இளங்கோ பக்கா ஆத்திகன். சுந்தரம் சுத்த நாத்திகன். இருப்பினும் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள்.
ஊரின்[சிறு நகரம்] வேறு வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றாலும், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து அளவளாவுவது வழக்கம், அந்தரங்க ரகசியங்களைப் பகிர்வது உட்பட.
அன்று ஞாயிற்றுக் கிழமை. இளங்கோவைப் பார்க்க அவனின் வீடு தேடிப் போனான் சுந்தரம். அவன் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொன்னாள் அவனின் புதுப் பெண்டாட்டி.
“நான் வந்துட்டுப்போனதாச் சொல்லுங்க” என்று சொல்லி நகர்ந்தான் சுந்தரம்.
வழியில் எதிர்பாராத விதமாக இளங்கோ எதிர்ப்பட்டான்.
”நீ கோயிலுக்குப் போயிருக்கிறதா உன் பெண்டாட்டி சொன்னாள். உன் நெத்தியில் திருநீறு இல்ல. பொய் சொல்லிட்டு எங்கடா போனே?”
மெலிதான அதிர்ச்சிக்கு உள்ளான இளங்கோ, “வயாகரா வாங்கப் போனேன். இது விசயம் பெண்டாட்டிக்குத் தெரியக்கூடாது. அதனாலதான் பொய் சொன்னேன்” என்றான்.சற்றே யோசித்த சுந்தரம், “சாமிகிட்டே வேண்டுதல் வைக்கத்தான் நீங்கெல்லாம் கோயிலுக்குப் போறீங்க. இது விசயத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கக் கருணை காட்டு பகவானேன்னு அதுகிட்டே வேண்டுதல் வையுங்கடா. எதுக்கு வயாகரா நயாகரான்னு வீண் செலவெல்லாம்” என்று சொல்லிவிட்டு நண்பனின் முகபாவனையைக் கவனித்தான்.
கடும் வாக்குவாதத்திற்கு அவன் தயாராவதை அறிந்து, “பொழுது போகலேன்னுதான் உன்னைத் தேடி வந்தேன். அப்புறமா சந்திப்போம்” என்று நகர்ந்தான்.
கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்தபோது, இளங்கோ இவனை முறைத்தவாறே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.