அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

கவிஞர் வைரமுத்துவின் கடவுள்!!!

ஈரோடு புத்தகத் திருவிழாவில், ‘அறிவே கடவுள்’ என்னும் தலைப்பில் உரையாற்றியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து[’தி இந்து’ 09.08.2017]. உரையின் தலைப்பிலேயே நம்மைக் குழப்புகிறார் கவிஞர்!
‘கடவுள் என்பவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது எப்போதும் இருந்துகொண்டே இருந்தவர்; இருக்கிறவர்; இனியும் இருப்பவர். அவர் ஒப்புமைக்கு அடங்காத பேராற்றலும் பேரறிவும் வாய்ந்தவர். அன்புருவானவர்; அருள் வடிவானவர்.....’ என்றிப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அவருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் ஆன்மிக நெறியில் ஊறித் திளைத்தவர்கள்.

கடவுளுக்கான விளக்கம் இவ்வாறு மிகப் பரந்து விரிந்த ஒன்றாக இருக்கையில், கவிஞர் வைரமுத்து அவர்கள், “அறிவே கடவுள்” என்று வெகு சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். 

அறிவு மட்டுமே கடவுளாக முடியுமா என்று அவர் கிஞ்சித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

[‘மொழியைக் கண்டறிந்தவனே உலகின் முதல் கடவுள்” என்றும் சொல்லியிருக்கிறார். மனிதன் கடவுள் ஆனது எப்படி என்று புரியவில்லை].

அறிவு என்பது சிந்திக்கப் பயன்படுவது. அது பிற உயிர்களுக்கும் வாய்த்திருக்கிறது. மனிதன் அதைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறான். 

இந்த அறிவை, ‘அறிவு’ என்றே குறிப்பிடலாமே? அதை ஏன் அவர் ‘கடவுள்’ ஆக்கினார்? கடவுள் என்று உருவகம் செய்யாமல் ‘அறிவு’ என்று மட்டும் குறிப்பிட்டால் அதன் தகுதி அல்லது தரம் குறைந்துவிடுமா? மக்கள், அறிவு என்று ஒன்று இருப்பதை ஏற்க மாட்டார்களா?

தொடரும் தம் உரையில், “மனிதர்களின் கேள்விக்கு விடை கிடைக்காத இடத்தில் கடவுள் இருக்கிறார்” என்றும் சொல்லியிருக்கிறார். 

மனிதர்களின் கேள்வி என்ன? ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்பதுதானே? ‘விடை கிடைக்காத இடத்தில் கடவுள் இருக்கிறார்’ என்று சொல்வதன்[சொல்பவர் அவர்தான்] மூலம் அந்தக் கேள்விக்கான விடையை மனிதனால் கண்டறிய இயலாது என்பதுதான். ஆக, கடவுளின் ‘இருப்பை’ மனிதனால் புரிந்துகொள்ள இயலாது என்கிறார்.

இப்படிச் சொன்ன அவர், தொடர்ந்து, “மனிதன் தன் அறிவுப் பூட்டைத் திறக்கும்போது கடவுள் புன்சிரிப்புடன் நகர்ந்துகொள்கிறார்” என்றும் குறிப்பிடுகிறார். 

மனிதன் மிக ஆழமாகச் சிந்திக்கும்போது, கடவுள் புன்சிரிப்புடன் காணாமல் போகிறாராம். இதற்கு என்ன பொருள்?

‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். மனிதனின் அறிவால் அவரை அறிய முடியாது’ என்பதா? அல்லது, கடவுளே இல்லை என்பதா?

‘கடவுள் இல்லை’ என்பது அவருடைய கொள்கை என்றால், ‘கடவுள் இல்லை’ என்று அப்பட்டமாகச் சொல்ல வேண்டியதுதானே? ‘மறைகிறார்[அதுவும் புன்சிரிப்புடன்] என்று மூடுமந்திரமாகப் பேசியது ஏன்?

இவரின் இந்த நிலையை, ‘இரட்டை வேடம்’ என்று சொல்லலாமா? “ஆம்” என்றால்.....

யாரைத் திருப்திபடுத்த இந்த இரட்டை வேடம்? ஆத்திகர், நாத்திகர் என்னும் இரண்டு தரப்பினரையுமா?

வைரமுத்து நல்ல கவிஞர்; எழுத்தாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தங்குதடை இல்லாமல் பேசுவதில் வல்லவர். 

‘பேசட்டும். எவ்வளவும் பேசட்டும்; எதைப் பற்றியும் பேசட்டும். அந்தப் பேச்சு மக்களுக்குப் பயன்படுதல் வேண்டும்; அவர்களின் நேரத்தை வீணடிப்பதாக இருத்தல் கூடாது’ -இது நம் விருப்பம்.
=====================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக