எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 16 செப்டம்பர், 2019

நன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!!!

“இந்தி மட்டுமே இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்தும்” என்று அதிபுத்திசாலி அமைச்சர் அமித்ஷா சொல்லிவைக்க, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்னாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போன்றோரும் கடும் கண்டணம் தெரிவித்துவரும் இன்றைய சூழலில்.....

தனக்கு அமைச்சர்[முன்னாள்] பதவி தந்ததை எண்ணி இன்றளவும் மோடிக்கு நன்றி பாராட்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், “தமிழ் மிகப் பழைமையான மொழி என்று தமிழைப் பாராட்டியவர் மோடி. தமிழின் மீது பற்றுக்கொண்ட ஒரே இந்தியப் பிரதமர். இதை நினைந்து பார்க்கத் தவறிவிட்டான் தமிழன். இவன் நன்றி கெட்டவன்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார்[இன்றைய{16.09.2019} ஊடகச் செய்தி].
பொன்னார் க்கான பட முடிவு
எந்தவொரு பிரச்சினை ஆனாலும் புரியாமல் பேசிச் சமாளிப்பதில் இவருக்கு இணையானவர் எவரும் இல்லை எனலாம்.

‘இந்தியே இந்தியாவை அடையாளப்படுத்தும்’ என்று சொன்னவர் அமித்ஷா. ஏராளமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பவரும் அவரே. தமிழின் மீது அவர் பற்றுக்கொண்டவர் என்பதற்கு ஆதாரம் இருப்பின் அதை வெளியிடுதல் வேண்டும். அதற்கு மாறாக, தமிழ் குறித்தான மோடியின் புகழுரைகளை மேற்கோள் காட்டி.....

“தமிழன் நன்றி இல்லாதவன்” என்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது?!

மோடி நம் மொழியைப் பாராட்டினார்[அமித்ஷாவின் பேச்சு குறித்து இவர் இன்னும் வாய்திறக்கவில்லை] என்பதற்காக, அமித்ஷா செய்த குற்றத்தை நாம் மறந்துவிட வேண்டும் என்கிறாரா பொன்னார்?

ஒரு மொழியை வெறுமனே பாராட்டுவது வேறு; அதன் தகுதியை மேம்படுத்துவது வேறு என்பதுகூடப் புரியாதவரா இந்த மேனாள் அமைச்சர்?!

“இந்தி இந்தியாவின் அடையாள மொழி என்றார் அமித்ஷா. அவர் சொன்னது தவறு. இந்தியாவை அடையாளப்படுத்துவது இந்தி அல்ல; பழம் பெருமை வாய்ந்த தமிழ்தான்” என்று மோட்டி அறிவித்திருந்தால்......

அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளெல்லாம், “மோடி வாழ்க! ... மோடி வாழ்கவே!!” என்று முழக்கமிட்டுக்கொண்டே இருக்கலாம்.

இனியேனும் கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்துப் பேசுவதற்குப் பயிற்சி மேற்கொள்ளுவாரா பொன், ராதாகிருஷ்ணன்?
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக