அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 11 மார்ச், 2024

புண்ணியப் ‘பாரத்’இல் உடலுறுப்புத் தானம் மிகக் குறைவாக இருப்பது ஏன்?!

புண்ணியப் ‘பாரத்’இல்.....

*உறுப்புகள் கிடைக்காததால் ஆண்டுக்கு 500,000 பேர் இறக்கின்றனர்.

*200,000 பேர் கல்லீரல் நோயால் செத்தொழிகிறார்கள்.

*50,000 பேர் இதய நோயால் மரணத்தைத் தழுவுகிறார்கள்

*150,000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள்.

*10,00,000 லட்சம் பேர் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*உலகிலேயே மிகக் குறைந்த உறுப்புத் தான விகிதங்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் உடலுறுப்புத் தான விகிதங்கள் 0.3/மில்லியன் என்று மிகவும் மோசமாக உள்ளது. 

*ஒரு கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு புதிய பெயர் இந்தியாவில் உறுப்புக் காத்திருப்புப் பட்டியலில் இடம்பெறுகிறது.

*அமெரிக்காவில் உறுப்புத் தானம் செய்வோர் எண்ணிக்கை 26/மில்லியனாக உள்ளது.

*உலகிலேயே உறுப்புத்தானம் செய்வதில் ‘ஸ்பெயின்’ முன்னிலை வகிக்கிறது. அங்கு மிகப் பெரும்பாலோர் உறுப்புத்தானம் செய்பவர்களாக இருக்கிறார்கள். இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம், நுரையீரல் போன்ற உறுப்புகள் தானமாக வழங்கப்படுகின்றன. இப்போது கை, தோல் போன்றவையும் தானம் செய்யப்படுகின்றன.

மேற்கண்டது, இணையத் தேடலில் கிடைத்த, உறுப்புத்தானம் குறித்த புள்ளிவிவரம்.


இந்தப் புண்ணிய ‘பாரத்’இல் பிறந்து வாழும் புனித ஆத்மாக்களின் எண்ணிக்கை கோடி கோடியாக இருந்தும் உடலுறுப்புத் தேவைப்படுவோருக்குத் தானம் செய்வதில்[உடம்பிலிருந்து உயிர் பிரிந்த பின்னர், அல்லது. மூளைச்சாவு நேர்ந்த பிறகு] மிக மிகப் பின்தங்கியிருப்பதற்கான காரணங்கள் மிகப் பல.


கீழ்க்காணும் நம்பிக்கைகள் அவற்றில் சில.

1.ஞானிகளாகவும் மகான்களாகவும் வாழ்பவர்கள் மகாசமாதி ஆகிறார்கள். அவர்களின் உடல் அழிவதில்லை[அடியேனுக்கும் மகான் ஆவது நீண்ட நெடுங்கால ஆசை. ஹி... ஹி... ஹி!!!]. அவர்களின் ஆன்மா அவர்களின் உயிரற்ற உடம்பைச் சுற்றிச் சுற்றிக் காவல் காத்துக்கொண்டிருக்கும்[நம் சத்தியக் குரு அவர்களின் மனைவி மகாசமாதி ஆனதும், அதை அவர் நெருப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்கியதும் நினைவுக்கு வருகின்றன].

2.நமக்குப் பல பிறவிகள் உண்டு. ஓர் உறுப்பைத் தானம் செய்தால், அடுத்தப் பிறவியில் அந்த உறுப்பே[குஞ்சி உட்பட! இதைத் தானம் செய்யும் காலமும் வரும். ஹி... ஹி... ஹி!!!] இல்லாமல்தான் பிறப்போம்.

3.இறுதிச் சடங்குகள் செய்து நாம் செய்த பாவங்கள் கழுவப்படாவிட்டால், நரகம் போவோம்.

4.அழிவில்லாத உடம்புடன் வீடுபேறு எய்திய புண்ணியமூர்த்திகள் வாழ்ந்த நாடு இது[சரயு நதியில் கரைந்து, உடம்பு அழியாமல் அருவமாகி வைகுண்டம் போனார் ராமச்சந்திர மூர்த்தி. பஞ்ச பாண்டவர்கள் உயிருடன் நடந்தே[தம்பிகள் நால்வரும் வழியிலேயே இறப்பைத் தழுவ, தர்மர் மட்டும் அழியாத உடம்புடன் வைகுண்டம் போய்ச் சேர்ந்தார். அவரை ஆரத் தழுவி வரவேற்றார் விஷ்ணு பகவான்].

இப்படியான புராணப் புளுகுகளை நம்புவோர் இங்கு ஏராளம். இன்றளவும் அந்த நம்பிக்கை சிறிதும் குறையவில்லை.

இவ்வாறான, கிஞ்சித்தும் சிதைவடையாத மூடநம்பிக்கைகள்தான் உறுப்புத்தானம் செய்வதற்குத் தடையாக உள்ளன.

இந்த மூடநம்பிக்கைகளை, ஆட்சிபீடத்தில் உள்ளவர்கள், தங்களைக் கடவுள் அவதாரங்களாகப் பீத்திக்கொள்ளும் கோடீஸ்வரச் சாமியார்களின் பக்கப்பலத்துடன் பாதுகாத்துவருகிறார்கள்.

ஏற்கனவே, உலக அளவில் கோயில்கள் அதிகமாக உள்ள இந்த நாட்டில் உறுப்புத்தான மையங்களை உருவாக்குவதற்குப் பதிலாகக் கற்பனை செய்யப்பட்ட கடவுள்களுக்கெல்லாம் மில்லியன் கணக்கில் செலவிட்டுப் பிரமாண்டக் கோயில்கள் கட்டுகிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், புராண இதிகாசக் கதைகளில் ஆறறிவு ஜீவிகளாகப் படைக்கப்பட்ட குரங்கு, அணில், ஜடாயு போன்ற கற்பனைப் பாத்திரங்களுக்கும் பில்லியன் கணக்கில் செலவு செய்து கோயில்கள் கட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.