பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 26 பிப்ரவரி, 2022

கடவுள் 'அவர்களுக்கு' மட்டுமே சொந்தமானவரா?!?!

#பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

இந்நிலையில், "கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவிப் பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின் உயிரைப் பறித்துவிடும். ஆகையால், வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்லுங்கள்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார்# என்பது அண்மைச் செய்தி. [https://www.hindutamil.in/news/world/712598-avoid-shooting-in-the-air-and-thank-god-instead-mujahid-said-in-a-message-on-twitter.html

தலிபான்களும் பஞ்ஷிர்ப் போராளிகளும் போரிட்டுக்கொள்வதற்கான காரணம் எதுவாகவோ இருந்திடட்டும். மேற்கண்ட செய்திக்கிணங்க, 'பஞ்ஷிர்' மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான போரில் தலிபான்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

இருதரப்பினருக்கான மோதலில் ஒருதரப்பார் வெற்றி பெறுவது தவிர்க்க இயலாத நிகழ்வு.

இங்கே, தலிபான் வீரர்கள் தங்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். தலிபான் செய்தியாளர், "வானத்தை நோக்கிச் சுடாதீர்கள். தோட்டாக்கள் பாய்ந்து பொதுமக்கள் உயிரிழப்பார்கள். கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

கடவுளுக்கு எதற்கு நன்றி?

கொலை ஆயுதங்களில் ஒன்றான துப்பாக்கியைக் கண்டுபிடிப்பதற்கான குரூரப் புத்தியை மனிதர்களுக்குக் கற்றுத் தந்ததற்காகவா?

தலிபான் வீரர்கள் 17 பேரைச் சுட்டார்களே, அப்போது அவர்கள் வைத்த 'குறி' சற்றேனும் பிசகாமல் பார்த்துக்கொண்டாரே அதற்காகவா?[வானத்தை நோக்கிச் சுட்டால் உயிரிழப்பு நேருமா?].

தலிபான் தலைவர்களே,

"அன்றாடம் கடவுளைத் தொழுகிறீர்கள்; எல்லாம் அவன் செயலே என்று எண்ணுகிறீர்கள். இவையெல்லாம் உங்களின் நம்பிக்கை சார்ந்தவை. எவரும் குறை சொல்ல வாய்ப்பில்லை. ஆனால்.....

நீங்கள் நடத்திய... நடத்தும் போர்களில், சக மனிதர்கள்[உங்களுக்கு எதிரிகள் ஆயினும் அவர்களும் கடவுளால்[அப்படி ஒருவர் இருந்தால்] படைக்கப்பட்டவர்களே.

தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களைக் கொல்ல, தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களையே ஏவுவாரா கடவுள்?

கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்தால்கூட இந்த உண்மை புரிந்திருக்கும். 

சிந்திக்கத் தவறியதால்தான்.....

"வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று[மட்டும்] சொல்லாமல், பெற்ற வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்" என்று உங்களின் வீரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறீர்கள். 

கடவுள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவரா தலிபான் தலைவர்களே?! 
==========================================================================