செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

‘ரிக்டர்...ரிக்டர்’னு சொல்றாங்களே, அது என்னங்க?

“பூமி அதிர்ச்சியை அளவிடுகிற ஸ்கேல்தான் ‘ரிக்டர்’. 1935ஆம் ஆண்டு அமெரிக்க ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த கலிபோர்னியா தொழில்நுட்ப மையத்தில் சார்லஸ் எப் ரிக்டர் என்பவர் இதை அறிமுகப்படுத்தினார். அவர் பெயரையே இந்த அளவீட்டுக்கு வெச்சுட்டாங்க.”

“எரிமலை, புயல்மழை எல்லாம் வர்றதைப் பத்தி முன்கூட்டியே சொல்றாங்க. நிலநடுக்கம் பத்தி விஞ்ஞானிகள் க்ளூ தர்றதில்லியே?”

“ஜியாலஜி அமைப்பால் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியாது. விலங்குகள் மட்டும் பூகம்பம் வர்றதை முன்கூட்டியே அறியும் சக்தி உடையவைன்னு ஒரு கருத்து நிலவுது. குறிப்பா, நாய்கள், இது  வர்றதுக்கு முன்னே ரொம்ப அசாதாரண உள்ளுணர்வோட இருக்கும்னு சொல்றாங்க. ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியாலஜிகல் சர்வே’ என்ற அமெரிக்க அமைப்பு இது தொடர்பா ஆராய்ச்சி செய்துட்டிருக்கு.”

“நிலநடுக்கம் எப்படி உருவாகுதுன்னு விளக்கமா சொல்லியிருக்காங்களா?”

“சொல்லியிருக்காங்க. பூமியினுடைய ‘இன்னர்கோர்’னு சொல்லப்படுற உள் பகுதி 7000டிகிரி செண்டிகிரேட்ல கொதிச்சிட்டே இருக்கும். அதாவது, சூரிய மேற்பரப்புச் சூட்டுக்கு இணையானதுன்னு வச்சுக்குங்களேன். இன்னர்கோருக்கு அடுத்து உள்ள அவுட்டர்கோரில் உருகிய நிலையில் உலோகங்கள் கொதிச்சிட்டே இருக்கும். அந்த அவுட்கோரை அமுக்கிக்கொண்டிருப்பது ‘மேன்டில்’. இது, இளஞ்சூட்டில் அவுட்கோர் கலவையைச் சாந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது....புரியுதா?”

“சொல்லுங்க.”

“மேண்டிலில்தான் கதிர்வீச்சு உள்ள யுரேனியம் காணப்படுது. இது, தொடர்ந்து வெப்பத்தை வெளிப்படுத்தி, திரவப்பகுதியை உருவாக்கிகிட்டே இருக்கு. இதுக்கு ‘ஆஸ்தனோஸ்பியர்’னு பேர். இதுக்கப்புறம், மேண்டிலின் கடைசிப் பகுதியாக ‘லித்தோஸ்பியர்’ இருக்கு. இங்குதான் பாறைத் தட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. இந்தத் தட்டுகள் எப்பவும் நகர்ந்துட்டே இருக்கும்.....

.....நகரும்போது ஒன்னோட ஒன்னு உரசவும் செய்யும். நகர்வும் உரசல்களும் அதிகமா இருக்கும் பகுதிகளிலிருந்து வெளிப்படும் சக்தியானது பூமியின் மேற்பரப்பில் எந்த இடம் பலவீனமா இருக்கோ அந்த  இடத்தை ஆட்டுவிக்குது. அதுதான் நிலநடுக்கம். உருகிய நிலையில் உள்ள உலோகக்குழம்பு, மிகவும் பலவீனமா உள்ள இடங்களில் எரிமலையா வெளிப்படுது.”

“அணுகுண்டு சோதனைதான் இந்த நில அதிர்வுக்குக் காரணம்னு ஒரு கருத்து நிலவுதே?”

“அது கருத்துதான். மற்றபடி, நில அதிர்வுக்கு, தவறான புவியியல் அமைப்புதான் காரணம். வண்டல் பூமிகளில் அழுத்தம் அதிகம் இருப்பதால் நிலநடுக்கப் பாதிப்புகளும் அதிகமாக இருக்கும்னு புவியியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க. சொன்னதெல்லாம் புரிஞ்சுதா?”

“ஏதோ கொஞ்சம் புரிஞ்சுது. இப்போதைக்கு இது போதும். இன்னொரு நாள் இன்னும் விளக்கமா சொல்லுங்க.”
****************************************************************************************************************************************************

நன்றி:
ஜெகாதாவின், ‘கதவைத் திறக்கும் விஞ்ஞானக் கதைகள்’. ஸ்ரீ விக்னேஷ் பதிப்பகம், சென்னை-14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக