வியாழன், 22 மார்ச், 2018

தன் பூணூல் அறுத்த அக்கிரகாரத்து அதிசய அறிஞன்!

வ.ராமசாமி என்னும் இயற்பெயர் கொண்ட 'வ,ரா.' மிகச் சிறந்த எழுத்தாளர்; சிறந்த பத்திரிகையாளர்; அறிஞர் அண்ணாவால், 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' என்று பாராட்டப்பட்டவர்; பகுத்தறிவாளர்.

உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தண்டிக்கப்பட்டு ஆறு மாதம் சிறையில் இருந்தபோது, 'வாட் ஈஸ் பொயட்ரி?' என்னும் நூலை இயற்றியவர்.

நான்கு நாவல்களையும், ஏராளமான கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் வரலாற்று நூல்களையும் வழங்கிய அற்புதப் படைப்பாளர்.

'உரைநடைக்கு வ.ரா' என்று பாரதியார் இவரைப் பாராட்டியுள்ளார்.

இளம் எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவித்த பண்பாளர் வ.ரா.

சொல் வேறு, செயல் வேறு என்றில்லாமல் தன் கொள்கைக்கிணங்க வாழ்ந்துகாட்டிய உயர் குணச் செம்மல். தன் பரம்பரையினர் பின்பற்றிய மூடநம்பிக்கைகளைக் கண்டித்ததோடு, அவற்றைப் புறக்கணித்து வாழ்ந்த சீரிய சிந்தனையாளர்.

தான் சார்ந்திருந்த சாதியின் அடையாளமான பூணூலை அறுத்தெறிந்து புரட்சி செய்த துணிச்சல்காரர். மனித நேயம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய வ.ரா. என்றென்றும் மறக்க இயலாதவர்; மறக்கக்கூடாதவரும்கூட.

வ.ரா.வை மறவோம்! அவர் வழியில் பகுத்தறிவு நெறி போற்றுவோம்!!
=================================================================================

உதவி: பாபநாசம் குறள்பித்தனின் 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மேதை'; ஜெயம் பப்ளிகேசன்ஸ், தி.நகர்; சென்னை.


இது ஒரு குட்டிப் பதிவு. எனவே, ஒரு குட்டிக்கதையையும் இணைத்திருக்கிறேன். உங்களை மகிழ்விக்கத்தான். படியுங்கள்.

 கதை:                                                     மட்டும்  

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய மகனிடம், “ஏண்டா குப்பு, நாளைக்கி லீவு போட்டுட்டு வந்தியா?” என்றார் அவன் அம்மா வேலம்மா.

“இல்லம்மா.”

“பொண்ணுப் பார்க்கப் போகணும். லீவு போடுடான்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேனேடா?” -முகம் சுண்டினார் வேலம்மா.

“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறியே.''

''வேலை கிடச்சதும் பண்ணிக்கிறேன்னு சொன்னே. வேலைக்குப் போயி வருசம் ஒன்னாச்சி. மறந்து போச்சாடா?”

“இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்.”

அதிர்ச்சியடைந்த வேலம்மா, “காரணத்தைச் சொல்லுடா”  என்றார்.

''நான் பொடியனா இருக்கும்போதே அப்பா இறந்துட்டார். இருபது வருசம் போல கூலி நாழி செஞ்சி என்னை வளர்த்து ஆளாக்கினே; படிக்க வைச்சே. அந்த இருபது வருசமும் உன் ஒரே மகனான எனக்கே எனக்காக  மட்டுமே நீ வாழ்ந்தே. இரண்டே இரண்டு வருசமாவது இன்னொருத்திக்குப் பங்கு கொடுக்காம உனக்கே உனக்காக மட்டுமே நான் வாழ ஆசைப்படுறேம்மா. இனியும் கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை வற்புறுத்தாதே”  என்று உறுதிபடச் சொன்னான் குப்புசாமி.

கண் கலங்கினார் வேலம்மா.

=================================================================================
கதை வெளியான இதழ்?

இதுவரை எந்த இதழுக்கும் கொடுப்பினை இல்லை!!!