புதன், 1 ஜூலை, 2020

கொலை செய்பவர்கள் கொலைகாரர்களா?!?!



‘கவலை கொள்ளாதே. குற்ற உணர்ச்சி வேண்டாம். கொல்...எதிரிகளைக் கொல்.

நஷன்யதே, ஹன்யமனே சரீரே. நீ ஓர் உடலைக் கொல்லும்போது, உண்மையில் எதுவும் கொல்லப்படுவதில்லை. ஏனெனில்.....

உடலானது ஒரு நாள் அழியப்போவது. அது நிரந்தரமாக இருந்துகொண்டிருப்பது அல்ல. ஆன்மா[ஆத்மா] மட்டுமே அழிவற்றது. இரண்டும் எப்போதுமே இணைந்திருக்க முடியாது. பின்னர் பிரிய வேண்டிய அவற்றை இப்போதே நீ பிரிக்கிறாய். அதாவது, அவற்றின் தொடர்பை நீ அறுக்கிறாய்.

இது, உன்னால் கொல்லப்படுபவர்களுக்குச் செய்யும் பெரிய சேவை.

இந்தப் பணியை நீ அனைத்திற்கும் மூலகாரணமான ‘அவனுக்காக’ச் செய்கிறாய்.

ஆகவே, அர்ஜுனா, கொலை செய். குற்ற உணர்வுக்கு இடம் தராமல், உன் எதிரிகளை உற்றார் உறவினர் என்று பாராமல் கொல்...கொல்.’

-இது, பாரதப் போர் நிகழ்ந்தபோது அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் செய்த போதனை. பல்லாயிரவர் கொல்லப்பட்டனர்.

‘உடல் என்பது ஒரு பொருள் மட்டுமே. பொருள் அழியக்கூடியது. என்றேனும் ஒரு நாள் அழியப்போவது உறுதி. அதை இன்றே அழிப்பதில் தவறில்லை.

உடல் அழியும்போது அதனுடன் அழியப்போவது வேறு எதுவும் இல்லை. ஆன்மா[ஆத்மா] இருப்பதாகச் சொல்வதெல்லாம் பொய். அதனால், நாம் நிரந்தரமான[ஆத்மா] ஒன்றை அழிப்பதில்லை; உடலை மட்டும்தான் அழிக்கிறோம். அதாவது, நம் எதிரிகளின் உடம்பை அழிக்கிறோம்.

உடம்பு உருவாகக் காரணமானவற்றில் ஒன்றான காற்று உடம்பிலிருந்து வெளியேறிக் காற்றில் கலந்துவிடும். மண் மீண்டும் மண்ணுக்கே போய்விடும். தண்ணீர் தண்ணீரோடு சேர்ந்துவிடும். ஆக, உடலின் மூலக்கூறுகள் எல்லாமே அவையவை இருந்த இடங்களுக்கே சென்று சேர்ந்துவிடும். 

எனவே, கொல்லும்போது குற்ற உணர்வு தேவையில்லை. கொல்...கொல்...நம் எதிரிகளைத் தயங்காமல் கொல்...கொன்று குவித்துக்கொண்டே இரு.’

இது, தன் படைவீரர்களுக்கு ஜோசப் ஸ்டாலின் செய்த போதனை. பல்லாயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள்[‘பல்லாயிரக் கணக்கானோரை இவர் படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது' -விக்கிப்பீடியா].

ஆன்மாவைக் காரணம் காட்டி, அர்ஜுனன் மனதில் கொலை வெறியைத் தூண்டியவர் கடவுள் கிருஷ்ணன். அதே ஆன்மாவை மையப்படுத்தித் தன் வீரர்களைக் கொலை புரியத் தூண்டியவர் ஸ்டாலின்.

ஒருவர் கொலை செய்யத் தூண்டினால் அவர் ‘கொலைகாரர்’ எனப்படுவார்.

எனவே, இந்த இருவரும்.....?

ஓஷோ உலகமகா புத்திசாலி. ஒருவர் முதன்மைக் கடவுள்களில் ஒருவர், இன்னொருவர் பலர் போற்றும் புரட்சியாளர் என்பதையெல்லாம் மறக்கவில்லை; நிகழ்வுகளை விவரித்ததோடு தன் பணியை முடித்துக்கொண்டார்!
=======================================================================
தத்துவ ஞானி ‘ஓஷோ’வின் ‘ஈஸா உபநிஷத உரை’[நர்மதா பதிப்பகம், சனவரி 1995; பக்கம் 95-96] இப்பதிவுக்கான ஆதார நூல் ஆகும். கருத்துகளில் பிறழ்வு நேராமல் சொல்லும் முறையில் மட்டும் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருக்கிறேன். 

வாசிப்புக்கு நன்றி.