பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 14 டிசம்பர், 2023

சபரிமலைக் கோயில் பிரச்சினை தீர ஆகச் சிறந்த ஒரே வழி!!!

‘சபரிமலைக்குப் பல்வேறு மாநிலங்களிருந்தும் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் வந்து குவிகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த இயலாமல் விழிபிதுங்கி நிற்கிறது கேரள அரசு என்பது அனைத்து ஊடகங்ளிலும் வெளியான செய்தி.

இப்பிரச்சினைக்குக் கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டால், எளிதில் தீர்வு காணலாம் என்பது நம் நம்பிக்கை.

வழிகள்:

*“பிரச்சினைகள் தீர அரசு மிகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று கேரள முதலமைச்சரும், அமைச்சர்களும், கோயில் நிர்வாகமும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடலாமே தவிர நடவடிக்கை ஏதும் எடுத்துவிடக் கூடாது.

*18ஆம் படி ஏறுவதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

*வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாம். காத்திருப்போரை அணுகி, “விரைவில் ஐயப்பனைத் தரிசிக்கலாம். பொறுத்திருங்கள். ஆவன செய்கிறோம்” என்பதாகப் பக்தர்களை ஆற்றுப்படுத்துதல் கூடாது.

*பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்பது பக்தர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு. அரசு அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தத் தேவையில்லை.

மேற்கண்ட குறைகள் காரணமாகச் சபரிமலைக்கு வருகைபுரிந்த பக்தர்களில் பலர் சன்னிதானத்திற்குச் செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு திரும்பிச் செல்கிறார்களாம். அதிகாரிகள் அவர்களைக் கண்டும் காணாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆக.....

கேரள அரசு ஓசைப்படாமல் இவ்வகையான தந்திர உத்திகளைக் கையாளுமேயானால்.....

பக்தர்கள் மனம் சலித்துப்போய், செம்மறி ஆடுகள் போல மந்தை மந்தையாய்ச் சபரிமலைக்கு வந்து கூடுவதைத் தவிர்ப்பார்கள் என்பது உறுதி.

ஐயப்பன் தண்டிப்பார், அடுத்துவரும் தேர்தலில் ஐயப்பப் பக்தர்களின் வாக்கு வெகுவாகக் குறையும் என்றெல்லாம் பினராய் விஜயன் அரசு கவலைக்குள்ளாகாமல், வாக்குகளை அள்ளுவதற்கான வேறு வேறு தந்திரோபாயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பது நல்லது.