வெள்ளி, 18 டிசம்பர், 2015

தமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்!


கேள்விகள், தொடர்புடையவர்களுக்குப் புரிந்தால் போதும். பதில்கள் அவசியமில்லை!
கேள்வி ஒன்று:
பதிவுகள் எழுதித் தமிழுக்குச் சேவை செய்துவரும் பதிவர்களில் கணிசமானவர்களின்[20% ?] ‘வலைப்பக்கத் தலைப்பு’ தமிழில் இல்லை! இவர்கள் தமிழில் எழுதும் பதிவுகளைத் தமிழ் அறிந்தவர்கள்தானே வாசிக்கிறார்கள். அப்புறம் எதற்கு ஆங்கிலத்தில் தலைப்பு?

இரண்டு:
கணிசமான பதிவர்களின் பெயர்களும்[45% ?!!!] ஆங்கிலத்தில்தான் உள்ளன. அறிவுஜீவிகளான பதிவர்களையும் ஆங்கில மோகம் ஆட்டிப்படைக்கிறதா? ‘இதனாலெல்லாம் தமிழ் அழிந்துவிடாது; அதன் பெருமை நலிந்துவிடாது’ என்று நினைத்துத் தமிழை அலட்சியப்படுத்துகிறார்களா? உண்மை நிலை என்ன?

மூன்று:
பதிவு எழுதி முடித்த பின்னர், ஓரிரு முறையேனும் அதைத் திரும்ப வாசித்துப் பிழை நீக்குதல் அவசியம்[பலமுறை முயன்றாலும் அனைத்துப் பிழைகளையும் நீக்குவது என்பது சாத்தியம் இல்லாமல் போகலாம்]. பதிவர்களில் சிலருக்கு அப்படியொரு பழக்கமே இருப்பதாகத் தெரியவில்லை. இதனாலெல்லாம் தமிழின் கட்டமைப்பு சீர்குலைந்துவிடாது என்று அவர்கள் எண்ணுகிறார்களா?

நான்கு:
சற்றே முயன்றால் தமிழாக்கம் செய்துவிடக்கூடிய ஆங்கிலச் சொற்களைக்கூட, தமிழ் எழுத்துகளில் எழுதுகிறார்கள்[நானும் விதிவிலக்கல்லேன். வாசகரைக் கவரவும், எளிதாகப் பொருள் புரியவும் எப்போதாவது இத்தவற்றைச் செய்வதுண்டு. எ-டு: ‘சென்னை வெள்ளமும் செக்ஸ் தொழிலாளர்களின் நல்ல உள்ளமும்’]; காரணம், இயலாமையா, சோம்பல் குணமா?

ஐந்து:
தேடுபொறிகளிலும் சமூக வலைத்ததளங்களிலும் தமிழும் ஒரு பயன்பாட்டு மொழியாக அறிந்தேற்புச் செய்யப்பட்டுள்ளதோடு, அவை பெருமளவு தமிழிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  தமிழைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்காவிடின், எதிர்காலத்தில் அது நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதைப் அனைத்துப் பதிவர்களும் அறிவார்கள். எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் தமிழுக்கு முன்னுரிமை தருகிறார்களா நம் பதிவர்கள்?


என் தளத்திலிருந்து..........

எல்லா Google சேவைகளுக்கும் ஒரே Google கணக்கு
============================================================================================================



தங்களின் வருகைக்கு நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக