பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 15 பிப்ரவரி, 2014

இவரா பாரதியாரின் பிரதான குரு?!

‘எச்சில் இலைகளுக்கு நாய்களுடன் சண்டையிடுபவர் குள்ளச்சாமி!!! கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; மண்ணிலே புரள்வார். இவரைக் கண்டால் பெண்கள் அதிகம் மரியாதை செலுத்துவார்கள்! பாயசம் முதலியவை தந்து உபசரிப்பார்கள்!!’

‘இத்தனைக்கும், நாலடி உயரம் கொண்ட குள்ள மனிதர்; கரிய உருவம்; குண்டுச் சட்டியைப் போல் முகம்; அரையில் கந்தல்; தோளில் அழுக்கு மூட்டை. இவர் திக்கித் திக்கிப் பேசுவது போல் வித்தியாசமான ஒலிகளை எழுப்புவார்; அதிகம் பேசுவது கிடையாது; பசிக்கும் போது கிடைத்ததைத் தின்பார்.’

இவர்தான் நம் மகாகவி பாரதியாருக்குப் பிரதான குருவாக விளங்கினாராம்!

பாரதியார் தம் கட்டுரைகள் பலவற்றில் குள்ளச் சாமியாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் [ஆதாரம்: ‘பாரதியாரின் கடிதங்கள், தொகுப்பும் பதிப்பும்:ரா. அ. பத்மநாபன், காலச்சுவடு பதிப்பகம்.ஐந்தாம் பதிப்பு, ஜூலை 2007].

குள்ளச்சாமி, பல அதிசயங்களை நிகழ்த்தியவர் என்கிறார் பாரதியார்.

சாமியைப் பழித்த வேணு முதலிக்கு அவர் ஆறடி உயரமுள்ளவராகக் காட்சி தந்து முதலியை மிரள வைத்தாராம்!

ஒரு கண்ணில் சூரியன் போலவும், ஒரு கண்ணில் சந்திரன் போலவும், ஒரு புறம் பார்த்தால் சிவபிரான் போலவும் இன்னொரு புறம் பார்த்தால் விநாயகர் போலவும் காட்சியளித்து பிரமிக்க வைத்தாராம்!

“என் தொழில் வண்ணான் தொழில்; ஐம்புலன்களாகிய கழுதை மேய்க்கிறேன்; அந்தக்கரணமான துணிகளை வெளுக்கிறேன். நான் புறத்தே சுமக்கிறேன். நீ அகத்தே பெருங்குப்பை சுமக்கிறாய்” என்று பாரதியிடம் சொல்வாராம்.

இவரை மகான் என்றும் அஷ்டமா சித்திகள் பெற்ற பரம யோகி என்றும் புகழ்கிறார் பாரதியார்.

இவற்றையெல்லாம் நம்ப முடியவில்லைதானே?

நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

‘பாரதி அறுபத்தாறு’வில் இத்தகவல்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ‘பாரதியின் கடிதங்கள்’ நூலாசிரியர் ரா.அ. பத்மனாபன் அவர்கள்.

புதுவையிலிருந்த குள்ளச்சாமியைச் சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு புதுவைச் சீடர் [பாரதியின் சீடர்] ஒருவருக்கு 1920இல் பாரதி எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர்.

கடிதத்தில், நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து ஏதும் இல்லையெனினும், பாரதி தன் கைப்பட எழுதிய கடிதத்தைப் படித்த திருப்தியைப் பெறலாம். படியுங்கள்.

#சீமான் கனகராஜாவுக்கு நமஸ்காரம்.

தயவு செய்து இந்தக் கடிதம் கண்டவுடன் குள்ளச்சாமி அவர்களைக் கோவிந்தன் அல்லது வேணு ஸகிதமாக மேலே காட்டிய விலாஸத்தில் எஸ்.துரைசாமி அய்யர், எம்.ஏ., பி.எல்., ஹைகோர்ட் வக்கீல் [Professor of Law College] அவர்களின் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செலவுக்குப் பணம் முதலிய சகல ஸௌகரியங்களும் இங்கே நடக்கும். புதுச்சேரியிலிருந்து இங்கு வர நீ பணம் கொடுதனுப்பு. மிகவும் முக்கியமான கார்யம். உன் கையில் பணம் இல்லாவிட்டால் யாரிடமேனும் வாங்கிக் கொடுத்தனுப்பு. இங்கு வேணு வந்து சேர்ந்தவுடன் உனக்குத் தந்தி மணியார்டர் மூலமாக அந்தத் தொகையை அனுப்பிவிடுகிறோம். மிகவும்.....#

கடிதத்தின் மறுபக்கம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர்.

இதைப் படித்ததிலிருந்து மகாகவி பாரதியார் மீது நான் கொண்டிருந்த பெருமதிப்பில் ஒரு சிறு கரும்புள்ளி விழுந்திருப்பது போல் உணர்கிறேன்.

நீங்கள்?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&