எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

நீதிபதிகள் நீதிதேவனால்[இருந்தால்] அனுப்பப்பட்டவர்கள் அல்ல!!!

தமிழ்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் சட்டப் புத்தகங்களைப் படித்து, அவற்றில் இடம்பெற்றுள்ள சட்ட விதிகளைப் பின்பற்றி, வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறாரோ அல்லவோ, பகவத்கீதை போன்ற புராணப் புளுகுகளை[கிருஷ்ணன் கடவுள் அவதாரமாம். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவினாராம். அருச்சுனனுக்கு உபதேசம் பண்ணினாராம். அது கீதையாம். இவற்றிற்கெல்லாம் அறிவியல் ஆதாரம் தந்தவன் எவனும் இல்லை]ப் படித்துத் தேர்ச்சி பெற்று, அவற்றை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பு வழங்கும் அதிசயம் இங்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு வழக்கு குறித்த அவரின் தீர்ப்பு:*

*'பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி[பாரத நகரிகம் என்று ஒன்று உள்ளதா? அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?]. அது ஒரு நீதிநெறிப் புத்தகம்'[இது தீர்ப்பு].

மக்களாட்சி நடைபெறும் நாடு இது. இதை நிர்வகிப்பதற்கென்று, மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களை ஆதாரமாகக் கொண்டுதான், தொடுக்கப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குதல் வேண்டும். சட்ட விதிகளைப் புறந்தள்ளி, வானளாவிய அதிகாரங்கள் தனக்கு இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, நீதித் துறைக்குச் சம்பந்தமே இல்லாத புராணக் கதைத் தொகுப்பு நூலை மேற்கோள் காட்டித் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் ‘அந்த’ நீதிபதி.

‘இங்குள்ள நீதிபதிகளும் மனிதர்கள்தான்; நீதிதேவனால்[இருந்தால்] இங்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல’ என்பது சம்பந்தப்பட்ட நீதிபதி[களு]க்குத் தெரியும்; மக்களுக்குத் தெரிந்திருப்பது மிக அவசியம்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/teaching-bhagavad-gita-does-not-make-a-trust-religious-not-ground-to-deny-fcra-registration-madras-high-court/4110749