எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

அவர்கள் முதலில்! அப்புறம்தான் வைரமுத்து!!

'ஆண்டாள்' குறித்த சர்ச்சையில், வைரமுத்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்துமதக் காப்பாளர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டவர்கள்; மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்; அதற்குக் கெடுவும் விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.....தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்துமதம் சார்ந்த மக்கள் தம் பின்னால் அணிவகுப்பார்கள் என்னும் தவறான நம்பிக்கையில்.

''சமஸ்கிருதமே தேவ பாஷை. தமிழ் நீச பாஷை'' என்று சொன்னவர்கள் அவர்கள்;  இன்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கோயில்களில் அர்ச்சனைமொழி சமஸ்கிருதம்தான். போனால்போகிறதென்று எப்போதாவது தமிழையும் பயன்படுத்துவார்கள்.
'நீச பாஷை'  என்று அவர்களால் இழிவுபடுத்தப்பட்ட தமிழ் மொழியில் பாடிய ஆண்டாள் தாயாருக்குக் களங்கம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள் இன்று; போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல; சில நூறல்ல பல நூறல்ல, கடவுளின் பெயரால் ஆயிரக்கணக்கில் மூடநம்பிக்கைகளைக்  திணித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தவர்கள்..... மழுங்கடித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.