திங்கள், 7 செப்டம்பர், 2015

ஜோதிடம் பொய்...பொய்...பொய்...100% பொய்யே!

‘கோள்களிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ‘ஒளிக் கற்றைகள் பேரண்டத்தில் உள்ள இடைவெளிகள்[Cosmic distances] வழியாகப் பயணம் செய்து பூமியை வந்தடைகின்றன. ஒரு மனிதன் பிறக்கும்போது, கோள்களில் உருவாகி, பூமிக்கு வந்து சேர்கிற ஒளிக்கற்றைகளின் தாக்கத்தால் அவனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளும் ஏற்றத்தாழ்களும் அமைகின்றன.’

இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் ‘இது ஒரு மூடநம்பிக்கை’ என்பதை மக்களில் பெரும்பான்மையோரை நம்பவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்   கொஞ்சம் அறிவியல் அறிந்த ஜோதிடர்கள்.
சூரியன் ஒரு நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் சொல்வதை அலட்சியப்படுத்தி, அதையும் ஒரு கோள் என்றே கொண்டு ஜாதகம் கணிக்கிறார்கள். ஒன்பது கிரகங்களில் ஒன்று சந்திரன். அது சூரியனைச் சுற்றுவதாகப் பிதற்றிக்கொண்டு ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்று சொல்லி மக்களை அஞ்ஞானிகள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  இதை நினைவில் பதித்துக்கொண்டு மேலே படியுங்கள். 

விண்வெளியில் உலவும் கோள்களுக்கு ‘ஒளி’ உண்டா?

“இல்லை” என்பதே விஞ்ஞானிகளின் பதில்.

‘கிரஹங்கள் எனப்படுபவைகளுக்குச் சுயமான ஒளி என்பது இல்லை; ஒளியைப் பெற்று அதை வெளிப்படுத்தும் ஆற்றலும் இல்லை’ என்கிறது விஞ்ஞானம். 

சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்திராத ஜோதிடர்கள் அதையும் கோள்களின் பட்டியலில் சேர்த்தது தவறாகும்.

இதன் ஒளிக்கதிர்கள் மட்டுமே மனித உயிர்களின் மீது பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஏனைய கோடானு கோடி நட்சத்திரங்களை நோக்க, இது மட்டுமே பூமிக்கு மிக அருகில் இருப்பது காரணமாகும்.

பூமியிலிருந்து ஒன்பது கோடியே ஐம்பது லட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவில் இது இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் ஒளிக்கதிர், எட்டு நிமிடங்களில் பூமியை வந்தடைகிறது.

சூரியனை அடுத்து, பூமிக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் பூமியை வந்தடைய நாலே கால் ஒளி ஆண்டுகள் ஆகுமாம்.  கோடிக் கணக்கான மைல்கள் தொலைவில் அது இருப்பதே காரணமாகும்.

இம்மண்ணில், ஒரு மனிதன் நூறு ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால்,  அவன் தோன்றுகிறபோது நட்சத்திரங்களிலிருந்து வெளியாகிப் புறப்பட்டு வருகிற  ஒளிக்கதிர்கள் மனிதர்களைப் பாதிப்பதே இல்லை. , அவன் பிறக்கும்போது தானும் வெளிப்பட்டு, பயணத்தைத் தொடங்குகிற ஒளிக்கற்றை, அவன் இறந்த பிறகே பூமிக்கு வந்து சேர்கிறது.

ஆக, நட்சத்திரங்களிலிருந்துதான் ஒளிக்கதிர்கள் வெளியாகின்றனவே தவிர, கிரகங்களிலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிப்படுவதில்லை; அக்கிரகங்களால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொண்டு, ஜோதிடம் பார்ப்பதை இனியேனும் நம் மக்கள் தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.
*****************************************************************************************************************************************************

உதவிய நூல்: S.D.விவேகி அவர்களின், ‘வேதமும் விஞ்ஞானமும்’ என்னும் நூல். அங்குசம் வெளியீடு; சென்னை. முதல் பதிப்பு: டிசம்பர், 2009.

*****************************************************************************************************************************************************

தொடர்வது, ‘ஜோதிடக் கொலைகள்” என்னும் என் பழைய பதிவு. மனமிருந்தால் வாசியுங்கள்!

ஜோதிடத்தைக் ‘கலை’ என்றார்கள்; இப்போதெல்லாம் ‘விஞ்ஞானம்’ என்கிறார்கள்; “பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாகச் சேர்” என்று முழக்கமிடுகிறார்கள்.

நான் ஜோதிடத்தில் ‘தற்குறி’; விஞ்ஞானமும் தெரியாது. எனவே, இது பற்றி உங்களுடன் விவாதிப்பதற்கான ‘தில்’ எனக்கு 'Nil'.

 ஜோதிடம் பற்றிய நூல்கள் சிலவற்றை ஏற்கனவே படித்திருந்தாலும், நேற்றுப் படித்த, ‘அருணன்’ என்பாரின் ‘மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை’ [நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நான்காம் அச்சு. டிசம்பர், 2005] என்னும் நூல் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது. அதிலிருந்து, அனல் பறக்கும் சில கருத்துகளை உங்களுக்குப் படைக்கிறேன்! [ஜோதிடர்களை முன்னிலைப் படுத்தியது என் கைங்கரியம்!]

                                  *                                 *                             *

“பலாநிக்ரஹ சாரேண ஸுசயந்தி மநீஷிண: கோ வக்தா தாரதம்யஸ்ய தமேகம் வேதஸம் விநா” என்பது காளிதாசனின் வாக்கு. ‘என்னதான் கிரஹங்களின் அசைவுகளைக் வைத்து, சோதிடர்கள் பலன்களைச் சொன்னாலும், இதுதான் நடக்கும் என்று நம்மைப் படைத்த பிரம்மனைத் தவிர வேறு யாராலும் திட்டவட்டமாகக் கூற முடியாது’ என்பது இதன் பொருள்.

ஜோதிட திலகங்களே,

‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின் சஞ்சாரத்தைக்கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது’ என்கிறீர்கள். நீங்கள் சொல்லுகிற பலாபலன்கள் பொய்த்துப் போனால், எங்களின் ‘கணிப்பில்’ தவறு நேர்ந்திருக்கலாம் என்று சொல்லி உங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தாமல்,  பிரம்மாவைத் துணைக்கு அழைக்கிறீர்களே அது ஏனய்யா?

. இன்றும்கூட, சூரியனை ஒரு கிரகமாகக் கருதியே பலன் சொல்கிறீர்கள்; சூரியன் ஒரு கிரகமே[planet] அல்ல; அது ஒரு நட்சத்திரம்[Star] என்கிறது விஞ்ஞானம். ஒரு நட்சத்திரத்தைக் கிரகம் எனக்கொண்டு உங்கள் மூதாதையர் ஜோதிடக்கலையை உருவாக்கியது தவறு என்பதை ‘ஜோதிட விஞ்ஞானி’களான நீங்கள் இன்று உணர்ந்திருப்பீர்கள். அந்தத் தவறுகளைத் திருத்தி, ஜோதிடத்தைப் புதுப்பிக்க உங்களால் முடியுமா?

கிரகங்களில் ஒன்றான ‘பூமி’ உங்களின் ‘கிரகப் பட்டியலில்’  இடம்பெறவில்லையே, ஏன? அதற்கும் ‘தோஷம்’ இருக்கிறதா?

ஒன்பது கிரகங்களில் ஒன்று சந்திரன். அது சூரியனைச் சுற்றுவதாகப் பிதற்றிக்கொண்டு ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்று சொல்லி மக்களை அஞ்ஞானிகள் ஆக்குகிறீர்களே, இது நியாயமா?

ராகு,கேது என்ற பெயர்களில் கிரகங்களே இல்லை. அப்புறம் எப்படி கிரகங்களின் எண்ணிக்கை ஒன்பதாயிற்று? ‘அவை நிழல் கிரஹங்கள் என்பது பின்னர் வந்த மகரிஷிகளால் ஏற்கப்பட்டது’ என்று சமாளிக்கிறார்கள்.......

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் இந்நாள்வரை உங்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை!

இவ்வாறாக, அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்ட இந்த ஜோதிடத்தைக் கைவிட மனமில்லாமல் கட்டிப்பிடித்துக்கொண்டு, இது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட கலை என்று ஜல்லியடிக்கிறார்கள். இருக்கட்டும். 

பெண்கள் ருதுவாகிற நேரத்தை வைத்து, உங்கள் மூதாதையர் சொல்லி வைத்த பலன்களை ஒருமுறை நினைவுகூருங்கள்..........

‘ஞாயிறு புத்திரர் குறைவாக இருப்பர்.
திங்கள் பதிவிரதையாக இருப்பாள்.
செவ்வாய் மாங்கல்ய பலம் குறைவாகும்.
புதன் விசேஷ சம்பத்து உண்டாகும்.
வியாழன் நல்ல செல்வம் படைத்தவள் ஆவாள்.
வெள்ளி ஆரோக்கியமாக இருப்பாள்.
சனி சோரம் போவாள்’

இந்தச் சூத்திரத்தின்படி, திங்களில் பிறந்த அத்தனை பெண்களும் பதிவிரதைகள்! இதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. சனியில் பிறந்த அத்தனைபேரும் சோரம் போகிறவர்கள் என்கிறீர்களே, இது அடுக்குமா? பெண் பாவம் பொல்லாதது என்கிறார்களே, இது நீங்கள் அறியாததா?

பெண்ணின் நட்சத்திரம் ‘மூலம்’ என்றால் மாமனாருக்கு ஆகாது. ஆயில்யம் என்றால் மாமியாருக்கு ஆகாது. [மாமனார் நட்சத்திரம் மூலம் என்றாலோ, மாமியாருடையது ஆயில்யம் என்றாலோ அவை மருமகளைப் பாதிப்பதில்லையே ஏன்?] இந்த தோசங்கள் எல்லாம் ஆண்களுக்குக் கிடையாது. காரணம், இப்படிப் புளுகி வைத்தவர்கள் எல்லோருமே ஆண் ஜோதிடர்கள்!

பெண்களைப் பொருத்தவரை, தோஷங்களுக்கெல்லாம் பெரிய தோஷம் செவ்வாய் தோஷம்.

செவ்வாய் தோஷமுள்ள ஆடவனைத் தேட வேண்டும். அலைந்து திரிந்து ஒருவனைக் கண்டுபிடித்தாலும் கழுத்தில் மூன்று முடிச்சிப் போடச் செய்வது அத்தனை சுலபமா என்ன?!

ஓ...ஜோதிடச் சக்ரவர்த்திகளே,

இந்தச் செவ்வாயைச் சுட்டிக்காட்டி மிரட்டி எத்தனை எத்தனை முதிர்கன்னிகளையும் முதிர்காளைகளையும் வாடி வதங்க வைத்திருக்கிறீர்கள்!

ஜோதிடம் ஒரு கலை; விஞ்ஞானம் என்று சொல்லிக்கொண்டு இனியும் மக்களை அறிவிலிகள் ஆக்க வேண்டாம். வேறு தொழில் தேடிக்கொள்வது உத்தமம்.

‘நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’

*****************************************************************************************************************************************************





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக