பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இறையன்பு, I.A.S., அவர்களுக்கு ‘இறை வெறுப்பு’ காமக்கிழத்தனின் வேண்டுகோள்!

பிரபல எழுத்தாளர் இறையன்பு அவர்களுக்கு என் அன்பும் வணக்கமும்.

முப்பதுக்கும் மேற்பட்ட தரமான நூல்களைப் படைத்திருப்பதோடு, தமிழில் உள்ள அத்தனை முன்னணிப் பருவ இதழ்களிலும் எழுதியவர்; எழுதிக்கொண்டிருப்பவர் என்ற காரணத்தால், ஆட்சித்துறையின் உயர் அலுவலரான தங்களுக்குப் ‘பிரபல எழுத்தாளர்’ என்று அடைமொழி கொடுத்திருக்கிறேன்.

தாய்மொழியாம் தமிழ் மீது அளவற்ற பற்றும், இன உணர்வும், இளைஞர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும் கொண்ட தங்களை மனப்பூர்வமாய் மதித்துப் போற்றுபவன் நான் என்பதைப் இப்பதிவின் தொடக்கத்திலேயே தங்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம்..........

நான் முன்வைக்கவிருக்கும் ‘வேண்டுகோள்’ தங்களைச் சற்றேனும் மனம் வருந்தச் செய்யும் என்பதே.

தினத்தந்தி நாளிதழின் இணைப்பாய் வெளிவரும் ஞாயிறு மலரில், ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதுகிறீர்கள்.

23.02.2014 ஞாயிறு மலரில், இந்திய மெய்ஞான மரபில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியவராகச் சொல்லப்படும் ‘ஆதிசங்கரர்’ பற்றிக் கட்டுரை படைத்திருக்கிறீர்கள்.

தாங்கள் இறைப்பற்று மிக்கவர். தாங்கள் நம்புகிற இறைவன் பற்றியோ, அவரின் அடியார்கள் பற்றியோ, இறைவனின் அவதாரங்கள் எனப் போற்றப்படும் மகான்கள் பற்றியோ தாங்கள் எழுதுவதை நான் எவ்வகையிலும் ஆட்சேபிக்க முடியாது; கூடாது. அது தங்களுக்குள்ள உரிமை.

ஆயினும், மேற்குறித்த ஆதிசங்கரர் பற்றிய கட்டுரையைப் படித்தபோது எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகளைத் தங்கள் முன் வைப்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

அதில்...........

காசி சென்ற சங்கராச்சாரியார், அங்கிருந்த வித்வான்களையெல்லாம் வாதத்தில் வென்று அத்வைதக் கொள்கையை நிலைநாட்டியதை மிகவும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்.

காசியிலிருந்து மிதிலைக்குச் சென்று, அங்கிருந்த மண்டன மிச்சிரர் என்பாருடன் பல நாட்கள் வாதம் புரிந்து வென்ற கதையையும் அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள்.

பாராட்டுகள்.

வாதத்தில் தோற்ற மண்டன மிச்சிரரின் மனைவி பாரதி, ஆதிசங்கரருடன் வாதம் புரிந்து வெற்றி பெற அவாவுகிறார்.

வாதம் தொடங்குகிறது.

தன் தோல்வியை முன்கூட்டியே உணர்ந்த பாரதி, சங்கரர் சன்னியாசி ஆனதால், காமக்கலை குறித்து விவாதித்தால் அவர் தோற்றுவிடுவார் என நம்பி, தன் விருப்பத்தை வெளியிடுகிறார்.

அதற்கு ஒப்புதல் தந்த சங்கரர், சில நாள் அவகாசம் பெற்று, இறந்துபோன ஓர் அரசனின் உடம்பில் புகுந்து, அவனின் மனைவியுடன் புணர்ச்சி செய்து, காமக்கலையில் தேர்ச்சி பெற்று, வாதத்தில் பாரதியை வென்றதாகக் கதை செல்கிறது.

இறையன்பு அவர்களே, இந்த நிகழ்வை விவரித்து எழுதுகிற போது தங்களின் மனதில் எந்தவித உறுத்தலும் இடம்பெறவில்லையா என்பதே எனக்கு ஏற்பட்ட முதல் சந்தேகம்.

கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பது புராதனக் கதைகளில் மட்டும்தானே சாத்தியம்?

ஆதிசங்கரர் வாழ்விலும் இது நடந்தது என்று அறிவுஜீவியான தங்களால் எப்படி நம்ப முடிந்தது?

இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இம்மாதிரி அபத்தக் கதைகளையெல்லாம் ஆதியோடந்தமாய் எழுதிப் பல லட்சம் வாசகர்களுக்குப் ‘படையல்’ செய்கிறீர்களே, இது ஏன்?

வாசகர்கள் இதையெல்லாம் நம்ப வேண்டும். இதன் மூலம் அவர்களின் பகுத்தறிவு வளர்ச்சி தடைபட வேண்டும் என்று நினைக்கிறீர்களே, இது அடுக்குமா?

மாண்டு போனவனின் சடலத்தில் புகுந்து அவன் மனைவியைப் புணர்ந்தது சன்னியாசியான ஆதிசங்கரரின் கயமைக் குணத்துக்கு எடுத்துக்காட்டு என்பதைத் தாங்கள் உணரத் தவறியது ஏன்?

காமக்கலை குறித்த விவாதத்திற்குப் பதிலாக, ‘கொலை புரியும் கலை’ குறித்து விவாதிக்கப் பாரதி அழைத்திருந்தால், யாரையேனும் கொலை செய்துவிட்டு வந்திருப்பாரா சங்கரர்?

இறையன்பு அவர்களே, எத்தனை உயர்ந்த சிந்தனையாளர் தாங்கள்! ஏனிப்படிச் சறுக்கி விழுந்தீர்கள்?!

எட்டு வயதாகியிருந்த ஆதிசங்கரர் ஒரு குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, அவரின் காலை ஒரு முதலை பற்றிக்கொள்ள, “அம்மா, என் கடைசிக் கட்டத்திலாவது நான் சந்நியாசியாக அருள் புரி” [அந்த நிமிடம் வரை தாயின் அனுமதி கிடைக்கவில்லையாம்] என்று தன் தாயிடம் மன்றாட, அவரும் அனுமதியளிக்க, முதலை சங்கரரை விடுவித்து அகன்றதாகவும் கதை பின்னியிருக்கிறீர்கள்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் இறையன்பு, இவையெல்லாம் நடந்த நிகழ்வுகள் என்று நம்பித்தான் எழுதினீர்களா?

“ஆம்” என்றால், வாசகனின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் தீய செயலை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டினால் அதை எவ்வகையில் மறுத்துரைக்கப் போகிறீர்கள்?

அன்புகொண்டு மறுமொழி தாருங்கள் இறையன்பு.

தங்கள் அன்புள்ள,                                                                                   காமக்கிழத்தன்      


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%