எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 30 மே, 2020

'இது’ விசயத்தில் இத்தனை பலவீனமானவரா மகாத்மா காந்தி?!

'மரணமிலாப் பெருவாழ்வு’ குறித்துப் பதிவு எழுதுவது இன்றைய என் நோக்கமாக இருந்தது. கூடுதல் தகவல்களுக்காக இணையத்தில் மேய்ந்தபோது, http://vallalarr.blogspot.com/2016/04/blog-post_8.html என்னும் தளத்தின் மூலம், காந்தியடிகள் பற்றி, அதிர்ச்சி தரும் பல புதிய  செய்திகளை அறிய நேர்ந்தது[கூடுதல் வாசிப்புக்கு: ‘காந்தியும் காமமும்’[https://kadavulinkadavul.blogspot.com/2015/03/blogpost_26.html].

பதிவின் சுருக்கம் கருதி, வாசித்தறிந்த செய்திகளின் அளவை வெகுவாகக் குறைத்திருக்கிறேன்.

தளத்தின் உரிமையாளருக்கு நன்றி.
#காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா வாழ்க்கையின்போது சத்தியாகிரகம் என்ற அகிம்சை போர்முறையினை அவர் அங்குதான் உருவாக்கினார். சுயநலம் மற்றும் குடும்ப உறவிற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வு முறைக்கு அவர் தயாரானார். அதனால் அவர் ஒரு முக்கியமான இரண்டு முடிவினை அங்கிருந்தபோது எடுத்தார். முதலாவதாக ,குடும்பத்தை விட்டு விலகி முழுமையாகப் பொதுச் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், இரண்டாவதாக உடலுறவை மட்டுமின்றி காம உணர்வுகளையும் இச்சைகளையும் முற்றிலும் துறத்தல்.

அவர் கடைசியாக வைத்துக்கொண்ட உடலுறவு மகன் தேவதாசின் பிறப்போடு (1899) முடிவடைகிறது. 1906-ஆம் ஆண்டு முதல் அவர் மிகவும் இறுக்கமான பிரம்மச்சர்யத்தைப் பயிற்சி செய்தார். அது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அவர் தமது வாழ்க்கையில் ஐம்பதாண்டு காலத்தை அவரது இச்சைகளுக்கும் அவர் விரும்பிய லட்சியத் தூய நிலைக்குமான போராட்டத்திற்கே செலவிட்டார்.

தாகூரின் மருமகளான சரளா, அக்காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை, பேரழகி, எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியை, இசை வல்லுநர், வங்கத்தின் 'ஜோன் ஆஃப் ஆர்க்' எனவும், பூமிக்கு வந்த துர்க்கை எனவும் வியக்கப்பட்டவர். கணவருடன் விடுதலை ப்போராட்டத்தில் முன்னணியிலிருந்தவர்.

1901-ஆம் ஆண்டே காந்திஜி சரளாவைச் சந்தித்திருக்கின்றார். தென்னாப்பிரிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1919-20 ஆம் ஆண்டு காந்திஜி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோதுதான் இருவருக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.....  மார்ச் 1920-ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்திற்கு சரளா வந்திருந்தபோது, இருவருக்குமிடையே காணப்பட்ட நெருக்கமும் ஆசிரமத்தில் சரளாவின் மகன் தீபக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகளும் அப்போதே சர்ச்சைக்குள்ளாயின. காந்தியின் வாழ்வில் வந்து சென்ற ஏராளமான பெண்கள் குறித்து எந்தச் சஞ்சலமும் அடையாத கஸ்தூரிபாவே கவலைப்படத்தக்கதாக அவ்வுறவு அமைந்தது.

மகன் தேவதாஸ், மிகவும் நெருக்கமானவர்களும் அலோசகர்களுமான மகாதேவ தேசாய், மதுரதாஸ், ராஜாஜி ஆகியோரின் கடுமையான தலையீட்டின் பேரில் வெகுவிரைவில் காந்திஜி அந்த உறவைத் தீய்த்து அணைக்க வேண்டியதாயிற்று..... 1920-ஆம் ஆண்டு இறுதியில் 'சத்திய சோதனை'யை அவர் எழுதியபோது சரளாவும் அவர் மகனும் உயிருடனிருந்தனர். 

உடலிச்சையைத் துறத்தல், பிரம்மச்சர்யம் அகியவற்றைத் தனது அகிம்சைப்போர் முறை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றிற்கு மிக உறுதுணையாக இருக்கும் என உளமாற நம்பினார் காந்திஜி. புற உலகைப் பாதிக்கும் திறன் என்பது ஒருவருக்குத் தன் உலகைக் கட்டுப்படுத்துவதிலிருந்தே துவங்குகிறது என்றார்..... 

கடமைக்கும் தாதி நிலைக்கும் காமம் விரோதமானது என்கிற கருத்து அவருக்கு இளமையிலேயே இறுகப் பதிந்தது. ஆனாலும் காமம் அவரை விடவில்லை. தமது தந்தை உடல்நிலை குறைவால் நோயுற்று இருக்க, ஒரு நாள் காந்திஜி தமது மனைவியுடன் கூடிவிட்டு சற்று அகன்றபோது, அவரது தந்தையின் மரணம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் அவரை வெகுவாகப் பாதித்தது.

இச்சைகளைத் துறக்கும் அவரது பிரம்மச்சரியச் சோதனைகள் ஃபோனிக்ஸ் பண்ணைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. பருவப் பெண்களுடன் அருகில் உறங்குவதாக அப்பயிற்சி தொடங்கியது. "ஜெகி என்னருகில் படுத்திருந்தார்" என அவர் அதைப் பதிவு செய்தார். தொடர்ந்து அவர் இந்தப் பயிற்சியின் 'வரம்பை' விரிவாக்கிக்கொண்டே சென்றார். அவரது பிரம்மச்சர்யச் சோதனைகளில் பிரபாவதி நாராயணன் (பாலியல் உறவைத் தவிர்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் மனைவி), சுசிலா நய்யார், லீலாவதி அசர், அப்துல் சலாம், பத்மஜா நாயுடு, மீரா பென், ஆபா, மனு காந்தி எனப் பலரும் பல்வேறு வகைகளில் அந்தச் சோதனையில் பங்கு பெற்றனர்.

பிரம்மச்சரியச் சோதனைகளை மனைவியுடன் மட்டும் நிறுத்திக் கொள்வது போதும் என காந்தி நினைக்கவில்லை. அது பெரிய விஷயமில்லை. பிற பெண்கள், குறிப்பாகப் பருவ வயதிலுள்ளோருடன் மேற்கொள்ளப்படுதலே சரியான சோதனை எனக் கருதினார். பழக்கப்பட்ட உடல்களைத் தவிர்த்து புதிய கவர்ச்சிகளுடன் சோதனைகள் தொடர்ந்தன.

"ஊன்றுகோல்களாக", பாதத்தை வருடி விடுபவர்களாக, ஒரு மெல்லிய துண்டுடன் கிட்டத்தட்ட முழு நிர்வாணமான நிலையில் படுத்துள்ள காந்திக்கு 'மசாஜ்' செய்பவர்களாக, இரவில் குறைந்த ஆடைகள் அல்லது ஆடையின்றிப் படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களாக இந்தப் பெண்கள் அவருடைய சோதனைகளில் பங்கு பெற்றனர். சுசிலா அவருக்கு 'மசாஜ்' செய்து வந்தார். லீலாவதி, மனு, ஆபா, மீரா இவர்கள் அவருடன் படுக்கைச் சோதனைகளில் பங்கு பெற்றனர்.

1930-ஆம் ஆண்டுப் பிற்பகுதியும், 1940-ஆம் ஆண்டுப் பிற்பகுதியும் அவருக்கு அரசியல் ரீதியில் சோதனைக்காலங்கள். நாட்டுப் பிரிவினையை அவரால் தடுக்க இயலவில்லை. ஜின்னாவுடன் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில்தான் கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் 18-01-1936 மற்றும் 14-04-1938-ஆம் நாட்களில் விழிப்பு நிலையில் அவருக்கு விந்து வெளிப்படுகிறது. கலங்கிப் போய்விடுகிறார் காந்திஜி. 'விந்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெறுவதில் தோற்றுப்போன நான் அரசியல் களத்தில் எப்படி வெல்ல முடியும்?' என வேதனையுற்றார். "என் நிலை என்ன? இத்தகைய ஆசைகளுக்கு ஆட்பட்ட ஒருவன் அகிம்சையையும் சத்தியத்தையும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த இயலும்" என அம்ரித்லால் நானாவதிக்கு எழுதுகிறார்.


பிரிவினை குறித்த பேச்சு வார்த்தைகளில் தோல்வியுற்ற காந்திஜி, 1946-ஆம் ஆண்டு இறுதியில் தனது உச்சகட்டச் சோதனைகளில் இறங்கினார். இப்போது அவரது சோதனைகளில் பங்கு பெற்றவர்கள் இருபது வயதுக்கும் குறைந்த மனுவும் ஆபாவும். இந்தச் சோதனையில் 'வெப்பம் உச்சமாக இருக்கும்' என்றார். மனு தன்னருகில் முற்றிலும் நிர்வாணமாக உறங்குவதாக பியாரே லாலுவுக்கு கடிதம் எழுதினார். ஒருவேளை இப்போதுதான் முதல்முறையாக முழு நிர்வாணத்துடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது போலும். 'சோதனையில் வரம்புகள் கடக்கப்படுவது' பற்றிய குறிப்பின் பொருள் இதுவாக இருக்கலாம்.

பேத்தி மனுவின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. தனது சோதனையில் பங்கு பெறுவதற்கான முழுத் தகுதி தான் மட்டுமின்றி, பங்கு பெறுபவரும் இச்சைக்கு ஆட்படாதிருப்பது என்று கருதிய காந்திஜி அத்தகைய திறனுடையவராக 19 வயதுள்ள தன் பேத்தி மனுவை அவர் மதித்தார்.....

அவருடைய உடலில் அருகாமைக்குப் பலரும் போட்டியிடவே செய்தனர், பியாரே லால் உட்பட மனுவைத் திருமணம் செய்ய விரும்பியவராக அவர் இருந்தபோதும் காந்திஜியின் அருகாமைக்கான அவரது ஆவலை ஒரு பால் வேட்கையுடன் ஒப்பிடத் தயங்க மாட்டார் கத்ரீன் டிட்ரிக்.

எனினும் இந்தச் சோதனைகளில் ஆபாவின் கணவர் கனுகாந்திக்கும் மனுவின் தந்தை ஜெய்சுக்லாலுக்கும் ஒப்புதலில்லாததைக் காந்திஜி பொருட்படுத்தவில்லை. ஜெயசுக்லால் இதை வெளிப்படையாக முன்வைத்த போது, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தவும் காந்திஜி தயங்கவில்லை.

இறுதிச் சோதனைகளின்போது காந்தியின் வயது 75-ஐத் தாண்டியிருந்தது. இந்தக் கிழவரிடம் இருபது வயதிற்கும் குறைவான பெண்கள் என்ன கவர்ச்சியைக் கண்டுவிட முடியும்? எந்த வகையில் இவர்கள் சோதனைக்குப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்? இந்து மரபிலிருந்துதான் காந்திஜிக்கு இதற்கும் பதில் கிடைத்தது. தனது பிரம்மச்சர்யத்தின் மூலம், தான் இன்னும் பருவப் பெண்களைக் கிளர்ச்சியுறுத்த முடியும் என அவர் நம்பினார். ஆரோக்கியமான வாழ்முறையின் மூலமான உறுதியான உடற்கட்டு, தொடர்ந்த 'மசாஜ்' மூலமான வழுவழுப்பான சருமம், அகன்ற மார்பு, சராசரி அளவிலேனும் உள்ள ஆண்குறி ஆகியவற்றின் மூலம் எழுபது வயதிலும் கிளர்ச்சியூட்டும் சாத்தியம் மிக்கவராக காந்திஜி இருந்திருப்பார் என்பது கத்ரீன் டிட்ரிக்கின் கணிப்பு.....

ஆனாலும் இறுதியில் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியது. நாடு பிரிந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை கொன்று கொண்டனர். காந்திஜியின் எதிர்பார்ப்புகள் பலவும் தோல்வியுற்றன. 'அரசியல் தோல்விகளுக்கு அகநிலைப் பிறழ்வுகளே காரணம்' என்கிற அவரது 'லாஜிக்'படிப் பார்த்தால் இதன் பொருளென்ன? காந்திஜி தோற்றார், காமம் வென்றது என்பதா? (நன்றி-அ.மார்க்ஸ்)

இப்படி பல வழிகளில் காமத்தை நீக்க இவ்வுலகில் உள்ளோர் முயல்கின்றனர். சிலர் அதில் வெற்றிபெறுகின்றனர். பலர் அதில் தோல்வி அடைகின்றனர்..... காமத்தை ஒழிக்கக் காந்திஜி பயன்படுத்தியப் பாதை தவறனா பாதையாகும்.

காமத்தை ஒழிக்க நமது சிந்தனையை எந்நேரமும் இடைவிடாமல் இறைவனின் பால் செலுத்துவதே சிறந்த முறையான எளிதான மார்க்கம் ஆகும்.

                                                     - தி.ம.இராமலிங்கம்#
================================================================================