புதன், 9 ஆகஸ்ட், 2017

என் கதை முன்னே! ‘நோட்டா’ பின்னே!!

தேர்தலில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (None Of The Above NOTA) என்ற பொத்தானை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘நோட்டா (NOTA)’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2013 டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது.
1993ஆம் ஆண்டில் ‘செல்லாத வாக்கு’ என்னும் தலைப்பில், ‘ராணி’ வார இதழில்[17.10.1993] ஒரு கதை எழுதினேன். இந்த ‘நோட்டா’ அறிமுகத்துக்கு மூல காரணமே நான் எழுதிய இந்தக் கதைதான்[ஹி...ஹி...ஹி!] என்று நான் சொன்னால் நகைப்பீர்களா, ஆமோதிப்பீர்களா?!
கதை:  
முதல் ஓட்டுப் போடலாமென்று ஆறு முப்பதுக்கே வாக்குச் சாவடிக்குப் போனான் கணேசன். 
நீண்ட வாக்காளர் வரிசை அவனுக்குப் ‘பெப்பே’ காட்டியது. ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு வரிசையில் நின்றான்.
சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ‘வரிசை’ உயிர் பெற்று நகரலாயிற்று.
எதேச்சையாக வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறிய அந்த உருவத்தைப் பார்த்ததும் கணேசன் அதிர்ச்சியடைந்தான்; ஆத்திரப்பட்டான்.
அந்த உருவம்.....
மூர்த்தி!
“நம் தொகுதியில் போட்டியிடும் அத்தனை பேருமே ஊழல் பேர்வழிகள்; அயோக்கியர்கள். நம் தொகுதி வாக்காளர்கள் இவர்களில் எவருக்கும் வாக்களிக்கக்கூடாது. ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு முந்தா நாள்வரை தெருத்தெருவாய் முழக்கம் செய்தானே அந்த மூர்த்திதானே இவன்?
இன்று முதல் ஆளாய்த் தன் ஓட்டைப் போட்டுவிட்டு வருகிறானே. ஓட்டுக்கு எவ்வளவு வாங்கியிருப்பான்? எத்தனை பேரிடம் வாங்கினான்? இவனைச் சும்மா விடக்கூடாது.’ -கணேசன் மனதுக்குள் கருவினான்.
‘அரசியல்வாதிகளே, கள்ளச் சாராயப் பேர்வழிகளையும் கோயில் கொள்ளையர்களையும் விபச்சார்த் தரகர்களையும் எங்கள் தொகுதியின் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறீர்கள். இவர்களைத் திரும்பப் பெறுங்கள். நல்லவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். மறுத்தால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்று சுவர் சுவராய் அறிக்கை ஒட்டிய அந்த மூர்த்திதான் இவன். இவனை உண்டு இல்லயென்று ஆக்கிவிட முடிவெடுத்தான் கணேசன்
வரிசையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மூர்த்தியை எதிர்கொண்டான்.
“மூர்த்தி எங்கே இந்தப் பக்கம்?” -குரலில் கிண்டல்.
”ஓட்டுப் போடத்தான் வந்தேன். வந்த வேலை முடிந்தது” என்றான் மூர்த்தி.
“ஓட்டுப் போடவா? நீயா?”
“ஆமா. நானேதான். என் கோரிக்கை எதுவும் நிறைவேறல. வாக்குச் சாவடிப்பக்கம் வரக் கூடாதுன்னுதான் இருந்தேன். அரசியல்வாதிகள் கள்ள ஓட்டுப் போட ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதாக் கேள்விப்பட்டேன். என்னுடைய ஓட்டையும் எவனாவது போட்டுட வாய்ப்பிருக்குன்னு நினைச்சேன். விலை மதிப்பற்ற என் வாக்கு காசுக்கு விலை போவதை நான் விரும்பல. தகுதியில்லாத ஒரு வேட்பாளருக்கு அது போடப்படுவதையும் தடுக்க நினைச்சேன். முதல் ஆளா வரிசையில் நின்னு என் வாக்கைச் செல்லாததா ஆக்கிப் போட்டுட்டேன். சொல் ஒன்னு செயல் ஒன்னுன்னு ஊரை ஏமாத்துற ஆள் நான் இல்லை.”
இடத்தைக் காலி செய்தான் மூர்த்தி.
திகைப்பிலிருந்து விடுபடச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன கணேசனுக்கு!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக