப் பிழைக்க வைத்தார் எங்கள் கடவுள்” என்று ஏதாவதொரு மதவாதி சொன்னால், “தேதி குறிப்பிடு. ‘இவர் செத்துப்போவது 100% உறுதி’ என்று மருத்துவர் குழு சான்றளித்த ஒருவரை உன் கடவுளின் அருளால் பிழைக்க வை. இதை  ஊடகங்கள் வழியாக நாங்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்” என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டினால் ஒழிய, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம் என்று எதையும் இனி மக்கள் நம்ப மாட்டார்கள். அவ்வாறு நிரூபிப்பதும் மிக...மிக...மிக.....மிக... நீண்ட...நீண்ட...நீண்ட..... நெடு...நெடு...நெடுங்கால முயற்சிக்குப் பின்னரும் சாத்தியப்படுகிற ஒன்றல்ல.

எனவே, சில நூறு ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து மதங்களும் அழிவைச் சந்திப்பது உறுதி என்கிறார்கள் நடுநிலைச் சிந்தனையாளர்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக