செவ்வாய், 3 மே, 2016

ஐயோ பாவம் ஐயப்பசாமி!!!

ஐயப்பசாமி பிரமச்சாரியாம். அழகிகளைப் பார்த்தால் காமம் வரும் என்று மரங்கள் அடர்ந்த மலை உச்சியில் போய் ஒளிந்துகொண்டாராம்! பிரமச்சரியம் காக்கும் பக்தர்கள் எங்கே போய் ஒளிவார்கள்?!?!
கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோவிலுக்குள்       பெண்களை [10 முதல் 50 வயது] அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளமை யாவரும் அறிந்ததே.

‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி சபரிமலைக் கோயிலில் ஆண் பெண் பாகுபாடு கூடாது’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில்.....

‘ஐயப்பன் ஒரு பிரமச்சாரி. தன் பிரமச்சரியத்திற்குப் பங்கம் நேரக் கூடாது என்று வனப்பகுதியில் மலை உச்சியில் அமர்ந்துள்ளார். கோயிலுக்குப் பெண்கள் வருவதை அவர் விரும்பவில்லை’ என்று கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்’[காலைக்கதிர், 03.05.2016] என்பது செய்தி.

“கடவுளுக்கும் காமம் வருமா? அதைக் கட்டுப்படுத்துவது ஆனானப்பட்ட கடவுளுக்கே சாத்தியம் இல்லையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினால்.....

“ஆமாம். ஐயப்பனென்ன, அவருக்கு அப்பனான சிவபெருமானையே பெண்ணாசை ஆட்டிப்படைத்திருக்கிறது” என்று சொல்லி, மோகினி வடிவெடுத்த ஆண் கடவுளான விஷ்ணுவை அவர் புணர்ந்ததால் ஐயப்பன் அவதரித்த கதை, அவர் குந்தவைத்து இரு கால்களையும் இறுகக் கட்டிவைத்திருக்கும் கதை, தேவர்களின் குருவான வியாழபகவான் இட்ட சாபத்தால் சிவலிங்கம்[சிவ லிங்கம்] தோன்றிய கதை, சிவபெருமான் பேரழகி வடிவம் கொண்டு முழு நிர்வாணமாய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கு அடக்கிய கதை என்றிவற்றையும் இவை  போன்ற பிற ‘உன்னதமான’ கதைகளையும் நீதிபதிகளிடம் எடுத்தியம்புங்கள். ஊடகங்கள் வழியாக ஒட்டுமொத்த மனிதகுலமும் இவற்றை அறிந்து இன்புறட்டும். ஐயப்பன் புகழ் பரவட்டும்.

“ஐயப்பன், பெண்கள் வருவதை விரும்பவில்லை என்கிறீர்கள். அவர் அப்படி எப்போது சொன்னார்? யாரிடம் சொன்னார்?” என்றெல்லாம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டுக் குடைந்தால், “தனிப்பட்ட முறையில் யாரிடமும் சொல்லவில்லை; அசரீரியாகச் சொன்னார். அது அண்டவெளியெங்கும்  எதிரொலித்தது. ஞானிகள் எழுதி வைத்தார்கள்” என்று சொல்லிவிடலாம்.

தேவைப்பட்டால், ‘அண்டசராசரம்...வேதம்... பூதம்...கடவுள்...அசரீரி...’ என்று கண்ட கண்ட கப்சாக் கதைகளை அள்ளிவிடலாம். அதற்கப்புறம் நீதிபதிகள் கேள்வி கேட்கமாட்டார்கள்; ‘இது கடவுள் சமாச்சாரம். நமக்கெதற்கு வம்பு’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிடக்கூடும்.

ஆக, வாலிபப் பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குள் நுழைவது இனியும் சாத்தியப்படாதென்றால், ஐயப்பன் எந்தவித இடையூறுமின்றித் தன் பிரமச்சரிய வாழ்வைத் தொடர்வார்; வருகைபுரிவோருக்கு அருள்பாலிப்பார்.

வாழ்க...வளர்க ஐயப்பசாமி புகழ்!
**********************************************************************************************************








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக