பக்கங்கள்

சனி, 23 ஏப்ரல், 2022

வருத்தும் நோய்களும் மருத்துவர் பதில்களும்!

'தினமணி' நாளிதழின் மிகப் பழைய மருத்துவ மலரிலிருந்து[டிசம்பர் 1999] அனுமதியின்றிச் சுட்டெடுத்தவை கீழ்க்காணும் கேள்விகளும் பதில்களும். 

இடம்பெற்றுள்ள தகவல்களில் சிலவோ பலவோ ஏற்கனவே நீங்கள் அறிந்தவையாக இருப்பினும், அவற்றை நினைவுகூர்தலால் பயனே விளையும் என்பது என் எண்ணம்.

வாசிப்பைத் தொடரலாம்.

கேள்வி-பதில்:

*தலைவலிக்கான காரணங்கள் எவை?

<>காலையில் காப்பி குடிப்பதை வழக்கப்படுத்தியிருந்து ஒரு நாள் குடிக்காமல் இருந்தால் வரலாம். இது சாதாரணத் தலைவலி.

<>மூளையில்கட்டி இருந்தாலும் வரும். இது ஆபத்தானது.

<>கிட்டப் பார்வையும் காரணம்[கிட்டப் பார்வையின் அளவு 0.25இலிருந்து மைனஸ் 0.50வரை இருந்தால் தலைவலி வரும்].

<>கண் நீர் அழுத்த நோய்[க்ளாக்கோமா] இருப்பது, தூங்கி எழுந்தவுடன் தலைவலி வருவதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

<>ரத்த அழுத்த அதிகரிப்பும் தலை வலியை உண்டுபண்ணும்.

<>கழுத்துக்குப் பின்புறம் உள்ள முள்ளந்தண்டு எலும்பு தேய்ந்து அங்கிருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதும் ஒரு காரணம்.

*கர்ப்பக் காலத்தில் எத்தனை மாதம்வரை உடலுறவு கொள்ளலாம்?

<>7 மாதம்வரை கொள்வதில் பாதிப்பு ஏதுமில்லை.

<> அதன் பிறகான உறவு, நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும்.

<>கடைசிவரை உறவு கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்பது தவறு. 

*தும்மலைத் தடுக்க வழி உண்டா?

மூக்கும் உதடும் சேரும் இடத்தில் ஒரு நிமிடம்போல விரலால் அழுத்திக்கொண்டிருப்பதன் மூலம் தும்மலைத் தடுக்கலாம்.

*கொட்டாவி வரும்போது இரு கண்களிலும் நீர் வழிகிறதே, தீர்வு உண்டா?

<>கண்கள் சோர்ந்துபோவதே காரணம். அடிக்கடி இது நிகழ்ந்தால் சத்துணவில் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*சிறுநீரை அடக்குவதால் உண்டாகும் பிரச்சினைகள் எவை?

<>சிறுநீர்ப் பையில் தேங்கும் நீர் அதை விரிவடையச் செய்யும். படிப்படியாகச் சிறிநீர்ப்பை, தன்னுடைய இயல்பான 'சுருங்கி விரியும்' தன்மையை இழக்கும். சிறுகச் சிறுகத்தான் சிறுநீர் வெளியேறும்; தடைபடுதலும் நிகழும்.

<>சிறுநீர் வெளியேறும் உணர்வு தோன்றும்போதே வெளியேற்றிவிடுவது பிரச்சினை உண்டாவதைத் தவிர்க்க உதவும்.

*பிரசவத்திற்குப் பிறகு வயிறு சுருங்க என்ன செய்யலாம்?

<>உடல்நிலை சற்றே தேறியவுடன் உடற்பயிற்சியைத் தொடங்குதல் வேண்டும்.

<>ஆறு மாதம் போல் பயிற்சி செய்தால் வயிற்றுச் சதை குறையும்.

<>வயிற்றுக்குப் பெல்ட் அணியும் முறையையும் பின்பற்றலாம்.

*குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை 'மாதவிலக்கு' வராது என்பது உண்மையா?

<>தாய்ப்பால் கொடுத்தால் ஆறு மாதம்வரை வராது.

<>தாய்ப்பால் குறைவாகக் கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

*நாய் கடித்தால் கட்டுப் போடுவது கூடாதா?

<>கூடாது. போட்டால், நாயின் வாயில் தங்கியிருக்கும் ரேபீஸ் வைரஸ் காயத்துக்குள் சென்று நம் ரத்தத்தில் கலக்கும்.

<>நாய் கடித்தவுடன் காயத்தின் மீது சோப்புப் போட்டு, அதிக நீர் விட்டுக் கழுவுதல் வேண்டும்.

<>தெரு நாயோ வெறி நாயோ வீட்டு நாயோ எந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி போடுதல் அவசியத் தேவை.

*செல்லப் பிராணிகளிடம் அன்பு செலுத்துவது உடல் நலத்தைப் பாதிக்குமா?

<>அன்பு செலுத்துவதில் தவறில்லை. அதன் உடலை நுகர்வதோ, அதன் வாயில் நம் வாயை வைத்து முத்தமிடுவதோ நோய்கள் பரவ வாய்ப்பளிக்கும்.

*மாரடைப்பைத் தவிர்ப்பதற்கான மிக முக்கிய வழிகள்?

<>மன உளைச்சலைத் தவிர்ப்பது மிக மிக முக்கியம்.

<>ரத்தத்தில் கொழுப்புச் சேராமலிருக்கத் தினசரி நடைப் பயிற்சி அல்லது முறையான உடற்பயிற்சி அவசியத் தேவை.

*முகத்தில் 'பரு' உருவாவதைத் தடுப்பது எப்படி?

<>ஒரு நாளில் 3 முறையாவது முகத்தைச் சோப்பினால் கழுவுதல் வேண்டும். 

<>மலச்சிக்கல் ஏற்படாத வகையில், அதிக அளவு தண்ணீர் குடித்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

<>அயோடின் கலந்த உப்பைத் தவிர்த்தல் வேண்டும்.

*கண்களுக்குள் மண்ணோ தூசியோ விழுந்தால் அவற்றை வெளியேற்றுவதற்குச் செய்ய வேண்டியது என்ன?

<>எதுவும் செய்யாமலே இருந்தால் போதும். கண்களில் பெருகும் நீரே அவற்றை வெளியேற்றிவிடும். வெளியேறாவிட்டால் மருத்துவரிடம் செல்வதே நல்லது.

*பற்களைப் பாதுகாக்க வழிகள்?

நிறைய உள்ளன.

<>சாப்பிட்டு முடித்தவுடன் நன்றாக வாய் கொப்பளித்தல்.

<>காலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பல் துலக்குதல் அவசியம்

<>பால், பழம், கீரை முதலானவற்றை உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்

<>வெற்றிலை, பாக்கு, சிகரெட், பான் போன்றவை கூடவே கூடாது.

<>சொத்தை விழுந்தால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுதல் தேவை.

*எளிதாக மலம் வெளியேற...?

<>நார்ச்சத்து உள்ள பொருள்களை அதிகம் உண்ணுதல் முக்கியம்.

<>எழுந்தவுடன் மலம் கழிக்கச் செல்வதைப் பழக்கப்படுத்துதல் மிக முக்கியம்.

<>அன்றாடம் நடைப் பயிற்சி அல்லது வேறு உடற்பயிற்சியைத் தவிர்த்தல் கூடாது.

==========================================================================