வெள்ளி, 29 மே, 2020

சாதனை புரிந்த இளம் ‘சாமியாரினி’[போலி]யின் கதை!

நான் எழுதிய ‘செல்லம்மாதேவி’ என்னும் புதிய புதினம்,  பிரமிப்பூட்டும் அதிரடித் திருப்பங்களையும், வாசகரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் எதிர்பாராத முடிவையும் கொண்டது. 

அதன் முன்னுரை.....

//‘புணர்ச்சி இன்பம் துய்ப்பதே பிறந்ததன் பயன் என்று அலையும் சுகபோகிகளுக்கு.....’ என முத்திரை குத்தப்பட்ட இளம் கைம்பெண் குறித்த புதினம்[Novel] இது. ‘இளசு’களுக்கு மிகவும் பிடிக்கும். வயசாளிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.

மறுமணம் புரிந்து, இழந்த இல்லற இன்பங்களை மீட்டெடுப்பதற்கான உரிமை இன்று கைம்பெண்களுக்கு உண்டு. ஆனால், அவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு அதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது? நம்மிடம் புள்ளிவிவரம் ஏதுமில்லை.

புதிய புருசன் வாய்க்காதபோது, வசதி படைத்த ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருந்து, ‘போதும்’ என்று இல்லாவிட்டாலும், ‘இது போதும்’ என்று காலம் கடத்தும் விதவைகள் உண்டு. அவர்களில் எத்தனை பேரை நாம் அறிந்துவைத்திருக்கிறோம்? பதில், சொல்லிக்கொள்ளும்படியாக இல்லைதானே?

இவர்கள் தவிர, வந்தவன் போனவனுக்கெல்லாம் முந்தானை விரித்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்ட பாவப்பட்ட பெண்களும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இந்த நாவல், கல்யாணமாகி ஒன்றரை ஆண்டுகளில் கணவனை இழந்து பரிதவித்த ஒரு கிராமத்துப் பெண்ணைப் பற்றியது. அவள்.....

செல்லம்மா.

செல்லம்மா செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் தாயார்க்காரியால் செல்லமாக வளர்க்கப்பட்டவள்; பட்டதாரி; நூல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவள்; படித்தவற்றை மனதில் சேமித்து ஆழ்ந்து சிந்திக்கவும் கற்றவள்.

ஒரு கைம்பெண், காலமெல்லாம் கைம்பெண்ணாகவே வாழ்வதற்கும் உரிமை உண்டுதானே? அப்படி வாழ நினத்தவள் இந்தச் செல்லம்மா.

கறுத்த தோலும், சிறுத்த மார்பும், சீரற்ற பல்வரிசையும், சொறசொறத்த கன்னமும் வாய்த்த ஒரு வத்தல் உடம்புக்காரியாக இவள் இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும். சாகசம் புரியும் கண்கள், தொட்டுத் தடவத் தூண்டும் கொழுகொழு கன்னங்கள், சுவைக்கத் தூண்டும் செம்பவழ உதடுகள் என்றிவற்றோடு எடுப்பான மார்பகங்களும், கட்டுடலும் கொண்டவளாக இவள் இருந்ததால் அது இயலாமல்போனது.

இவளைக் கலவி புரிய மனத்தளவில் பலர் ஆசைப்பட்டாலும், களத்தில் இறங்கியவர்கள் மூன்று பேர் மட்டுமே.

மூவரில் அத்தியப்பன் வயது அறுபதைக் கடந்தவர்; நிலச்சுவான்; நிதிநிறுவன அதிபர். தொட்டுவிடாமல் எட்ட நின்றே, கண்களால் காமக் கணைகள் வீசியும் கொச்சை மொழிகள் பேசியும் ஆசைப்பட்டவளைத் தன் இச்சைக்கு இணங்க வைப்பதில் கில்லாடி. ஒருத்தியை எங்கே தொட்டால் இளகுவாள், எப்படித் தொட்டால் மயங்குவாள், என்ன செய்தால் இணங்குவாள் என்பவை போன்ற காமசூத்திரப் பாடமெல்லாம் இவருக்கு அத்துபடி. இவர் ருசி கண்ட பூனை. தினுசு தினுசாய், புதுசு புதுசாய் அலுப்படையாமல் அனுபவிப்பதில் நல்ல அனுபவம் பெற்றவர்.

இரண்டாம் நபர் செந்தில். செல்லம்மாவின் வயதுக்காரர்..... அல்ல, வயதுக்காரன்; அவளுடன் கல்லூரியில் படித்தவன்; காதலித்தவன். ஒரு தடவைகூடப் புணர்ச்சி இன்பம் துய்க்காததால், அதன் அருமை புரியாதவனாகப் பொய்யான காதலைப் புனிதமானது என்று நம்பி மெய்யான வாழ்நாளை வீணடித்துக்கொண்டிருப்பவன்.

இன்னொரு போட்டியாளன் ஆறுமுகம்; லாரி டிரைவர்; அவசரக்காரன். அழகை ரசிக்கவும், ஆரஅமற அழகிகளை ருசிக்கவும் இவனுக்குத் தெரியாது; ‘வயிறு பசித்தால் சோறு’ என்பது போல, ‘அந்த’ நினைப்பு வந்தால் ‘பொம்பள’ தேடுபவன்; ஒன்னுக்கு ரெண்டா இருந்தா வசதி என்று நினைப்பவன்; செல்லம்மாவின் அக்கா அங்கம்மாவின் கணவன் என்பது அறியத்தக்கது.

இந்த மூன்று பேரிடமிருந்தும் தப்பித்து, தான் காணும் கனவுகளை நனவாக்கிடச் செல்லம்மா நடத்திய போராட்டமே இந்த நெடுங்கதையின் ‘கரு’வாகும். போராட்டம் சார்ந்த நிகழ்வுகள் இதன் பின்புலம்.

எளிதில் புரியாத வாழ்க்கைத் தத்துவங்கள், கதைக்கு ஒவ்வாத கதைமாந்தர் உரையாடல்கள், மிகையான வர்ணனைகள் என்றிவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

இயன்றவரை, சுவை குன்றாத விறுவிறு நடையைக் கையாண்டிருக்கிறேன்.

புதுமையான கதைக் கருவும், மாறுபட்ட பாத்திரப் படைப்பும் தொய்வில்லாத நடையும் வரிவிடாமல் உங்களை வாசிக்கத் தூண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு//
                                       
                          *                              *                             *
அமேசான் கிண்டிலில் நீங்கள் சந்தாதாரர் எனின், தவறாமல் இந்தப் புதினத்தை [இலவசமாகப்] படித்துச் சுவையுங்கள்; மகிழ்ச்சிக்கடலில் நீந்துங்கள்!

நன்றி.
===============================================================================