சனி, 14 ஜூன், 2025

அளப்பரிய துயரமும் மனப் பயிற்சியும் கடவுள் துதியும்!!!

வாழ்க்கை என்பது வெகு அற்பமான ஆயுளைக் கொண்டது.

இன்பமும் துன்பமும்[இதுவே அதிகம் என்பது மறுக்க இயலாத உண்மை] இரண்டறக் கலந்தது.

இன்பங்கள் துய்த்து மகிழ்வுடன் வாழ்ந்தால்தான் மன நலத்துடன் உடல்நலமும் வாய்க்கும். இதுவே இயற்கை நெறி.

இயன்றவரை மகிழ்வுடன் வாழ்வதற்கு, பெருமளவில் தாக்குகிற துன்பங்களைத் தாங்கும் மனப் பக்குவம் தேவை.

அந்தப் பக்குவத்தை உரிய பயிற்சி[வாழும் முறைகளையும், இயற்கை நெறிகளைப் புறக்கணிப்பதால் விளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து தெளிதல்]யால் மட்டுமே பெற்றிட முடியும். 

ஓய்வு வாய்க்கும்போதெல்லாம் இந்தவொரு பயிற்சியை மேற்கொள்ளுதல் அவசியம். இதை அலட்சியப்படுத்தி, கோயில் கோயிலாக அலைவதாலும், துயரங்களைப் பட்டியலிட்டுக் கண்ட கண்ட கடவுள்களிடம் அழுது புலம்புவதாலும் மனம் பலவீனப்படுமே அல்லாமல், அது பக்குவம் அடையாது.

சிந்திப்பீர்! மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவீர்!!
                                      
                                      *   *   *   *   *
***எவ்வளவுதான் பயிற்சி மூலம் மனதைப் பக்குவப்படுத்தினாலும் துன்பமே இல்லாத வாழ்க்கை சாதியமில்லை என்பது அறிந்துணரத்தக்கது. கடவுளை வழிபடுவதாலும் பயன் இல்லை.

அன்றிலிருந்து இன்றுவரை, மனிதர்கள் கடவுளை நம்பி வழிபட்டதால் இந்த இனம் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு குறையவே இல்லை; அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இதில் மதங்களின் பங்களிப்பு மிக அதிகம்.