செவ்வாய், 21 மே, 2024

விபச்சாரத்தின் வேர்களும் விழுதுகளும்!!!

சென்னையில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதை ரகசியத் தகவல் மூலம் அறிந்த காவல்துறை அங்கு சென்று சோதனையிட்டு, சிறுமிகளையும் அப்பாவிப் பெண்களையும் வைத்து விபச்சாரத் தொழில் நடத்திய புரோக்கரைக் கைது செய்தார்கள் என்பது ஓர் ஊடகச் செய்தியின் உள்ளடக்கம் ஆகும்.

இதில் கவனிக்கத்தக்கது ரகசியத் தகவல் கிடைத்துக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள் என்பது.

பெரும்பாலும், மாமூல் பெற்றுக்கொண்டு இந்தத் தொழில் அமோகமாக நடக்க உடந்தையாக இருப்பதே காவல்துறைதான் என்பது பலரும் அறிந்ததே.

இவர்கள் கைது செய்த பிரோக்கர் மாமூல் தராமல் இருந்திருப்பார்; அல்லது, மாமூல் தொகையைப் போலீசார் உயர்த்தியிருப்பார்கள்: அல்லது, விடுதி பற்றி அண்டை அயலில் வசிக்கும் மக்களிடமிருந்து சென்ற ஏராளப் புகார்கள் காரணமாக, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கலாம்; அல்லது, மாதந்தோறும் சில வழக்குகளையேனும் பதிவு செய்தல் என்னும் கட்டாயச் சடங்கை நிறைவேற்றுவதற்காக இருக்கலாம்.

இப்படிப் பல காரணங்கள் இருக்கையில், ரகசியத் தகவலின் பேரில் சோதனை நடத்தினார்கள் என்பது நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.

இந்தச் செய்தியில், ‘அங்கு 17 வயதுச் சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க 70 வயது முதியவர் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ந்தனர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே இந்தக் கிழவனுக்குப் பதிலாக ஒரு குமரன் இருந்திருந்தால், https://tamil.oneindia.comகாரன் இந்த நிகழ்வைச் செய்தியாக வெளியிட்டிருக்கமாட்டான். காரணம், அதில் கவர்ச்சி இருந்திருக்காது; வாசகர் வருகையும் அதிகரித்திருக்காது.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்கிறான் ஊடகக்காரன். இது ஊடக தர்மமாம். என்ன வெங்காய தர்மம்? மாற்றுவதால், கைது செய்யப்பட்டவன் களங்கமற்றவனாக ஆகிவிடுவானா? இந்தப் போலியான தர்ம நெறியைப் பின்பற்றாத ஊடக்காரர்களே இல்லை என்று சொல்லலாம்.

‘17 வயதுச் சிறுமியிடன் 70 வயசுக் கிழவன் உல்லாசம்’ என்பதுதான் இந்தச் செய்தியின் உயிர்நாடி ஆகும்.


70 என்ன, 80. 90களைக் கடந்து 100ஐத் தொட்டவன்கள், நோயாளிகள், குடிகாரன்கள், கல்யாணம் கட்டாதவன்கள், மனைவி இருந்தும் ‘இவள் போதும்’ என்று ஒருபோதும் மனநிறைவு பெறாதவன்கள் என்று விபச்சாரிகளை நாடிச் செல்வோர் நாளும் அதிகரிக்கிறது [விதிவிலக்கானவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது].


இந்த அவல நிலையைமாற்றிட, இத்தொழிலை முற்றிலுமாய் முடக்குவது சாத்தியமா?


சாத்தியமே என்றாலும், முடக்குவதால் வேறு பல தீமைகள் விளையக்கூடும்.


பல ஆண்டுகளுக்கு முன்பு, “காவல்துறை நினத்தால், மும்பையில் விபச்சாரத்தை முற்றுலுமாய்த் தடை செய்ய முடியாதா” என்று ஊடகக்காரர் கேட்ட கேள்விக்கு, “தடை செய்யலாம்தான். அப்புறம், குடும்பப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாது” என்று  காவல்துறை உயர் அதிகாரியொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.


இந்நிலையில், உரிய முறையில் கட்டுப்பாடுகள் விதித்து, குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் இந்தத் தொழிலை நடத்த அரசு அனுமதி வழங்குவது ஏற்புடையதாகும்.


எவ்வகையிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோ, கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாத விடுதி உரிமையாளர்களை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டுகொள்ளாமல் இருப்பதோ, அல்லது அவர்களுக்கு உடந்தையாக இருப்பதோ எதிர்பார்க்கும் பலன்களைத் தராது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.



                                   *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/woman-arrested-for-using-minor-girls-and-innocent-girls-for-prostitution-in-chennai-607425.html