அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 30 ஜூன், 2018

காவேரிக் கதைகள்!!!

காவிரியைப் 'புண்ணிய நதி' என்கிறது பழம் புராணம். 'தேவலோகக் கன்னியர்கள் கொஞ்சிக் குலாவி நீராடிய நதி' என்கிறார் வால்மீகி. 'கங்கையினும் புனிதமானது' என்றும், 'தமிழ்ப் பாவை' என்றும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள் நம் புலவர்கள்.
குடகு மலையில் பிறக்கிறது காவிரி. ஊற்றாக உருவெடுத்து, பூமிக்கடியில் நகர்ந்து, சில இடங்களில் ஆடு தாண்டுகிற அளவுக்கு அகலம் குறைவாகவும், சில இடங்களில் மிக அகன்றும், சில இடங்களில் அருவியாகவும், மேலும் சில இடங்களில் நீர்த் தேக்கங்களாகவும் உருமாறி நெடுந்தொலைவுக்குப் பயணிக்கிறது இந்தக் காவிரி. 

இதன் தோற்றம் குறித்து, நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற கதைகள், நம்ப முடியாதவை என்றாலும் வெகு சுவாரசியமானவை.

முன்னொரு காலத்தில், சூரபத்மன் என்னும் அசுரனின் அடாவடித் தனங்களிலிருந்து தப்பிக்க எண்ணிய தேவேந்திரன், தமிழகத்தின் சீர்காழியில் வந்து தங்கினான்; சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்த நந்தவனம் அமைத்தான்.

போதிய தண்ணீர் இல்லாமையால், நந்தவனச் செடி கொடிகள் செழிப்பாக வளரவில்லை. விசாரித்ததில், அகத்தியரின் கமண்டலத்தில் எடுக்க எடுக்கக் குறையாத நீர் இருப்பதாக நாரதர் சொன்னார்.

தேவேந்திரன் விநாயகரைப் வழிபட, அவர் குடகு மலைக்குச் சென்று அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அது ஆறாகப் பெருக்கெடுத்து வந்து இந்திரனின் 'கா'[நந்தவனம்]வில் பாய்ந்து அதைச் செழிக்கச் செய்தது. இவ்வகையில்தான் இந்த ஆறு 'காவிரி' என்று பெயர் பெற்றது.

அடுத்த கதை.....

பிறிதொரு காலத்தில், குடகு நாட்டின் 'பிரமகிரி' மலையில் காவேரி முனிவர் அவரின் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். பிள்ளைப் பேறு இல்லாததால், பிரமனை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.

அவரின் தவத்தை மெச்சி நேரில் காட்சியளித்த பிரமன், ''போன பிறவியில் நீர் செய்த பாவங்கள் காரணமாகத்தான் உமக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. எனினும், இப்போது நீர் செய்த தவத்தை ஏற்று என் வளர்ப்பு மகளான லோப முத்திரையை உமக்குப் பரிசாகத் தருகிறேன்'' என்று சொல்லி, சொன்னபடியே தன் மகளை ஒப்படைத்துவிட்டு மறைந்தார்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, காவேரி முனிவரும் அவரின் மனைவியும் இறந்தார்கள். காவேரி முனிவர் வளர்த்ததால், 'காவேரி' என்று பெயர் பெற்றாள் லோப முத்திரை.

இச்சமயத்தில், அகத்தியரானவர் தவம் புரிவதற்காகப் பிரமகிரி வந்தார் காவேரியைக் கண்டு காதல் கொண்டார்[இதுதான் தவம் புரியும் லட்சணம் போலும்!].

''என்னை ஒரு கணமும் பிரியாதிருந்தால் உங்களை மணப்பேன்'' என்றாள் காவேரி. சம்மதித்தார் அகத்தியர். திருமணம் நடந்தது. இருவரும் சுகித்திருந்தார்கள்.

ஒரு நாள்.....

சற்றுத் தொலைவிலிருந்த 'கனிகை' என்னும் நதியில் தனியே நீராட ஆசைப்பட்டார் அகத்தியர்[இளம் மனைவி அருகிலிருக்க இப்படியும் ஓர் ஆசையா?!] காவேரியை ஒரு பாத்திரத்தில் அடைத்து[?!], ஒரு பிராமணச் சிறுவனிடம் கொடுத்துவிட்டு நீராடச் சென்றார்.

சினம் கொண்ட லோப முத்திரை, சிறுவனைத் தவறிக் கீழே விழும்படிச் செய்தாள். பாத்திரம் உடைந்து சிதற, வெளிப்பட்ட லோப முத்திரை  காவேரி நதியாக ஓட ஆரம்பித்தாள். [நிகழ்வை அறிந்து அகத்தியர் காவேரியிடம் மன்னிப்புக் கேட்டதும், அவள் ஒரு பாதி காவிரியாகவும் மற்றொரு பாதி அவருக்கு மனைவியாகவும் இருக்கச் சம்மதித்தது தனிக் கதை]

இன்னுமொரு கதை.....

தேவகாந்தன் என்னும் அரசன், தன் நாட்டில் மழை பொய்த்ததால், உமையம்மையை நோக்கித் தவம் புரிய, அம்மையும் ஒரு நாள் அவன் கனவில் தோனறி, ''வலம்புரி[குடகுக்கு] வந்து சேர்'' என்று சொல்ல, அவனும் அங்கு செல்ல, சென்ற பொழுதே காவேரி ஆறு உற்பத்தி ஆகிப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

இக்கதைகள் மூலமாக நாம் அறியத்தக்கது என்னவென்றால்.....

நம் மூதாதையர்களில் சிலர், இப்படி இன்னும் எப்படியெல்லாமோ கதைகள் சொல்லிச் சொல்லி மக்களைச் சிந்திக்க விடாமல் தடுத்துவிட்டார்கள் என்பதும், அவர்கள் விட்டுச் சென்ற பணியை இன்றளவும் நம் ஆன்மிகவாதிகள் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதும்தான்.
*************************************************************************************************