பக்கங்கள்

புதன், 23 ஆகஸ்ட், 2023

’பெரிய்ய்ய்ய’ கவலையும் சின்னஞ்சிறுசுகளும்!!!

நான் நகர்ப்புறவாசி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வேலை பார்க்கும் மகன் வீட்டில் அடைக்கலம்.

உறவினர் இல்லத்துத் திருமண விழாவுக்காகப் பிறந்த ஊருக்கு வந்திருந்தேன்.

விழாவில் கலந்துகொண்டுவிட்டு அன்று மாலை சம வயதுக்காரனும், பள்ளியில் உடன்பயின்றவனுமான நண்பன் நவநீதனைச் சென்று பார்த்தேன்.

உடம்பு வெகுவாகத் தளர்ந்துபோய், கவலை அப்பிய முகத்துடன் காட்சியளித்தவனைத் தோள் வருடி, “ஏன் இப்படி ஆகிட்டே?” என்றேன்.

“நீ மட்டுமென்ன, என்னை மாதிரிதான் இருக்கே” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்:

“மருமக மட்டுமல்ல, மகனுமே என்னை ஒரு சுமையாக நினைக்கிறான். ரொம்ப அவசியபட்டாலொழிய என்கூடச் சரியாப் பேசுறதே இல்ல; என்னைக் கண்டுக்கிறதும் இல்ல. எப்போ ஒழிவான்னு இருக்காங்க. தூக்குல தொங்கிடத்தான் விருப்பம். அதுக்கான தைரியம் இல்ல. எது எப்படியோ, வயித்துக்கு மூனு வேளையும் சோறு போட்டுடறாங்க” என்றான் நண்பன்.

கண் கலங்கியிருந்தான். 

அவன் முகத்தை நிமிர்த்தி, “உனக்கு வயசு என்ன?” என்றேன்.

“உன் வயசுதானே எனக்கும். என்பது முடியப்போகுது.”

“அப்பப்போ வயசை நினைச்சுக்கோ. அடிக்கடி நினைச்சா, இன்னிக்கோ நாளைக்கோ எப்போ சாகப்போறமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சுடுவே. அது தீரவே தீராத பெரிய கவலை. அந்தக் கவலைக்கு முன்னால நீ இப்போ படுறது மாதிரியான கவலையெல்லாம் ரொம்ப அற்பமானதா ஆயிடும்..... 

பெருசாக் கவலைப்படுடா. நான் அதைத்தான் செய்துட்டிருக்கேன்” என்று சொல்லி முடித்ததும் என்னை ஆரத் தழுவிக்கொண்டான் நவநீதன்.

மிகப் பல நாட்களுக்குப் பிறகு, என் மனதுக்குள் இதமானதொரு சுகம் பரவுவதை உணர முடிந்தது.

                   *   *   *   *   *

***முதியவர்களுக்காக ‘பெரிய’ எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.