வியாழன், 11 ஜூன், 2020

‘அது’ இனி...புதுசு புதுசாய்! தினுசு தினுசாய்!!

‘இறவாமை வேண்டும்’ என்பது வடலூர் வள்ளலார் போன்ற ஞானி[எனப்படுபவர்களின்]களின் விருப்பம். மனிதராய்ப் பிறந்த அத்தனை பேருடைய விருப்பமும் அதுதான்.

என்றென்றும் இறவாமல் வாழ்ந்துகொண்டே இருப்பதற்கான வரத்தை ஒரு நல்ல நாளில் மனிதர்களுக்குக் கடவுள் வழங்கிவிட்டதாகவோ, அதற்கான வழிமுறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டதாகவோ வைத்துக்கொள்ளுங்கள், உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் பேரானந்தத்தில் திளைப்பார்கள் என்பதில் எள்ளத்தனையும் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஆயினும், கிழப்பருவம் நெருங்க நெருங்க, சுகம் அனுபவிப்பதற்கான திறன் குறைந்துவருவது அவர்களைத் தீராத பெரும் கவலைக்கு உள்ளாக்கும். பக்தகோடிகள் கடவுளிடம் வேண்டியும், பகுத்தறிவாளர்கள் அறிவியலாளரிடம் முறையிட்டும் இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட இளசுகளாக மாறுவார்கள். இந்நிலையில்.....

மரணம் இல்லாத பெருவாழ்வு பெற்றவர்கள், புதியவர்கள் பிறப்பது பெரும் பிரச்சினை என்பதை உணர்வார்கள். இந்தப் பூமியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திலும் ஓரடி இடைவெளியில் நிற்பதற்குக்கூட மனிதர்களுக்கு இடமில்லாமல் போகும் என்பதால், கருத்தடை செய்வது உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் கட்டாயம் ஆக்கப்படும்.

வறுமை, பிணி, பகைமை, இயற்கைப் பேரிடர் போன்றவற்றின் தாக்குதல்கள் இன்ப வாழ்வுக்குப் பெரும் தடையாதலின், விஞ்ஞானிகளின் அரிய பெரும் முயற்சியாலோ, கடவுளின் அருளாலோ அவை முற்றிலுமாய் அழித்தொழிக்கப்படும். இதன் விளைவாக.....

மனிதர்களுக்குக் கடவுளின் கருணையோ, விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளோ 100% தேவைப்படாத நிலை உருவாகும். மனிதர்கள் கடவுளை அடியோடு மறப்பார்கள். விஞ்ஞானிகளும் சுகபோகங்களில் மூழ்கிவிடுவதால் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்த அறிஞர்கள் இல்லாத நிலை உருவாகும்.

அப்புறம்.....?

அப்புறமென்ன, இந்தப் பூமியே தேவர்கள் வாழும் சொர்க்க பூமி போல மாறும். தாம் அறிந்த அத்தனை தினுசு தினுசான வகை வகையான புதிது புதிதான இன்பங்களையெல்லாம், யுக யுக யுகாந்தரங்கள் கடந்து வரன்முறையில்லாமல் அனுபவிப்பார்கள் மனிதர்கள்; அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்.

அப்புறம்.....?

“இன்னும் எத்தனை காலத்துக்குப் பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருப்பது?  கண்ட காட்சிகளையே காண்பது?
புணர்ந்தவர்களையே புணர்வது?" என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை பேரும் மனம் சலிப்பார்கள்; விரக்தியில் மனம் பேதலித்துப் பைத்தியங்களாய் அலைவார்கள்
========================================================================