அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 28 மார்ச், 2018

திருப்பதி தாங்குமா?!?!?!

'திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஶ்ரீராம பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஶ்ரீதேவி, பூதேவி சமேதரராய் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இரவில், உற்சவ மூர்த்திகளை அர்ச்சகர்கள் கோயிலுக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது, ஒரு அர்ச்சகரின் கையிலிருந்த பூதேவி சிலை கை தவறிக் கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த அர்ச்சகர்கள் உடனடியாக அந்தச் சிலையை எடுத்து, இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பரிகார பூஜைகள் செய்தனர். வயது முதிர்ந்த அர்ச்சகரின் கை நடுக்கத்தால் அந்தச் சிலை கீழே விழுந்ததாகத் திருப்பதி தேவஸ்தானம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது// - இது இன்றைய 'தி இந்து'[28.03.2018] நாளிதழ்ச் செய்தி.

அர்ச்சகரோ இச்சகரோ நாம் யாவரும் மனிதர்களே,

ஒரு பொருளைக் கையாளும்போது சில வேளைகளில் அது கையிலிருந்து நழுவுதல் தவிர்க்க இயலாதது; இதற்குக் கடவுளர் சிலைகளும் விதிவிலக்கல்ல.

தவறி விழும்போது சிலைக்குச் சேதாரம் ஏற்படலாம். கடவுளுக்குப் பாதிப்பு நேருமா? அர்ச்சகர்கள் யோசித்திருக்க வேண்டும்.

கடவுள் எங்கும் நிறைந்தவர். அணுவிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார் என்னும் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்காகச் சிலை வழிபாடு ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆக, மனிதர்கள் தம் வசதிக்காகவே கடவுளர் சிலைகளை உருவாக்கினார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பழுதடைவதோ தவறிக் கீழே விழுவதோ இயற்கை.

இதை உணராமல் இந்தப் பகுத்தறிவு யுகத்திலும், அர்ச்சகர்கள் அச்சம் கொள்வதும் பரிகார பூஜை செய்வதும் அறிவுடைமை ஆகாது.

[தெய்வக் குத்தம் நேர்ந்துவிட்டதாக நம்புவது, பரிகார பூஜைகள் செய்வது போன்றவற்றைக் கவனத்தில் கொண்டுதான், கடவுள் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன என்று நம் போன்றவர்கள் சொல்ல நேர்கிறது].

இதே செய்தியை இன்றைய 'தினகரன்'[28.03.2018] நாளிதழும் வெளியிட்டிருக்கிறது. செய்தியறிந்து, பக்தகோடிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் அது குறிப்பிட்டிருக்கிறது.

திருப்பதி மலைக்கோயில் 'பக்தர்களால் 'கலியுக வைகுண்டம்' என்று போற்றப்படுவதாக ஒரு கூடுதல் செய்தியையும் அது வெளியிட்டுள்ளது. 

இது தெரிந்தால் ஊருலகத்திலுள்ள அனைத்துக் குடுகுடு கிழடுகள்[நான் உட்பட] மட்டுமல்லாமல் சாவோடு சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் அத்தனை பாவப்பட்ட ஜென்மங்களும் திருப்பதி சென்று நிரந்தரமாய் 'டென்ட்' அடித்துவிடுமே, திருப்பதி தாங்குமா?!
-----------------------------------------------------------------------
உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ கீழ்வரும் நிமிடக் கதையையும் படிச்சுடுங்க.

கதை:                                            சேணம்

 “வர்றேம்மா...” -புறப்படப்போன வேலைக்காரி தங்கம்மா தயங்கி நின்றாள்.

“என்ன தங்கம்மா?” -முதலாளியம்மா கேட்டாள்.

“என் மகன் முத்துவோட உடுப்பெல்லாம் கிழிஞ்சிடிச்சி. புதுசு எடுக்கணும். ரெண்டாயிரம் ரூபா குடுங்க. மாசா மாசம் சம்பளத்தில் பிடிச்சுக்குங்க” என்றாள் முனியம்மா.

“முத்துக்கு என்ன வயசு?”

“பத்து நடப்புங்க.”

“சொல்றேன்னு தப்பா நினைச்சுடாதே” என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் முதலாளியம்மா, “எங்க யுவனுக்கு முத்து வயசுதான். அவன் போட்டுக் கழிச்ச பழைய டிரஸ் நிறைய இருக்கு. எதுவும் கிழியல; சாயம் போகல. கொஞ்சம் செட் தர்றேன். முத்து உடுத்துக்கலாம். தரட்டுமா?”

மீண்டும் தயக்கத்திற்குள்ளான தங்கம்மா, “நீங்க சாப்பிடுறதில் மீந்துபோனதை எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நாங்க எல்லோரும் சாப்பிடுறோம். அது மாதிரி இது இல்லீங்க. நீங்க உடுத்துறது உயர்ந்த ரகத் துணி. நாங்க உடுத்துறது படு மட்ட ரகம். உங்க உயர்ந்த ரகத் துணிகளை நாங்க போட்டுகிட்டா, அது குதிரைக்குப் போடுற சேணத்தைக் கழுதைக்குப் போட்ட மாதிரி இருக்கும். என்னை மன்னிச்சுடுங்கம்மா. துணி வேண்டாம். பணம் மட்டும் குடுங்க போதும்” என்றாள்.
=================================================================================