எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 12 செப்டம்பர், 2024

அவன் சொன்னான், “நீ வேசி”... அவள் கேட்டாள், “நீ.....”[உண்மைக் கதை]

‘அவள்’ தனக்குத் துரோகம் செய்கிறாள் என்று ‘அவன்’ நம்பினான்.

அவன் தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவள் சொன்னாள்.

இது தொடர்பாக அடைக்கடி வாக்குவாதம் செய்தாலும் இருவரும் தத்தம் நிலையில் உறுதியாக இருந்தார்கள்.


ஒரு கட்டத்தில்…..


“ஆயிரம் கோயில்களில் நான் சத்தியம் பண்ணுவேன். நீ வேசி.” -அவன்.


“நான் வேசிதான். என்னை என்ன பண்ணுவே?” -ஆவேசக் கூச்சல் எழுப்பினாள் அவள்.


“துண்டு துண்டா வெட்டிப்போடுவேன். நமக்கு இருக்கிற ஒரே பொண்ணு அனாதை ஆயிடுமேன்னு யோசிக்கிறேன்” -அவன் முணுமுணுத்து அமைதி காத்தான்.


விவாதம் பிறிதொரு நாளில்  தொடர்ந்தபோது…..

“நீ திருந்துவேன்னு நினைச்சேன், திருந்தல. இப்பவும் நீ வேசிதான்” என்றான் அவன்.

“ஆமாடா, நான் இப்போ மட்டுமல்ல, எப்பவும்  வேசிதான். நீ சரியான ஆண்பிள்ளையா இருந்தா நான் ஏன் வேசித்தனம் பண்ணுறேன்?” என்று எகத்தாளம் தொனிக்கக் கேட்டு, நக்கலாகச் சிரித்தாள் அவள்.


அவள் கேள்வியில் நியாயம் இருப்பதாக அவனின் உள்மனம் நினைத்தது. ஆனால், அது குறித்து ஆராயவிடாமல் அவனின் தன்மானம்[“சரியான ஆண்பிள்ளையாக இருந்தால்…”] தடுத்தது.


அன்று இரவே அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவனால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டாள்.


அவனுக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ கிடைக்கலாம்.


போதிய பாதுகாப்புடன் வாழும் பெண் பிள்ளைகளையே கடத்தி வன்புணர்ந்து சீரழிக்கும் கயவர்களும் காலிகளும் நடமாடும் உலகில், இனி நிராதரவான இவர்களின் பெட்டைக்  குழந்தையின் கதி?


ஒட்டுமொத்த உலகமும் கேட்கவேண்டிய கேள்வி இது. கேட்டால்…..


காலப்போக்கில் விடைகள் கிடைக்கப்பெறலாம்.