செவ்வாய், 19 நவம்பர், 2013

இன்றும், ‘உடன்கட்டை’ ஏறுவதைப் போற்றும் காஞ்சி காமகோடி பீடம்!!!


இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ?ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் - பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் - புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். 'ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!'என்று பந்துக்கள் கதறிய போது, 'அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்'என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.....

.....தாமாக இப்படி பிராணத்தியாகம் பண்ண முன் வருபவரை ரொம்பவும் மதித்து அப்படிப் பண்ண நம் சாஸ்திரம் அநுமதித்திருக்கிறது. 'பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது'என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு vFg உடன்கட்டை ஏறினாள்;சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.” 


மேற்கண்ட பொன்மொழி, Sri Kanchi Kamakoti Peetham [www.kamakoti.org/tamil/2dk6.1.html] என்னும் வலைத்தளத்தில் வாசித்தது. சற்று முன்னர்வரை இந்த மேற்கோளை உள்ளடக்கிய பதிவு [தெய்வத்தின் குரல்] நீக்கப்படவோ திருத்தப்படவோ இல்லை என்பது அறியத்தக்கது.

பதிவின் எஞ்சிய பகுதியையும் படித்துமுடித்துவிட்டு, காஞ்சி மகானின் அருளுரை குறித்து நான் எழுப்பவிருக்கும் கேள்வி பற்றி நீங்கள் யோசிக்கலாம்.



‘உடன்கட்டை ஏறுதல்’ என்னும் நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்வுகள் குறித்தும் அவை இந்தப் புண்ணிய பூமியில் [இந்தியா] இடம்பெற்ற காலச் சூழ்நிலை குறித்தும் பலரும் அறிந்திருக்கக்கூடும். அது எத்தனை கொடூரமானது என்பதைப் பற்றித் தத்தம் வலைப்பதிவுகளில் சிலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் ஒரே ஒரு பதிவின் சாரத்தை மட்டும் இங்கு தருகிறேன்..........


//“இறந்துபோன அவளது கணவனின் உடல் சிதையில் வைக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டது. அந்த இளம்பெண் 'ராம்... ராம்...’ என்று முணு​முணுத்தபடியே சிதையில் படுத்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவள் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அவள் அலறிக்கொண்டே சிதையில் இருந்து எழுந்து ஓடிவந்தாள். அதை அனுமதிக்க மறுத்த ஒருவர், தடியால் அவளை அடித்து மீண்டும் சிதைக்குள் தள்ளிவிட்டார். அவள் ஓலமிட்டபடியே சிதையை​விட்டுத் தாவி, எரியும் உடலோடு கங்கை நதியை நோக்கி ஓடினாள்.

அதைப் பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது. 'அவளைக் கொல்லுங்கள்... கொல்லுங்கள்...’ என்று உறவினர்கள் கூச்சலிட்டனர். அந்தப் பெண் தீயில் இருந்து விடுபட தண்ணீரில் மூழ்கினாள். இரண்டு பேர் துரத்திச் சென்று அவள்  கூந்தலைப் பற்றி இழுத்து வந்தனர். இதைப் பார்த்த நீதிபதி, அவளை விட்டுவிடச் சொல்லி உத்தரவிட்டார்.  அதை, உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இனி, அவள் மறுபிறவி கொண்டவள். ஆகவே, அவளைக் கட்டாயப்படுத்திச் சாகடிக்க அனுமதிக்க முடியாது. அவளைப் பராமரிக்க வேண்டிய பணி இனிமேல் கம்பெனிக்கு உரியது என்று நீதிபதி அவளை மீட்டுத் தன்னோடு அழைத்துச் சென்றார். பாதி எரிந்த முகத்துடன் சிதையில் இருந்து ஓர் பெண் உயிரோடு தப்பியது, கிராம மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய ஆங்கிலேய நீதிபதிக்கு எதிராகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தப் பெண் சில நாட்களில் வேறு ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்'' என்று, பேனி பார்க்கஸ் தனது குறிப்பில் கூறி இருக்கிறார்.....

.....அந்தக் காலங்களில், கால்நடைகளைப் போலவே பெண்ணும் ஆணுக்கான உடைமைப் பொருள். ஆகவே, கால்நடைகளை யாகத்தில் பலி கொடுப்பதுபோல் பெண்ணையும் பலி கொடுத்து இருக்கிறார்கள். இப்படி உயிரோடு கொல்லப்பட்ட பெண்களுக்கு நினைவுக்கல் வைத்து வழிபடுவார்கள். கொஞ்ச காலத்தில் அவள் 'சதி மாதா’ என்ற சிறுதெய்வமாகிவிடுவாள்.........

..........18-ம் நூற்றாண்டு வரை சதிக்கு ஆதரவாகவே பெரும்பான்மை மக்கள் இருந்தனர். அதை, புனிதச் சடங்காகவே கருதினர். தமிழகத்தில் சோழர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் அதிகமாக இருந்தது பற்றிச் சான்றுகள் கிடைத்துள்ளன..........
                                     
..........இந்தியாவில் ஆண்டுக்கு 8,125 பெண்கள் சதியில் உயிரை இழந்தனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். [‘மழைக் காகிதம்’ -malaikakitham.blogspot.com]


மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடந்த நம் மக்கள் உடன்கட்டை ஏறுதல் சம்பவங்களை எப்படியெல்லாம் ரசித்து மகிழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாகத்[சம்பவத்தின் ஒரு பகுதி மட்டும்] தருகிறேன்..........

//.....ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அனைவரும் சொல்லொணா ஆனந்தம் அடைந்தனர்.

பரபரவென்று காரியங்களைச் செய்தனர்.

தீப்பாயும் விதவை கமலாதேவி அணிய வேண்டிய பட்டும் நூலும் கலந்த மஷ்ரூ என்ற ஆடை வாங்கிவரப்பட்டது. அவளை அலங்கரித்தார்கள். விதவை ஆனபின் அவள் அணியாத ஆபரணங்கள் அவளுக்கு அணிவிக்கப்பட்டன. வீட்டிலிருந்த நகைகள் தவிர இரவல் வாங்கியும் அணிவித்தார்கள்.

செய்தி ஊர் முழுக்கப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது.

கமலாதேவியை ஒரு பல்லக்கில் அமர வைத்து கடவுளின் சிலையைத் தூக்கிச் செல்வது போல மெதுவாக நடந்தனர்.

மேளதாளங்கள் முழங்கின. பஜனை கோஷ்டிகள் பாடிக்கொண்டு வந்தன. பெருத்த ஆரவாரத்துடன் கிராமமே ஊர்வலமாகச் சென்றது. வெள்ளைக்காரன் உடன்கட்டை ஏறுவதற்குத் தடை விதித்திருந்ததால், ஊர்வலம் சுடுகாடு செல்லாமல் ஒரு தோட்டத்தை அடைந்தது.

ஒரு உயரமான மரத்தடியில், கட்டாந்தரையில் வறட்டியை அடுக்கிச் சிதையைத் தயார் செய்தார்கள்.

கமலாதேவியின் உடலில் பூட்டப்பட்டிருந்த நகைகள் கழற்றப்பட்டன.; அவள் சிதையில் படுக்க வைக்கப்பட்டாள்.

அப்போதே அவள் உணர்வுகளற்றுச் சிலை போல் கிடந்தாள்.

அவள் முகத்தையும் வலது கையையும் மட்டுமே வெளியே தெரியும்படி வைத்துவிட்டு, அவளை வறட்டியால் மூடினார்கள்.

அவள் கையில் ஒரு பிடி வைக்கோளைக் கொளுத்திக் கொடுத்தார்கள். அது எரிந்து சாம்பலாய் உதிர்ந்ததும் அவள் தன் வாயைத் திறந்து தன் சிதைக்குத் தீ மூட்டுமாறு கூறினாள்[!!!!!].

அவள் முகத்தை மூடி மண்ணெண்ணையையும் பசு நெய்யையும் சிதையில் ஊற்றித் தீ வைத்தார்கள்.

அங்கே பெருத்த ஆரவாரம் எழுந்தது. மேளதாளங்கள் உரக்க ஒலித்தன [அவளின் அலறல் அமுங்கிப் போகும் வகையில்]. மக்களின் வாழ்த்தொலிகளும் ஏனைய வாத்தியங்களின் ஓசைகளும் விண்ணைப் பிளந்தன.[ஆதார நூல்: ‘கடவுளின் அடிமைகள்’. ஆசிரியர்:  மிஸ் காதரின்மேயோ. தமிழில்: ப.சீனிவாசன். மருதம் பதிப்பகம், 202,கடைவீதி, ஒரத்தநாடு. முதல் பதிப்பு:2000]

இது, மிஸ் காதரின் மேயோவின் இரண்டாவது நூல். 1927 இல் வெளியான அவரின் ‘அன்னை இந்தியா’ என்னும் முதல் நூல் இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.

இதை, ‘ஒரு சாக்கடை மனிதரின் ஆராய்ச்சி’ என்று கண்டித்தார் காந்தி. வேறு பலரும் கண்டித்தார்கள்; எழுதினார்கள்.

ஆனால், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  அவலங்கள் குறித்து விரிவாக எவரும் மறுப்புரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த காங்கிரஸ் தொண்டரான கோவை அ.அய்யாமுத்து அவர்கள், ’இந்நூலில் குறிப்பிடப்பட்டவற்றுள் பெரும்பாலானவை உண்மையே’ எனப் பாராட்டி ‘மேயோ கூற்று மெய்யா பொய்யா?’ என்று நூல் எழுதினார். பெரியாரும் அதைப் பாராட்டியிருக்கிறார்.

மிஸ் காதரின்மேயோ அயல்நாட்டுக்காரர். என்னவோ எழுதிவிட்டுப் போகட்டும்.

தமிழகத்தில் அவதரித்த ஒரு மகாப் பெரியவர், மனித குலம் பெண்ணினத்துக்கு இழைத்த அநீதியை கண்டிக்காமல், “அவாளை அக்கினி பொசுக்கவேயில்லை; ‘புருஷனை ஆலிங்கனம் செய்கிற சுகத்தோட சாகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னதாகச் சொல்கிறாரே!!! 

எனக்குத் தெரியாது என்பதால் கேட்கிறேன்.........

மகானின் இந்தத் திமிர் வாதத்திற்குத் தமிழ் வழங்கும் நல்லுலகம் சரியான பதிலடி கொடுத்ததா? இல்லையெனில், இனியேனும் கொடுக்குமா?

============================================================================