திங்கள், 27 ஏப்ரல், 2020

கவர்ச்சிப் பெண்களும் கரோனா வைரசும்!![மறுபதிப்பு]

பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து  நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு பேசினார்.
அப்போது அவர், “பெண்கள் செய்யும் தவறுகளால் தான் கொரோனா போன்ற தொற்று வியாதிகள் நாட்டை பற்றிக்கொண்டுள்ளதாக சர்ச்சையாக பேசினார்.. ஆனால் பிரதமர் இம்ரான் கான் எதுவுமே சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். இதனால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது.. ஆம்,  அவரது பேச்சை பிரதமர் இம்ரான் கான் தடுத்திருக்க வேண்டும் எனக் கூறும் பெண்கள் அமைப்புகள், அதுகுறித்து எந்த கருத்துமே பிரதமர் கூறாமல் சென்றது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைச் சாடிய மவுலானா, பின்னர் அதற்காகத் தான் வருந்துவதாகக் கூறினார். இருப்பினும், இதுவரையில் பெண்கள் குறித்துச் சர்ச்சையாகப் பேசியதற்கு மவுலானா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பிரபல செய்தித்தாள் நிறுவனமான ‘டான்’ தன் தலையங்கத்தில், இது போன்ற அறிக்கைகள் கவலையாக இருக்கிறது. அவை, ஒரு உயர் மட்ட மேடையிலிருந்து வெளிவருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளான காரியம் என்று கூறியுள்ளது. பெண்களைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துக்களை கூறிய மதகுரு மேடையிலேயே திருத்தப்படவில்லை என்பது ஒரு “அவமானம்” என்றும்  டான் சுட்டிக்காட்டி கூறியுள்ளது.. மேலும் இந்தச் சர்ச்சைக்குப் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமும் மதகுருவான  மவுலானாவுக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
[செய்தி வெளியிட்ட ஊடகம்: https://www.updatenews360.com/world/their-wrongdoings-pakistan-cleric-blames-scantily-dressed-women-for-coronavirus-pandemic-270420/

புரியாததும் புரிந்ததும்[எனக்கு]

மதகுரு ஜமீல், குறைந்த அளவில் ஆடை உடுத்துவதால், கரோனா பரவுகிறது என்று பேசியிருக்கிறார்[இதுவும் ஒரு ஊடகச் செய்திதான்]. ஊடகங்கள் அதைச் செய்தியாக வெளியிட்டன. மனித உரிமை ஆணையம் மதகுருவைக் கண்டித்துள்ளது.

இது செய்தி, சரி.

பெண்கள் குறைவாக ஆடை உடுத்துவதற்கும் கரோனா பரவுவதற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. புரியும் வகையிலான விளக்கத்தை ஊடகங்களோ, மனித உரிமை ஆணையமோ வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இரண்டுக்குமான தொடர்புதான் என்ன? கொஞ்சம் யோசித்ததில் புரியவில்லை. சற்றே ஆழ்ந்து யோசித்தபோது கீழ்க்காணும் வகையிலான ஒரு விளக்கம் என்னுள் உதித்தது.

*குறைந்த உடையுடுத்து[கவர்ச்சியாக] கடைவீதி போன்ற இடங்களுக்குச் செல்லும் பெண்களைக் கண்டு ரசிக்க ஆண்கள் பெருமளவில் திரள்வார்கள். அதன் விளைவாக நெரிசல் ஏற்பட்டு, கரோனா விரைந்து பரவுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்னும் அர்த்தத்தில் மதகுரு ஜலீல் பேசியிருக்கக்கூடும்*

மதகுருவுக்கும் மனித உரிமை ஆணயத்துக்குமான விவகாரம் இது. நமக்கு ஏன் வம்பு என்று நினைத்து எழுதிய பதிவை[இதே தலைப்பில்] நீக்கிவிட்டேன். தற்செயலாகத் தமிழ்ச்சரத்தில் நுழைந்தபோது, நீக்கப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுவிட்டதை அறிய முடிந்தது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, முன்பு எழுதியதையே மீண்டும் பதிவாக்கியிருக்கிறேன்.

நன்றி.
======================================================================