பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

ஆண்களின் அலட்சியமும் குடும்பப் பெண்களின் மனக்குமுறலும்!!!

மணமான பெண்களைப் பொருத்தவரை, குடும்ப வாழ்க்கையில் எத்தனை மனக்குறைகள் இருப்பினும்,  ஒளிவு மறைவு இல்லாமல் அவற்றை அயலாரிடம் பகிர்வதென்பது நேற்றுவரை இங்கு நிகழாத ஒன்று.  'தனியார் நிறுவனம் குடும்பப் பெண்களிடம் நடத்திய பேட்டி' என்று குறிப்பிட்டு, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ள 'மாலை மலர்'[14.02.2022] நாளிதழ், 'இப்போதெல்லாம் இது  நிகழ்கிற ஒன்றுதான்' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

பெண்களிடம் பேட்டி கண்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெறாதது[அயல்நாட்டு நிறுவனங்களின் இம்மாதிரிப் பேட்டி நிகழ்வுகளில் நிறுவனங்களின் பெயர் தவறாமல் இடம்பெறும்] குறிப்பிடத்தக்கக் குறை எனினும் பேட்டி சுவை நிறைந்ததாகவே உள்ளது.

குடும்பப் பெண்களிடம் நிறுவனம் முன்வைத்த கேள்வி: "நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?" 

குடும்பத் தலைவிகளின் பதில்கள்:

*"திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." -இப்படிப் பதிலளித்தவர்கள் 22%. 

*"திருமணத்தைப் பற்றி நான் கண்ட கனவுகள் ஈடேறவில்லை."  

*"திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம்." 

*"திருமணத்திற்கு முன்பு எனக்கு இருந்த சுதந்திரத்தை இழந்துவிட்டேன்." -இப்படிச் சொன்னவர்கள் 90%

*"திருமணத்திற்கு முன்புவரை குடும்பத்தாருடன் நிறையப் பயணம் மேற்கொண்டேன். பெற்றோருக்கு முடிந்த உதவிகளைச் செய்தேன். இப்போது என் கணவரும், அவரது குடும்பத்தினருமே என்னுடைய உலகமாக மாறிவிட்டனர். அதனால், எனக்காக நான் வாழ முடியவில்லை." 

*"என் கணவர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை; எதிலும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்; மது அருந்துகிறார்; பொறுப்பாக நடந்துகொள்வதில்லை; பொய் சொல்கிறார்." 

*"திருமணமான புதிதில் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பார்; பேசும் நேரத்தை இப்போது படிப்படியாகக் குறைத்துவிட்டார்." -இது,  40%  பெண்களின் ஆதங்கம்.

*"ஒரு வருடம் மட்டுமே இவருடனான வாழ்க்கை இனிப்பாக இருந்தது; பின்னர் கசக்க ஆரம்பித்துவிட்டது."

*"ஒரு முறையாவது விவாகரத்துப் பெற்று மணவாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுவிடலாமா என்று யோசித்திருக்கிறேன்." -20% பெண்களின் மனநிலை இது.

*"திருமணத்திற்குப் பின்பு என் பழைய நட்புகளை எல்லாம் இழந்துவிட்டேன். அதனால், அவ்வப்போது அவர் மீது கோபப்படுகிறேன்."

***பெண்களின் இந்த விரும்பத்தகாத குடும்பச் சூழ்நிலைக்கு உளவியல் நிபுணர் சொல்லும் காரணம்.....

"மணவாழ்க்கையில் இணையும் ஆண்-பெண் இருவருமே இருவேறு குடும்பம், சூழல், கலாச்சாரம் போன்றவைகளின் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்கள் இருவரும் அனைத்து விசயங்களிலும் ஒத்துப்போவது அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைச் சரியான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். தேவைப்பட்டால், அவர்கள் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுதல் வேண்டும்.” 

==========================================================================

நன்றி:

https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2022/02/14132024/3481359/bed-life-problems.vpf  -14.02.2022