அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 5 பிப்ரவரி, 2014

அனுபவிக்க ஆண்கள்! அழுவதற்குப் பெண்களா?

ஒரு கடவுள், தன் ‘தூதரை’ ஓர் ஆண் வடிவில்தான்[முகம்மது நபி] இந்த மண்ணுலகுக்கு அனுப்பி வைத்தார். இன்னொரு கடவுள், தன் ‘புதல்வரை’ [இயேசு] அதே உருவில்தான் இங்கே பிறப்பித்தார். மற்றுமொரு கடவுள், ஆண் உருவத்தில் பல ‘அவதாரங்கள்’ எடுத்தார். ஆமைகளும்[கூர்மாவதாரம்] பன்றிகளும்[வராக அவதாரம்]கூட கௌரவிக்கப்பட்டன. பெண்ணை மட்டும் எந்தவொரு கடவுளும் கண்டுகொள்ளவில்லை!


//மதங்கள் அனைத்திலும் தலைமைக் கடவுள்கள் ஆண்கள்தான். கடவுள்கள் மட்டுமல்ல, தலைமைப் புரோகிதர்களும்கூட ஆண்களே. விவேகானந்தர் தன் சிகாகோ சொற்பொழிவில், “இந்து மதத்தின் ரிஷிகள் பெண்களாக இருந்தார்கள்” என்று சொல்லியிருக்கிறார் [இதை அவர்தான் நிரூபிக்க வேண்டும்]. அவர் கூறுவதைப் போல் ஆதிகால இந்து ரிஷிகள் பெண்களாக இருந்திருப்பார்களேயானால் இந்து மதத்தின் தலைமைக் கடவுளைப் பெண்ணாக உருவகித்திருப்பார்கள்// -https://groups.google.com/d/msg/truetamil2friends/.../96hRKWDxeDQJ.

மதங்கள் கற்பித்த கடவுளர் உலகிலும் ஆணாதிக்கமே மீதூர்ந்திருப்பதை ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல; எனினும், பெண்ணினத்துக்கு ஆணினம் இழைத்த கொடுமைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மேற்சொன்ன கருத்துகள் தேவை.

நம் மக்களில் பெரும்பாலோர் பின்பற்றுகிற முக்கிய மூன்று மதங்களின், பெண்கள் பற்றிய மதிப்பீட்டை அறிந்துகொள்வதும்கூட  இப்பதிவிற்கான அடிப்படைத் தேவைதான்.

 ‘உங்கள் மனைவியர் உங்களுக்குரிய பண்ணைகள் [விளை நிலம்] ஆவர். உங்கள் பண்ணைக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று சந்ததிகளைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். [அத்தியாயம் 2, பாகம் 2, பிரிவு 223. [மேற்கோள்: ‘மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி, முதல் பதிப்பு: மே, 2008. ஆசிரியர்: இராசேந்திர சோழன்].


‘பெண்கள், எப்போதும் ஆண்களுக்குப் பணி செய்யக் கடமைப்பட்டவர்கள்’ என்கிறது Bible. [Christian Bible: Paul to the Ephesians in the New Testament. "The women shall be servants to their men who are their masters."].

இந்து மதம், பெண்களை ஈனப்பிறவிகள்; திருமணத்திற்கு முன்பே கடவுள்களால் புணரப்பட்டவர்கள்; சுதந்திரமற்றவர்கள் என்கிறது [--பெரியார்]

“இது கடவுளின் கட்டளை” என்பதாக மதங்கள் வாரி இறைத்த பொய்களே, இந்தச் சமுதாயம் காலங்காலமாய்ப் பெண்களை அடிமைகளாய் நடத்துவதற்கு அடித் தளமாய் அமைந்தன எனலாம்.

மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்திலிருந்து, பிற குழுவினர் பெண்களை அபகரிக்க முயன்ற போதெல்லாம் பலசாலிகளான ஆண்களே அவர்களுக்குப் பாதுகாப்பளித்தனர்; எனவே, அவர்களை ஆளவும் செய்தனர்.

ஆறறிவு பெற்று, கடவுள் சிந்தனையும் காலப்போக்கில் மதங்களும் தோன்ற, அவற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆண் வர்க்கம் பெண்களைப் பிறவி அடிமைகளாய் ஆக்கிவிட்டது.

இதன் விளைவாக, இன்றளவும் பெண்ணினத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. குறிப்பாக, பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

இதற்குச் சான்றளிக்கும் அசம்பாவிதங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன என்பது நாம் யாவரும் அறிந்ததே.

மறந்த, அல்லது உங்களில் கணிசமானவர்கள் அறிந்திராத ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தவே இந்தப் பதிவு.

பல ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது இது.

ஏழு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் இறுதியில், ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, நமது சட்டங்களின் ஓட்டை உடைசல்களுக்கும், நீதி வழங்குபவர்கள் உள்ளிட்ட ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்துக்கும் ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது!

‘மதுரா’ என்பவள் பழங்குடி இனத்தைச் சார்ந்த 16 வயது இளம் பெண்.

பருவம் எய்தாத நிலையிலேயே தன் காதலனுடன் ஓடிப் போகத் திட்டமிட்டிருந்தாள் என்று அவளின் சகோதரர்களாலேயே காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறாள்.

அவளை விசாரிப்பதாகச் சொல்லி, சகோதரர்களை வெளியே நிறுத்திவிட்டு அவளைத் தங்கள் காம வெறிக்குப் பலியாக்குகிறார்கள் காவலர்கள்.

அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட, விசாரணை நடத்திய அமர்வு நீதி மன்றம், அவள் ஓடிப்போகத் திட்டமிட்டிருந்ததால் உடலுறவுக்குப்  பழக்கப்பட்டவளாக இருத்தல் வேண்டும். காவலர்களின் செயல்பாடு வன்புணர்ச்சியின் கீழ் வராது என அரியதோர் கண்டுபிடிப்பைச் செய்து குற்றவாளிகளை விடுதலை செய்கிறது!

மேல் முறையீடு செய்யப்படுகிறது. உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது.

குற்றவாளிகள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.

“சம்பவத்தின் போது மதுரா கூச்சல் போட்டுத் தன் எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை. அவள் உடலில் காயங்கள் ஏதுமில்லை. எனவே, அவளின் விருப்பத்தோடுதான் உடலுறவு நிகழ்ந்திருக்க வேண்டும்” என்று சொல்லி காவலர்களை விடுதலை செய்கிறார் நீதிபதி!

‘பெண்களுக்கு எதிரான குற்றவியல் சட்டங்களில் எத்தனையோ ஓட்டை உடைசல்கள் இருப்பது மட்டும் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதற்குக் காரணமாக இல்லை. இன்னும் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து விடுபடாத நீதிபதிகளும் அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையே இது போன்ற வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. இவர்களெல்லாம் திருந்தாதவரை இது போன்ற வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’ என்று இச்சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிற நூலின்[’மிதிபடும் மானுடம்  மீட்பின் மனவலி’, மங்கை பதிப்பகம், வேளச்சேரி, சென்னை. முதல் பதிப்பு: மே, 2008] ஆசிரியரான இராசேந்திர சோழன் சொல்கிறார்.

நானும் இதை வழிமொழிகிறேன்.

*************************************************************************************
முக்கிய குறிப்பு:

‘தங்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, ஆண்களைப் பெண்கள் பழிவாங்குகிறார்கள்’ என்று சொல்லப்படுவதில் உண்மையும் இருக்கலாம் என்ற போதிலும், அதைக் காரணம் காட்டி, தொடரும் ஆணாதிக்கப் போக்கை நியாயப்படுத்த முடியாது.

*************************************************************************************